"நீங்கள் போதைப்பொருளை ஊக்குவிப்பதாக மக்கள் நினைக்க மாட்டார்களா?" - மம்மூட்டியைச்...
கேரளம்: "பாஜக - சிபிஎம் இடையே பரஸ்பர உடன்பாடு" - குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்
கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் தாமதமாக வேட்பாளர்களை அறிவித்திருந்தது காங்கிரஸ். இன்றும், திங்கள் கிழமையும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கால அவசாகம் உள்ளது.
வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாக தாமதமாவதற்குக் காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுதாகரன் மற்றும் அடூர் பிரகாஷ் ஆகியோர் போட்டியிடுவதற்காக தலைமையில் சீட் கேட்டதுதான் காரணம் எனச் சொல்லப்பட்டது. பின்னர் அவர்கள் இருவருக்குமே சீட் வழங்கப்படவில்லை.
இவர்கள் இருவருக்கும் சீட் வழங்காததற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் வி.டி.சதீசன் செய்த சதிதான் காரணம் என்று அக்கட்சிக்குள்ளேயே சர்ச்சை எழுந்தது.
இதற்கிடையே வி.டி.சதீசன் அளித்த பேட்டியில், "கே.சுதாகரன் மற்றும் அடூர் பிரகாஷ் ஆகியோரின் பெயர்களை நீக்குவதால் எனக்கு என்ன லாபம். அவர்களின் பெயரை நீக்கும் அளவுக்கு நான் அவ்வளவு பெரிய தலைவரா? எம்.பி-க்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை.
அது முழுமையாக ஹைகமாண்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அவர்கள் எடுத்த முடிவுதான் நடைமுறைப்படுத்தப்பட்டது. கே.சுதாகரன் போன்ற ஒரு தலைவர் காங்கிரஸின் மிகப்பெரிய சொத்து. அவருக்கும் எனக்கும் அவ்வளவு நெருக்கமான உறவு உண்டு. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களையும், களத்தில் செயல்படுபவர்களையும் தாக்கிப் பேசுவது எதிர்த்தரப்பினரின் வழக்கம்.

இந்தப் பிரச்னைகளை உருவாக்கியது ஊடகங்கள்தான். கடந்த இரண்டு நாள்களாக காங்கிரஸுக்கு எதிராகப் பல செய்திகளைப் பரப்பினார்கள். இப்போது எல்லாம் காணாமல் போய்விட்டது. ஊடகங்களின் அஜெண்டாவைக் கூட சி.பி.எம் மாநிலத் தலைமையகமான ஏ.கே.ஜி சென்டர்தான் தீர்மானிக்கிறது.
காங்கிரஸில் கலவரம் நடப்பதாகச் சித்தரித்து, தேர்தலில் பலனடையப் பார்க்கிறார்கள். இந்தியாவில் மிகவும் விலைவாசி அதிகமான மாநிலம் கேரளமாகும். கடந்த பத்து ஆண்டுகளில் கேரள மக்கள் இடதுசாரி ஆட்சியை வெறுத்துவிட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.
அதிலிருந்து தப்பிப்பதற்காக இல்லாத கதைகளை உருவாக்குகிறார்கள். காங்கிரஸில் சரியான நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும்.

பினராயி விஜயன் முதல்வர் ஆவதற்காக வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு சீட் மறுக்கப்பட்ட வரலாறு கேரளாவுக்குத் தெரியும். தொண்டர்கள் கொதித்தெழுந்த பிறகுதானே அவருக்கு சீட் கொடுத்தார்கள். கேரளாவில் ஆட்சிக்கு வருவதுதான் காங்கிரஸின் ஒரே இலக்கு.
கேரளாவில் சி.பி.எம் - பா.ஜ.க கட்சிகளிடையே திரைமறைவில் தேர்தல் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது உண்மை என்பதை நிரூபிக்க இரு கட்சிகளின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தாலே போதும். சுமார் பத்து இடங்களில் பா.ஜ.க - சி.பி.எம் இடையே பரஸ்பர உடன்பாடு எட்டப்பட்டுள்ளது" என்றார்.














