ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா; அமெரிக்காவின் 100% வரி பாயுமா? ட்ரம்ப் ஒப்ப...
பாக்-சீனா எல்லை விவகாரம்: “இரு நாடுகளுக்கும் இடையே எல்லை என்று எதுவும் இல்லை” - இந்தியா உறுதி
இந்தியா, பாகிஸ்தான், சீனா இடையே எல்லைப் பிரச்னை விடாது தொடரும் போலும்.
நேற்று பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் ‘பாகிஸ்தான்-சீனக் கூட்டு எல்லை ஆணைய’த்தின் செயல்பாடுகள் தொடங்கியுள்ளது.
இது பாகிஸ்தான்-சீனாவின் எல்லையை நிர்ணயிப்பது, அதன் வழியேயான வணிகம் தொடர்பான விஷயங்களைப் பேசுவது போன்ற பாகிஸ்தான்-சீனா எல்லை குறித்த ஆணையம் ஆகும்.
சீனாவும், பாகிஸ்தானும் புவியியல் ரீதியாக எல்லையைப் பகிர்ந்துகொள்ளவில்லை. சீனாவும், பாகிஸ்தானும் கூறும் எல்லை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் வழியே நீளும் எல்லைகள் ஆகும்.

ஆனால், இந்த எல்லையை இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை. இது தொடர்பாக அந்த இரு நாடுகளும் போட்டுக்கொண்ட ‘சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம், 1963’-யையும் இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில்தான், நேற்று சீனாவும், பாகிஸ்தானும் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளன.
நேற்றைய பாகிஸ்தான், சீனா ஆணையம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
> பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை என்று எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானதும் உறுதியானதும் ஆகும்.
சட்டப்பூர்வமல்லாத இந்தக் கூட்டுக்குழுவை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.
> ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் - முழு யூனியன் பிரதேசங்களும் எப்போதும் இந்தியாவின் பிரிக்க முடியாத, ஒருங்கிணைந்த பகுதிகளாகவே இருந்திருக்கின்றன... இருக்கின்றன... இனியும் இருக்கும்.
தனது சட்டவிரோத மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ள இந்தியப் பகுதிகள் குறித்து எந்தவொரு ஒப்பந்தமும் செய்வதற்கு பாகிஸ்தானுக்கு எந்த உரிமையோ அதிகாரமோ கிடையாது.
> ‘1963-ஆம் ஆண்டின் சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம்’ எனப்படுவதை நாங்கள் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. அது சட்டவிரோதமானது மற்றும் செல்லாதது என்றே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

> இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் வகையில், ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நிலப்பகுதிகளின் நிலையை மாற்றவோ அல்லது இந்தச் சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் உறுதியுடன் எதிர்க்கிறோம் மற்றும் நிராகரிக்கிறோம்.
> இந்தியப் பகுதிகள் தொடர்பாக சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைக் கூட்டுறவு என்ற பெயரில் நடக்கும் எதுவுமே முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் இது அந்தப் பகுதிகளின் மீதான இந்தியாவின் இறையாண்மையில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இதுபோன்ற போலி நாடகங்களை நடத்தாமல், தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள இந்தியப் பகுதிகளை உடனடியாகக் காலி செய்யுமாறு பாகிஸ்தானை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்”.












