நெல்லை: `மனைவி மீது சந்தேகம்' - தலையைத் துண்டித்து சாலையில் வைத்த கொடூர கணவன்
`ஜாடிக்கேற்ற மூடி… மோடிக்கேற்ற அடிமை!' - எடப்பாடி பழனிசாமியை `அட்டாக்' செய்த உதயநிதி ஸ்டாலின்
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதன்பிறகு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று மாலை கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ``பறவைகளுக்கு அவற்றின் சிறகுகள் சரியாக இருந்தால்தான் உயர உயரப் பறக்க முடியும். அதுபோல சார்பு அணிகள் சிறப்பாக செயல்பட்டால்தான் தாய்க்கழகமான தி.மு.க உயர்வு பெறும். தாய்க்கழகத்தை சார்பு அணிகள் சார்ந்து இருக்கின்றன. ஆனால் தாய்க் கழகம் சார்பு அணிகளைச் சார்ந்து இருக்கிறது என்ற நிலை உருவாகும் வகையில் நீங்கள் உழைக்க வேண்டும்.

சார்பு அணிகளில் உழைத்தவர்களுக்கு தாய்க்கழகத்தில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நம்முடைய தலைவர், தற்போதைய முதலமைச்சர் அவர்கள் கூட இளைஞரணி தந்ததுதான். இப்படி பலர் அமைச்சர்களாக, எம்.எல்.ஏ-க்களாக இருக்கின்றனர்.
அதனால் நீங்கள் சிறப்பாக உழைத்தால் தாய்க்கழகம் அதற்குரிய அங்கீகாரத்தை கண்டிப்பாக வழங்கும். எனவே களப்பணியில் கவனம் இருக்கவேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் கண்டிப்பாக நம் அரசின் திட்டம் இருக்கும். அவர்களை அடையாளம் கண்டு அரசின் சாதனைகளை எடுத்துக் கூறுங்கள்,
பத்து முறை முதல்வராக இருந்த நிதீஷ்குமாரையே, பா.ஜ.க அரசு எம்.பி-யாக்கி விட்டது. அவருக்கே இந்த நிலை என்றால், எடப்பாடி பழனிசாமி எல்லாம் பா.ஜ.க-வுக்கு எம்மாத்திரம் ? ஜாடிக்கேற்ற மூடி என்பதைப்போல, மோடிக்கு ஏற்ற அடிமை பழனிசாமி.
நாம் முரட்டு பக்தர்களையும், தொண்டர்களையும் பார்த்திருப்போம். ஆனால் பழனிசாமி முரட்டு அடிமை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. காவிக்கூட்டம் தமிழகத்தில் காவி சாயம் பூச முயற்சிக்கிறது. ஆனால் தி.மு.க இருக்கும் வரை அதை அவர்களால் செய்ய முடியாது. எதிர்க்கட்சிகளின் தரம் தாழ்ந்த செயலை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள்.

நாம் தேர்தலை எதிர் கொள்ள இன்னும் 40 நாட்கள்தான் உள்ளது. இந்த 40 நாட்களில் நாம் செய்கின்ற பணி, தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான பணி என்று நினைக்க வேண்டும். அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.
அடுத்த 40 நாட்களுக்கு மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து, அவர்களது குறைகளை காது கொடுத்து கேளுங்கள். அது நம் மீது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். மக்கள் நிச்சயம் நமக்குத்தான் வாக்களிப்பார்கள்" என்றார்.













