50 வயதான NRI-களா? Lumpsum பணத்திற்கு Safety + Growth தரும் ரகசிய 60:40 பார்முலா!
புதுக்கோட்டை: காணாமல் போன 40 பவுன் நகை; காட்டிக் கொடுத்த அடகுக்கடை சி.சி.டி.வி - என்ன நடந்தது?
புதுக்கோட்டை மாவட்டம், கீமங்கலம் காவல் சரகம் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி.
இவர், சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா, 2 குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி கொத்தமங்கலம் பிடாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவிற்குச் சென்று இரவில் வீடு திரும்பி, தான் அணிந்திருந்த தங்க நகைகளை பெட்டியில் வைக்க பெட்டியைத் திறந்திருக்கிறார்.
அப்போது, பெட்டியில் இருந்த சங்கிலிகள், நோடுகள், மோதிரம், நெக்லஸ்கள் எனச் சுமார் 40 பவுன் தங்க நகைகளைக் காணாமல் போய் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அவர், தனது கணவருக்கும், கீரமங்கலம் காவல் நிலைய போலீஸாருக்கும் புகார் கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். தடயவியல் சோதனைகளும் நடந்தது.

அதனை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஆலங்குடி டி.எஸ்.பி மனோகர், தலைமைக் காவலர் புருசோத்தமன் தலைமையில் தலைமை காவலர் கணபதி, போலீஸார்ர் முத்துக்குமார், சின்னச்சாமி ஆகியோர் கொண்ட தனிப்படை நியமித்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சில நாட்கள் தடயங்களைச் சேகரித்த தனிப்படை போலீஸாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கடந்த ஒரு வாரமாக லதா வீட்டை நோட்டடம் பார்த்தது தெரிய வந்தது. அந்த இரு இளைஞர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்த போலீசார் கொத்தமங்கலம், ஆலங்குடி பகுதியில் உள்ள நகைக்கடை, நகை அடகு கடைகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆலங்குடியில் உள்ள ஒரு நகைக்கடையில் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தங்கத் தோடு, சங்கிலியை விற்கச் சென்று தோடுகளை மட்டும் விற்று பணம் வாங்கிச் செல்வது தெரிய வந்தது.
இந்நிலையில், தங்க நகைகளைத் திருடியதாக ரஞ்சித் மற்றும் கலையரசன் என்ற இரு இளைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 40 பவுன் நகைகள் காணாமல் போன வழக்கில் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

















