"டாஸ்மாக்கில் பாட்டலுக்கு 10 ரூபாய் வாங்குவது குறைந்துள்ளது" - அமைச்சர் விக்னேஷ்...
திமுக பொதுச்செயலாளராகிறாரா கனிமொழி? தகவலும் பின்னணியும்!
தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் லண்டன் சென்று திரும்பிய நிலையில், கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள்.
மேலும் வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளர் துரைமுருகனை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க முடிவெடுத்துவிட்டது கட்சித் தலைமை. இச்சூழலில் 'அடுத்த பொதுச்செயலாளர் யார்?' என்ற கேள்வி அறிவாலயத்தை வட்டமடிக்கத் தொடங்கியிருக்கின்றன.

நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், "த.வெ.க ஆட்சியமைத்த நாளிலிருந்து, சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் முதல்வர் விஜய் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு உரிய பதிலடி தர முடியாமல் தடுமாறுகிறது தி.மு.க. ‘கழக ஆட்சியில் தலைவிரித்தாடிய ஊழலை ஒழித்து விட்டோம்’ என த.வெ.க செட் செய்யும் நரேட்டிவ்களை உடைக்க முடியவில்லை.
கட்சி மறுசீரமைப்பு விவகாரங்களை எங்கே தொடங்கி, எங்கே முடிப்பது எனத் தெரியவில்லை. ‘இப்படியோர் இக்கட்டான சூழலிலிருந்து தி.மு.க-வை மீட்டெடுக்க நம் ஒருவரால் மட்டும் முடியாது’ என்ற முடிவுக்கு வந்திருக்கும் உதயநிதி, நிலைமையைப் புரிந்துகொண்டு கனிமொழியை பவர் பாலிட்டிக்ஸில் இணைத்துக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருக்கிறார். ஆகவே அவருக்கு முக்கியப் பொறுப்புகள் கிடைக்கப்போவது நிச்சயம்" என்றனர்.
நம்மிடம் பேசிய தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலர், "பெரியவர் துரைமுருகனைப் போல இல்லாமல் தமிழ்நாடு முழுக்க பயணிக்கும் துடிப்பான ஒரு பொதுச்செயலாளரை நியமிக்க வேண்டும் என நினைக்கிறார் உதயநிதி ஸ்டாலின். சீனியாரிட்டி அடிப்படையில் டி.ஆர் பாலுவை பொதுச்செயலாளராக்கலாம் என்ற குரல் எழுந்தபோது, 'ஏற்கனவே நம்மை முதியோர் கட்சி என விமர்சிக்கிறார்கள், டி.ஆர் பாலுவை நியமித்தால் இளைஞர்களை ஈர்ப்பது மிகக் கடினம்' என வாதம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
எனவே பட்டியல் சமூக பிரதிநிதியாக ஆ.ராசாவை பொதுச்செயலாளராக்குவோம்.. அல்லது பெண்களின் பிரதிநிதியாக கனிமொழி எம்.பியை பொதுச்செயலாளாக்கலாம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியொடு வாய்ப்பு கிடைத்தால் திறம்பட செயலாற்ற கனிமொழி தயாராகவே இருக்கிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்" என்றனர்.

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், "கனிமொழியை பொதுச்செயலாளராக்கினால் பொது சமூகத்தில் பெரும் வரவேற்பு கிடைக்கும். பட்டியல் சமூகத்தைச் சார்ந்த ஆ.ராசாவை பொதுச்செயலாளராக்கினால் ஓபிசி அரசியல் பாதிக்கப்படும் என்பதால் கனிமொழியைத் தேர்வு செய்யவே சீனியர்களும் விரும்புவார்கள். ஆனால், அதிலொரு சிக்கலும் ஒளிந்திருக்கிறது.
ஸ்டாலின் கட்சியின் தலைவர், அவரது மகன் உதயநிதி எதிர்காலத் தலைவர், ஸ்டாலினின் தங்கை பொதுச்செயலாளர் என்கிற வாரிசு அரசியல் விமர்சனம் மேலோங்கும் அபாயமும் இருக்கிறது. கலைஞர் குடும்பத்தைச் சாராமல் இருந்த பொதுச்செயலாளர் பொறுப்பும் குடும்பத்துக்குள் சென்றுவிட்டது என்ற குழப்பம் வரும். அதேசமயம் 'சாகும்வரை நானே பொதுச்செயலாளர்' எனப் பிடிவாதமாக இருக்கிறார் துரைமுருகன். ஆகையால் இறுதி முடிவை எடுக்கப்போவது தி.மு.க தலைவர் ஸ்டாலின்தான்" என்றனர்
பார்ப்போம்!












