டெங்கு: ஒரே நாளில் 253 பேருக்கு பாதிப்பு!; தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு!
சீண்டும் பிரவீன்... சீறும் பெருந்தகை! - பிளானும் பின்னணியும்!
"ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக, ஏற்காதவர்களுடன் என்ன கூட்டணி?" எனக் கேட்டு தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் செல்வப் பெருந்தகை வீசியிருக்கும் குண்டு, 'த.வெ.க - காங்கிரஸ் கூட்டணி'க்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது!
இதைத்தொடர்ந்து, செல்வப்பெருந்தகையை 'யார் அவர்?' எனக்கேட்டு பிரவீன் சக்கரவர்த்தி கிண்டல் செய்ய, பதிலுக்கு 'அறிவு ஜீவி' என்று பிரவீனை நக்கல் செய்த பெருந்தகை, 'வடமாநிலத்தில் எங்கள் தலைவர் (மல்லிகார்ஜுன கார்கே) சென்ற பின் அவர் இருந்த மேடையை தண்ணீர் உற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது' என்றும் எக்ஸ் தளத்தில் எகிறியடித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த மோதலின் பின்னணி குறித்துப் பேசுகிற சீனியர் கதர்கள், "தி.மு.க ஆதரவாளரான செல்வப்பெருந்தகை, 'த.வெ.க - காங்கிரஸ் கூட்டணி'யால் கடுப்பிலிருந்தார். இந்த நிலையில், 'பிரதமர் வேட்பாளர் விஜய்' என்ற த.வெ.க தலைவர்களின் கருத்துகள், பெருந்தகை அரசியல் செய்ய வழி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில், ராகுலுக்கு விசுவாசியாக தன்னைக் காட்டிக்கொண்டு பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி வருகிறார். 'த.வெ.க - காங்கிரஸ் கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும். இதன் மூலம் இடைத்தேர்தலில் இந்தக் கூட்டணி தோல்வியடைய வேண்டும்' என்பதுதான் அவரது இலக்கு.
அவரது நோக்கத்தைப் புரிந்துகொண்டதால்தான், கட்சியும் இவ்விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கிறது. ஆனால், ஏற்கெனவே பெருந்தகையின் மீது புழுக்கத்திலிருந்த பிரவீன், பத்திரிகையாளர்களிடம் நேரடியாகவே 'யார் அவர்' எனக்கேட்டு கிண்டல் செய்துவிட்டார். இது பெருந்தகையை மனதளவில் ரொம்பவே காயப்படுத்திவிட்டது. அதனால்தான் பதில் கொடுப்பதாகச் சொல்லி, பிரவீனை அட்டாக் செய்ததோடு, தனக்குத் துணையாக மல்லிகார்ஜூன கார்கே விவகாரத்தையும் உள் நுழைத்திருக்கிறார்.
பெருந்தகைக்கு உண்மையிலேயே காங்கிரஸ் கட்சி மீதோ, தலைவர் ராகுல் மீதோ விசுவாசமில்லை. தி.மு.க ஆதரவாளரான அவர், பதவி பறிக்கப்பட்ட பிறகு 'நேரடியாக தி.மு.க-வில் இணைந்துவிடுவதுதான் நல்லது' என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இந்த சூழலில், அவருக்கான வாய்ப்பை நாமே செய்துகொடுத்துவிட வேண்டாம் என்பதில் கட்சி தெளிவாக இருக்கிறது" என்கின்றனர்.
இவ்விவகாரம் குறித்து செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, "2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே தி.மு.க கூட்டணியை உடைப்பதற்காக வன்மத்துடன் செயல்பட்டு வந்தார் பிரவீன். அவரது பேச்சை கட்சித் தலைமை நம்பியதும் தேர்தலில் தி.மு.க கூட்டணி தோற்றுப்போனதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இப்போதும் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி த.வெ.க-வினர் செய்துவரும் அட்ராசிட்டி குறித்து தமிழக காங்கிரஸில் உள்ள த.வெ.க ஆதரவு தலைவர்கள் பெயரளவுக்குத்தான் எதிர்க்கிறார்கள். அதனால்தான், 'ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறோம்' என த.வெ.க தலைவர்கள் யாரும் இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சிக் கூட்டத்திலேயே கேள்வி எழுப்பினோம். அதற்கு பதிலளித்தவர்கள், '60 ஆண்டுக்காலமாக திராவிட கட்சிகள், தங்கள் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியைப் பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, தலைமைச் செயலகம் பக்கம்கூட நம்மை நெருங்க விடவில்லை. ஒவ்வொரு சிபாரிசுக்கும் நாம்தான் அவர்களது கட்சிப் படியேறி நின்றுகொண்டிருந்தோம். இந்த நிலையில், காங்கிரஸுக்கு கேபினட்டிலேயே இடம் கொடுத்தவர்களை முறைத்துக்கொண்டு கூட்டணியைவிட்டு வெளியேறினால், மாநிலம்தோறும் கட்சியைப் பலப்படுத்த நினைக்கும் ராகுல் காந்தியின் லட்சியத்துக்குத்தான் இழப்பு' என ஏதேதோ நீட்டி முழக்கினார்கள். மாநிலத்தில் கட்சியை வளர்ப்பதற்காக இப்படி சுயமரியாதையை இழந்து, வெட்கங்கெட்ட கூட்டணியை அமைக்க வேண்டுமா என்ன?" என்றனர் குமுறலாக.
இதற்கிடையே, இவ்விவகாரத்தின் பின்னணி குறித்துப் பேசுகிற டெல்லி புள்ளிகள், "மாநிலம்தோறும் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் ராகுல்காந்தியும், கட்சியின் வியூக வகுப்பாளரான சுனிலும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். அந்தவகையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் பங்குபெறுவது அவசியமாக இருக்கிறது. மற்றபடி பிரதமர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சையை எல்லாம் 2029-ல் பார்த்துக்கொள்ளலாம் என்பதுதான் ராகுல் - சுனில் திட்டமாகவும் இருக்கிறது.

மேலும், 'கூட்டணியிலிருந்து விலகி தி.மு.க-வை பகைத்துக்கொண்டதால், இந்தியா கூட்டணிக்கு எதிராக மூன்றாவது அணியைக் கட்டமைத்து நமக்கு கடும் போட்டியை ஏற்படுத்துவார் மு.க.ஸ்டாலின்' என்று ஏற்கெனவே ராகுல்காந்தியிடம் எச்சரித்திருந்தார் சுனில்.
அவர் எச்சரித்திருந்தது போலவே, தற்போது தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே என வரிசையாக வட இந்திய தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ஏற்கெனவே தி.மு.க-வின் வியுக வகுப்பாளராகவும் சுனில் இருந்திருப்பதால், உதயநிதியோடும் அவருக்கு நல்ல நெருக்கம் உண்டு. அந்தவகையில், '2029-ல் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தை முன்வைத்தே விஜய்யை கூட்டணியிலிருந்து கழட்டி விட்டுவிட்டு, தி.மு.க-வுடன் காங்கிரஸை கைகோக்க வைப்பதான' ஒரு திட்டமும் பேசப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில், '2029 நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும், தி.மு.க - த.வெ.க என இரண்டு கட்சிகளின் ஆதரவு அணிகளாகவும் தமிழக காங்கிரஸ் இப்படியே மோதிக்கொண்டிருக்கட்டும். இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து அன்றைய சூழலைப் பொறுத்து தி.மு.க அல்லது த.வெ.க கூட்டணியில் நாம் தேர்தலை சந்திக்கலாம்' என்ற திட்டத்தில் ராகுல்காந்தியும் அமைதி காத்துவருகிறார்" என்கிறார்கள்.















