``அதிமுக-வில் இணைந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.!" - காளியம்மாள் பேட்டி
ஈரான் விவகாரம்: `பிரதமர் தன் நண்பர்களை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை' - விமர்சிக்கும் காங்கிரஸ்!
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படும் அண்டை நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் ராணுவ முகாம்கள், எண்ணெய் தொழிற்சாலைகள், விமான நிலையங்கள் என முக்கியமானவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதைக் கண்டித்து ஐநா சபை பாதுகாப்பு கவுன்சில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு இந்தியா உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் வெளிநடப்பு செய்திருக்கின்றன.

இந்த நிலையில், அணிசேரா நாடுகளின் பட்டியலில் இருந்த இந்தியா அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுகிறது என குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்படுகின்றன.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், எம்.பி-யுமான ப.சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒரு தலைப் பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்று ஐ நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் நாட்டைக் கண்டனம் செய்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்தது.
ஆனால் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து நடத்தும் போரையும் 1300 ஈரான் மக்கள் கொல்லப்பட்டதையும் 168 குழந்தைகள் மரணித்ததையும் கண்டித்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் 12 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை. எது விவேகம்? எது ராஜதந்திரம்? எது சாய்மானம் இல்லாத வெளியுறவுக் கொள்கை?" என விமர்சித்திருக்கிறார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில்,``ஈரானின் தலைவரான அயதுல்லா கமேனி, 2026 பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்துப் பிரதமர் மவுனம் காக்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சரும் மவுனமாகவே இருக்கிறார். நாடாளுமன்றத்தில் இதுவரை இரங்கல் குறிப்பு கூட தாக்கல் செய்யப்படவில்லை.
வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களை இந்தியா சரியாகவே கண்டித்துள்ளது. ஆனால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய முதற்கட்டத் தாக்குதல் குறித்து இந்தியா முற்றிலும் அமைதி காக்கிறது. இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கும் 'பிரிக்ஸ் பிளஸ்' (BRICS+) கூட்டமைப்பில் ஈரானும் ஒரு அங்கமாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மே 2024-ல், ஈரானின் அதிபர் இப்ராகிம் ரைசி ஒரு மர்மமான ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டார். அப்போது மோடி அரசு மே 21, 2024 அன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்க உத்தரவிட்டது. நாடாளுமன்றம் கூடியபோது ஜூலை 1, 2024 அன்று இரங்கல் குறிப்பும் வாசிக்கப்பட்டது. இப்போது மட்டும் இந்தத் தயக்கம் ஏன்? ஒரு சமரசமான போக்கைக் கடைபிடிக்கும் பிரதமர், தனது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய 'நண்பர்களை' பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதில் சந்தேகமில்லை." எனக் குறிப்பிட்டுள்ளார்.













