தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் சந்திப்பு; `இது குறித்தெல்லாம்தான் பேசினேன்' - த...
தென்மாநில முதல்வர்கள் மாநாடு: அமித் ஷா தலைமையில் கூடும் 5 மாநில முதல்வர்கள் - எதிர்பார்ப்புகள் என்ன?
நாளையும், நாளை மறுநாளும் (ஆகஸ்ட் 19, 20) செங்கல்பட்டு கோவளத்தில் ‘31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு’ நடைபெற உள்ளது.
இது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்க உள்ளது. இதற்காக இரண்டு நாள் பயணமாகத் தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா.
அண்டை மாநிலங்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்த மத்திய அரசால் வழக்கமாக நடத்தப்படும் மாநாடுதான் இது.
செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் உள்ள பிஷர்மேன் கோவ் ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டின் நோக்கம்
‘தென்மாநிலம்’ என்று பெயர் குறிப்பிடுவது போலவே, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகியவற்றின் முதலமைச்சர்களும், உயரதிகாரிகளும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவைப் பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வளப் பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லைப் பிரச்னைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும். முதலமைச்சரான பிறகு, இதுவரை அமித் ஷாவை விஜய் சந்திக்கவே இல்லை.
அமித் ஷா - விஜய் சந்திப்பு
பதவியேற்றப் பின், டெல்லி முதன்முறையாகச் சென்றபோது, அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை விஜய்க்கு.
நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்போம் என்று சுதந்திர தின உரையில் கூறியிருந்தார் விஜய். மத்திய அரசின் இணக்கம் வேண்டுமென்றால், அமித் ஷாவின் பார்வை நிச்சயம் வேண்டும். அந்தப் பார்வையை... அந்த இணக்கத்தை அமித் ஷாவுடனான இந்தச் சந்திப்பு ஏற்படுத்தித் தருமா என்பதைப் பார்க்க வேண்டும்.

கர்நாடகா பிரச்னை
கர்நாடகாவுடன் காவிரி அணைப் பிரச்னை, தமிழர்கள் மூவரைச் சுட்டுக் கொன்றப் பிரச்னை மிகத் தீவிரமாகத் தமிழகம் மற்றும் கர்நாடகா அரசியல் களத்தில் களமாடி வருகிறது. இந்தப் பிரச்னை இந்தக் கூட்டத்தில் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதற்கு அமித் ஷாவின் பதில் என்னவாக இருக்கும் என்பதைத் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பினரும் உற்று நோக்குகிறார்கள்.
காங்கிரஸ் கேரளத்தை ஆளுகிறது. தமிழ்நாட்டில் ஆளும் கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும், விஜய்யும் இணக்கமான உறவில் இருக்கிறார்கள். தெலங்கானாவை ஆளுவதும் காங்கிரஸே.
தென் மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆளும் ஒரே மாநிலம் ஆந்திரா.
ஆக, கலவைகள் இருக்கும் இந்த மாநாட்டில் என்னென்ன நடக்கப்போகிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்!













