Delimitation: "தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’ என ராகுல் கூறியது இவரைத்தானா?"- விஜய...
தொகுதி மறுவரையறை விவகாரம்: `12 நாட்களில் முடிவை மாற்றிய முதல்வர் விஜய்?' - காரணம் என்ன?
தென் மண்டல நிர்வாகக்குழு கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் கோவளத்தில் நடந்திருந்தது. தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசியிருக்கும் முதல்வர் விஜய், 'தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென்னிந்திய மாநிலங்களின் விகிதாச்சாரம் மாறாமல் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட வேண்டும்' எனக் கூறியிருக்கிறார். முதல்வரின் இந்த ஸ்டேட்மெண்ட் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், 'மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது. தொகுதி மறுவரையறையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ சதவீதம் குறையாது என்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டும்' எனக் கூறியிருக்கிறார்.
முதல்வரின் இந்த பேச்சு முன்னுக்கு பின் முரணானதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தொகுதி மறுவரையறை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி தமிழக அனைத்துக்கட்சி எம்.பிக்களின் கூட்டத்தை முதல்வர் நடத்தியிருந்தார்.

திமுக, அதிமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் புறக்கணித்தன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஐ.யூ.எம்.எல், மதிமுக கட்சியின் எம்.பிக்கள் கலந்த இந்தக் கூட்டத்தில் 'தொகுதி மறுவரையறையே செய்யப்பட வேண்டாம். இப்போது இருக்கும் அதே 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையையே தொடரலாம்' என முடிவெடுக்கப்பட்டது.
இதுசம்பந்தமாக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தனி தீர்மானமும் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்தின் போது பேசுகையிலும் 'தொகுதி எண்ணிக்கைகளை மாற்றாமல் அப்படியே 543 என்ற எண்ணிக்கையிலேயே தொடர வேண்டும். இதுவே தமிழகத்தின் ஒருமித்த குரல்' எனப் பேசியிருந்தார். திமுகவே முதல்வர் விஜய்யின் தீர்மானத்தை ஆதரித்தனர்.
இந்நிலையில், அந்த அனைத்துக்கட்சிக் கூட்டம் நடந்த பன்னிரெண்டே நாட்களில் முதல்வர் விஜய் மாற்றி பேசியிருக்கிறார். அப்போது தொகுதி எண்ணிக்கையை மாற்றக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றிய விஜய், இப்போது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ சதவீதம் குறையாது என்பதற்கான உறுதியை கேட்டிருக்கிறார். இதுதான் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது அந்த தீர்மானத்தை அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக எம்.எல்.ஏக்கள் எதிர்த்திருந்தனர். 'உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திலேயே தமிழகத்தின் 7.18% பிரதிநிதித்துவ சதவீதத்துக்கு எந்த ஆபத்தும் இருக்காது என உறுதியளித்திருக்கிறார். அப்படியிருக்க இந்த நேரத்தில் இந்த தீர்மானம் அரசியல் நோக்கத்தில் போடப்படும் தீர்மானமே' எனக் கூறி எதிர்த்தனர்.
தீர்மானத்தை எதிர்த்த அந்த கட்சிகள் குறிப்பிட்ட அதே காரணத்தை அதாவது, 'பிரதிநிதித்துவ சதவீதம் /குறையக்கூடாது' என முதல்வர் பேசியிருக்கிறார். எனில், தொகுதி எண்ணிக்கைகளை மாற்றவே வேண்டாமென சட்டமன்றத்தில் முதல்வர் நிறைவேற்றிய தீர்மானம் என்னவானது என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.!















