திருப்பரங்குன்றம் : `நீதிபதி உணர்ச்சிவசப்பட்டுத் தீர்ப்பளிக்கவில்லை.!’ - எஸ்.ஜி....
மகளிர் உரிமைத்தொகை: "நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்?" - அமைச்சர் KKSSR விளக்கம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கத்தை வெள்ளியன்று மாலை சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் 38,263 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்குப் பின் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “மகளிர் எல்லாம் எதிர்பார்த்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2-வது கட்டமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகையை வழங்கி உள்ளார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 17 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 1 லட்சத்து 11 ஆயிரத்து 637 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2-வது கட்டமாக 67,551 மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் பெறப்பட்டு தகுதியுடைய 38,263 பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நமது முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றி நிறைவேற்றியுள்ளார். தாய்மார்கள் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்" என்றார்.
'மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான தகுதிகள் தளர்த்தப்பட்டிருந்த போதிலும் 27,000 பேருக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது ஏன்?" என்ற கேள்விக்கு, "அவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களாக இருக்கலாம். தகுதி உடையவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
முதல் கட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டவர்களுக்கு இருந்த தகுதிகள் தளர்த்தப்பட்டு அதன் அடிப்படையில் இரண்டாவது கட்டம் மகளிர் உரிமைத்தொகை வழங்கியிருக்கிறோம்.
வசதி படைத்தவர்கள் நீக்கப்பட்டு வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு நிறைவாக வழங்கியுள்ளோம்.

"கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்கலாமா?" என்ற கேள்விக்கு, "இதுகுறித்து முதல்வர் முடிவு எடுப்பார்" என்றார்.
நிராகரிக்கப்பட்டவர்கள் குறித்த கேள்விக்கு, "ஆர்.டி.ஓ-விடம் மேல்முறையீடு செய்யலாம். அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது குறித்த விளக்கங்கள் அவர்கள் தெரிவிப்பார்கள்.
எங்களைப் பொறுத்தளவில் பொதுமக்கள் சொல்லக்கூடிய குறைகளைக் கனிவோடு கேட்கக்கூடிய இடத்தில் இருக்கிறோம். குறைகளை நிவர்த்தி செய்வதற்கு என்ன வழியோ அதனைச் செய்கிறோம்" எனக் கூறினார்.



















