செய்திகள் :

கும்பகோணம், கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர்: மனித உருவில் வந்த சிவன்... நோய் தீர்க்கும் திருத்தலம்!

post image

சிவவடிவங்களில் நடராஜர் திருமேனி மிகவும் விசேஷமானது. சிவன் அபிஷேகப்பிரியர். அவருக்குத் தினமும் அபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் நடராஜப் பெருமானுக்கோ மார்கழித் திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் என ஆண்டில் 5 நாள்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.

அவற்றில் ஒன்று மாசி சதுர்த்தசி. மாசி மகத்துக்கு முன்புவரும் சதுர்த்தசி நாளில் நடராஜப் பெருமானைத் தரிசித்தாலோ அவருக்கு நிகழும் அபிஷேகங்கள் கண்டாலோ வாழ்வில் சந்தோஷம் பெருகும். செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.

சிவபெருமான் நடராஜராக அருளும் தலங்களில் முக்கியமானது கோனேரிராஜபுரம். கும்பகோணம் - காரைக்கால் பாதையில், எஸ்.புதூர் எனும் ஊருக்கு அருகில் உள்ளது கோனேரிராஜபுரம். இத்தல மூலவர் உமாமகேஸ்வரர்.

துர்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். எமதர்மன் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தைப் போக்க இந்தத் துர்கையை வழிபாடு செய்துள்ளான். ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள்.

நந்திபகவான் இங்கு ஈசனை வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. எனவே பிரதோஷ காலத்தில் இங்கு வழிபாடு செய்தால் பல மடங்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர்
கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர்

இங்குள்ள சிவாலயத்தில் காட்சி தரும் ஸ்ரீநடராஜர் விக்கிரகம் விசேஷமானது. பஞ்சலோகத்தால் ஆன இந்த விக்கிரகத்தின் மார்பில்... மனித உடலில் இருப்பது போன்று ஒரு 'மரு'வையும் முடியையும் காணலாம். இந்த விக்ரகத் திருமேனி உருவான சம்பவம் சிலிர்ப்பூட்டுவது.

சோழ மன்னன் ஒருவரது கனவில் தோன்றிய இறைவன், கோனேரிராஜபுரம் சிவாலயத்தில் நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி பணித்தார்.

சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து அவரிடம், ''கலைநுட்பத்துடன் கூடிய பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை 90 நாள்களுக்குள் வடிக்க வேண்டும். அது, அளவில் பெரிதாகவும் அனைவரும் பாராட்டும்படியும் இருக்க வேண்டும்'' என்று கட்டளையிட்டார் மன்னர்.

சிவ பக்தரான அந்த சிற்பி, இறைவனை வணங்கி, விக்கிரகபணியைத் தொடங்கினார். ஆனால், அது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை விரைவில் புரிந்து கொண்டார். ஒவ்வொரு முறையும் அவர், பஞ்சலோகத்தை உருக்கி, அச்சில் வார்க்கும் போது ஏதேனும் ஒரு குறை தென்படும்; விக்கிரகம் முழுமை அடையாது. சிற்பி எவ்வளவோ முயன்றும், காரணத்தை அறிய முடியவில்லை.

நாள்கள் நகர்ந்தன. பணி எந்த அளவில் உள்ளது என்பதை அறிய சிற்பக்கூடத்துக்கு வந்தார் மன்னன். 'விக்கிரகம் இன்னும் தயாராகவில்லை' என்பதை அறிந்து சினம் கொண்டவர், ''இன்னும் இரண்டு நாள்களில் விக்கிரகம் தயாராகவில்லை எனில், உம் தலை உருளும்'' என்று ஆவேசத்துடன் கிளம்பிச் சென்றார்.

கவலையில் ஆழ்ந்த சிற்பி, 'அம்பலவாணா... இது என்ன சோதனை'' என்று இறைவனையே தியானித்து கண்ணீர் வடித்தார். அவர் அருகில், பெரிய உலைகலன் ஒன்றில் பஞ்சலோகம் கொதித்துக் கொண்டிருந்தது.

கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர் கோயில்
கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர் கோயில்

அப்போது, 'ஐயா' என்ற அழைப்பொலி கேட்டு, வாயிலுக்குச் சோகத்துடன் வந்தார் சிற்பி. அங்கு வயதான சிவனடியார் ஒருவர் நின்றிருந்தார். ''ஐயா, தாகம் உயிர் போகிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாருங்களேன்... சுடுதண்ணீராக இருந்தால் நன்று'' என்றார் சிவனடியார்.

சிற்பிக்கோ எரிச்சல். 'இன்னும் இரண்டு நாள்களில் என் தலை உருளப் போகிறது; இவருக்குச் சுடுதண்ணீர் வேண்டுமாம்' என்று சலித்துக் கொண்டவர், ''உள்ளே, உலைகலனில் கொதிக்கிறது... போய்க் குடியுங்கள்'' என்றபடி வெளியே அமர்ந்து விட்டார்.

சிவனடியார் உள்ளே சென்றார். நன்கு கொதித்துக் கொண்டிருந்த பஞ்சலோகத் திரவத்தைக் குடித்தார். மறுகணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது! ஸ்ரீநடராஜர் விக்கிரகமாகவே உறைந்தார் சிவனடியார்.

அவரைக் காணாது உள்ளே வந்த சிற்பி, விக்கிரகத்தைக் கண்டார். அதன் மார்பில் ஒரு மரு; மருவில் ஒரு முடி! 'என்ன அதிசயம்... சிவனடியார் மார்பில் இருந்தது போன்றே இந்த விக்கிரகத்திலும் மருவும் முடியும் உள்ளனவே... அப்படியானால் வந்தது யார்?' என்று வியந்தவர், எல்லாம் சிவனருள் என்பதை உணர்ந்தார்.

கண்ணீர் மல்க ஆடல்வல்லானை வணங்கிப் பணிந்தார். இந்தச் சம்பவம், மார்கழி மாத திருவாதிரை திருநாளன்று நிகழ்ந்தது என்பர்.

கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர் கோயில்
கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர் கோயில்

இப்படி மனித அடையாளங்கள் உடலில் துலங்கக் காட்சி தரும் பெருமான் இன்றும் கோனேரிராஜபுரத்தில் காட்சி அருள்கிறார். ருத்ராட்ச பந்தலின் கீழ், சுவாமி தெற்கு நோக்கி அருள, இவரைத் தரிசனம் செய்தபடி நால்வர் பெருமக்கள் காட்சி தருகின்றனர். இத்தல நடராஜப் பெருமானுக்கு வீதியுலா இல்லை. நடராஜப்பெருமானுக்கு உரிய மார்கழித் திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் போன்ற நிகழ்வுகள் வெகு விமர்சியாக நடைபெறுகின்றன.

இந்த நடராஜரை வழிபட்டு இந்த ஊரில் இருக்கும் வைத்தியநாதரையும் தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

வேலூர் ஈசன்மலை: ஈ வடிவில் சித்தர்; ஜம்புகேஸ்வரர்; வாரயிறுதி ஆன்மிகப் பயணம் செய்ய ஏற்ற தலம்!

மலைத்தலங்கள் கேளிக்கைகளுக்கானவை மட்டுமல்ல. நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிப்பவை. நமக்கான ஆன்மத் தேடலைத் தொடங்கிவைப்பவை. அதனால்தான் நம் முன்னோர்கள் மலைகளில் இறைவனை பிரதிஷ்டை செய்து வழிப... மேலும் பார்க்க

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன்: தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் திருக்கோயில்!

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் அமைந்திருக்கிறது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். கங்கைக்கு நிகராகச் சொல்லப்படும் அர்ச்சுனா, வைப்பாறு என்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையில் கோயில் கொண்டுள்ளாள் இந்த ... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டம், மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில்: தம்பதி ஒற்றுமை, பிள்ளைவரம் கிடைக்கும்!

வனங்களை ஆள்பவள் அன்னை துர்கை. அவளே வனதுர்கையாகப் பல தலங்களில் காட்சி தருகிறாள். வன வளத்தையும் நில வளத்தையும் பாதுகாப்பவள் அவளே. எங்கு வனம் செழித்துக் காணப்படுகிறதோ அந்தப் பகுதியில் நீர் வளம் நிறைந்திர... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டம் நாதகிரி முருகன்: அகத்தியர் தவம் செய்த குகை; நோய் தீர சப்த கன்னியர் நீராடிய சுனை!

மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியே சித்தர் பூமிதான். அகத்தியர் அங்கே வாசம் செய்து சித்தர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கி சிவத்தொண்டையும் முருக பக்தியையும் அனைவருக்கும் எடுத்துச் சொல்லிவந்தார். எனவேதான் அங்... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில்: மண்ணே பிரசாதம்... நோய் தீரும் அதிசயம்!

முருகப்பெருமான் சித்தர்கள் கொண்டாடிய தெய்வம். பல தலங்களில் அவர்கள் முருகப்பெருமானைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். அப்படி அவர்கள் வழிபட்ட மூர்த்தியைத் தரிசனம் செய்வதும் வழிபடுவதும் நமக்கு மிகுந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில்: மனக்கவலைகள் தீர்க்கும் அம்பிகை தரிசனம்

சித்தர்கள் அம்பிகையை சின்னஞ்சிறு பெண்ணாக, 'ஸ்ரீபாலா' என அழைத்து வழிபடுவர். அம்பிகையை பாலாம்பிகை, வாலாம்பிகை என்னும் திருநாமங்களால் அழைத்தாலே சகலவிதமான சௌபாக்கியங்களும் சேரும். அன்னை பாலாவை வழிபட்டால் ... மேலும் பார்க்க