Youth: " 'அசுரன்' படத்தில நடிக்க கென் வேண்டாம்'னு வெற்றி கிட்ட சொன்னேன், ஏன்னா.!...
புதுச்சேரி: `கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்தால் லைசென்ஸ் ரத்து!’ – மாவட்ட ஆட்சியர் உத்தரவு
வதந்திகளால் பெட்ரோல் பங்குகளில் அசாதாரண சூழல்!
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்று வரும் போரால், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் பல உணவகங்கள் விறகு அடுப்புகளுக்கு மாறி வருகின்றன.
அதேபோல, வணிக எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாட்டால் சில உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.500 வரை விலை ஏறும் என்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வைரலானது. அதை உண்மை என்று நம்பிய மக்கள், முண்டியடித்துக் கொண்டு அன்று இரவே பெட்ரோல் பங்குகளில் குவிந்தனர்.

நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வாகனங்களில் முழுமையாக பெட்ரோல், டீசலை நிரப்பிக் கொண்ட அவர்கள், தண்ணீர் கேன்களிலும் வாங்கிச் சென்றனர். புதுச்சேரி நகரப் பகுதிகளில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் இருக்கும் பெட்ரோல் நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
அதிகப்படியாக 20 லிட்டர் தண்ணீர் கேன்களிலும் பெட்ரோலை நிரப்பிச் சென்றனர். அதேபோல பேருந்துகள், லாரிகள், கார்கள், ஆட்டோக்களும் ஒரே நேரத்தில் குவிந்ததால், பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதங்கள் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது.
`பெட்ரோல், டீசல் 17 நாட்களுக்கு கையிருப்பில் உள்ளது...’
அதனால் கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சட்டம், ஒழுங்கு சீனியர் எஸ்.பி கலைவாணன், குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் முத்து மீனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், `பெட்ரோல் பங்குகளில் வாகனங்களில் மட்டுமே எரிபொருள் நிரப்பப்பட வேண்டும். அதைத் தவிர்த்து கேன்களில் வழங்கக் கூடாது என்று பெட்ரோல் பங்க் நிறுவனங்களுக்கு கடுமையாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும், பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் விற்கப்படுகிறதா என்பதை பெட்ரோலிய நிறுவனங்கள் கண்காணிக்க வேண்டும்.
அரசின் உத்தரவை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். அத்துடன் பொருந்தக் கூடிய அனைத்து சட்ட விதிகளின்படியும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தற்போதைய சூழலில் 17 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பில் இருக்கிறது. அதனால் பொதுமக்கள் வதந்திகளை நம்பி அச்சப்படத் தேவையில்லை. தேவைக்கு அதிகமாக வாங்கி செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.













