கேரளம்: சட்டசபை தேர்தலில் சிட்டிங் எம்.பி-க்களுக்கு சீட் இல்லை கறார் காட்டிய ராக...
கிருஷ்ணகிரி: `நகராட்சியில் ரூ.2 கோடி ஊழல்'- முன்னாள் தலைவர் புகாரால் பரபரப்பு!
"நகராட்சியில் ரூ 2 கோடியே 4 லட்சம் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது, இந்த முறைகேட்டை விசாரிக்க வேண்டும்" என்று முன்னாள் நகராட்சித் தலைவர் எழுப்பியுள்ள புகார் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவராக திமுக-வைச் சேர்ந்த ஃபரிதா நவாப் இருந்து வந்த நிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் அஸ்லம் ஆகியோருடன் ஏற்பட்ட மோதலால் கடந்த ஆண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அதிமுக-வில் இணைந்தார்.
இந்நிலையில் தற்போதைய நகராட்சி துணைத் தலைவர் சாவித்திரி கடலரசு, திமுக நகரச் செயலாளர் அஸ்லம், மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது குற்றம் சாட்டி நகராட்சியில் ஊழல் நடந்துள்ளதாக கலெக்டர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நகராட்சித் தலைவர் ஃபரிதா நவாப், "நான் கிருஷ்ணகிரி 1 வது வார்டு கவுன்சிலராக உள்ளேன். கடந்த 09.02.2026 அன்று நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நடைபெறுவதாக 08.02.2026 அன்று தகவல் தெரிவித்தனர். விதிப்படி கூட்டம் கூட்ட ஒரு வாரத்திற்கு முன்பு அழைப்பு கடிதம் அனுப்ப வேண்டும், ஆனால் ஒரு நாள் முன்னதாகத்தான் தெரிவித்தனர்.

கூட்டத்தில் வைக்கவுள்ள பணிகளுக்கான தீர்மானங்களை இணைத்து அனுப்பியிருந்தனர். 1 முதல் 78 வரையில் இருந்த தீர்மானங்களின் எண்களில் பல ஒன்றுக்கு மேல் இருமுறை, மூன்றுமுறை இடம்பெற்றிருந்தது.
ஊழலுக்கு உதவும் வகையில் பணிக்கான தீர்மான எண்கள் பல இடங்களில் இரண்டு முறை குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஒரே பணிக்கு வெவ்வேறு தொகைகளுடன், ஒரே தீர்மானத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும மாறி மாறி குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் கிருஷ்ணகிரி மக்கள் நகராட்சிக்கு செலுத்தும் வரிப்பணம் ரூ 2 கோடியே 4 லட்சம் முறைகேடாக கையாடல் செய்யப்பட்டுள்ளது.
அதனால், நகராட்சி நிர்வாக இயக்குநர், நகராட்சி ஆணையாளர் கடந்த 9 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது. இது குறித்து விசாரணை நடத்தி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், துணை போனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், நகராட்சிகள் இயக்குநர், மாவட்ட ஆட்சியர், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளேன்" என்றவர்,

தொடர்ந்து பேசும்போது, "நான் நகராட்சித் தலைவராக இருந்தபோதும் இதுபோன்ற தீர்மானங்களில் கையெழுத்திட்டு முறைகேட்டில் ஈடுபட மாவட்டச் செயலாளர் மதியழகன் வலியுறுத்தினார். அதற்கு உடன்படாததால் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார்கள். இப்பொழுது துணைத்தலைவர் மூலம் முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். இந்த ஊழலை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இந்த ஊழல் விவகாரத்தை நீதுமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.










