செய்திகள் :

மலையை உடைத்த மாமனிதன்; 22 ஆண்டுகள் தனி ஒருவனாக சாதித்த `தசரத் மாஞ்சி’யின் கதை!

post image

`என்னால் இதைச் செய்ய முடியுமா? என்னிடம் எந்த வசதியும் இல்லையே!’ என்ற சந்தேகம் எழும்போதெல்லாம், நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு நிஜ நாயகனின் கதை இது.

காதலுக்காக ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டினார் என்று வரலாற்றில் படித்திருப்போம். ஆனால், தன் மனைவியின் மரணத்திற்குக் காரணமான ஒரு மலையையே தனி ஆளாக உளியால் குடைந்து, பல ஆயிரம் மக்களுக்காக ஒரு பாதையை உருவாக்கிய ஏழை விவசாயத் தொழிலாளி தசரத் மாஞ்சியின் (Dashrath Manjhi) கதை, கற்பனையை விடவும் அசாத்தியமானது.

Dashrath Manjhi
Dashrath Manjhi

பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்திற்கு அருகில் உள்ள கெலூர் என்ற மிகச்சிறிய, மலைகள் சூழ்ந்த கிராமத்தில் 14 ஜனவரி 1934-ம் ஆண்டு மாஞ்சி பிறந்தார்.

வறுமையின் காரணமாக அவருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. தனது சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி, ஜார்கண்ட்டில் உள்ள தன்பாத் நிலக்கரிச் சுரங்கங்களில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றினார். பின்னர் தன் சொந்த கிராமத்திற்கே திரும்பினார்.

மாஞ்சிக்கு பால்குனி தேவி என்பவருடன் திருமணம் நடைபெற்று, அவர்களின் இல்வாழ்க்கையும் சந்தோசமாக இருந்தது. 1959-ம் ஆண்டு, மலையின் மறுபுறம் மரம் வெட்டிக் கொண்டிருந்த மாஞ்சிக்கு மதிய உணவு மற்றும் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக, பால்குனி தேவி மலையின் ஆபத்தான சரிவுகளில் ஏறிச் சென்றார். அப்போது கால் தவறி மலையிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

Manjhi mountain
Manjhi mountain

கெலூர் கிராமத்திற்கும், அருகிலுள்ள வாசிர்கஞ்ச் நகரத்திற்கும் இடையே ஒரு அந்த மலை அரணாக இருந்தது. மக்கள் மருத்துவமனைக்கோ, பள்ளிக்கோ, சந்தைக்கோ செல்ல வேண்டும் என்றால், அந்த மலையைச் சுற்றி சுமார் 55 கிலோமீட்டர் தூரம் கடினமான பாதையில் பயணிக்க வேண்டியிருந்தது. இதனால், சரியான நேரத்திற்கு மருத்துவ உதவி கிடைக்காமல் பால்குனி தேவி மாஞ்சியின் கண்முன்னேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்தக் கணமே, தன் மனைவியின் உயிரைப் பறித்த இந்த மலையினால், இனி தன் கிராமத்தில் யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று மாஞ்சி சபதம் ஏற்றார். அரசாங்கம் சாலை அமைத்துத் தரும் என்று அவர் காத்திருக்கவில்லை. யாரிடமும் பணமோ உதவியோ கேட்கவில்லை.

விஸ்வரூபமாக நின்ற அந்த மலையைப் பார்த்து, தன்னிடம் இருந்த சிறிய உளியைக் கொண்டு அதை உடைக்கத் தொடங்கிய மாஞ்சியை ஊர் மக்கள் `பைத்தியக்காரன்' என்று கேலி செய்தனர். ஆனால் அவரது மனம் தளரவில்லை.

மக்களின் ஏளனப் பேச்சுகளைப் பொருட்படுத்தாமல், சுட்டெரிக்கும் வெயிலிலும், கொட்டும் மழையிலும், உறையும் குளிரிலும் தினமும் விடாமல் மலையைக் குடையத் தொடங்கினார்.

Manjhi with nithish kumar
Manjhi with nithish kumar

தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் (1960 முதல் 1982 வரை) ராட்சச மலையைத் துளைத்து, 360 அடி நீளம் (110 மீட்டர்), 30 அடி அகலம் (9 மீட்டர்) மற்றும் 25 அடி ஆழம் (7.6 மீட்டர்) கொண்ட ஒரு சீரான பாதையைத் தனி ஒருவனாக உருவாக்கினார்.

இந்தப் பாதையின் மூலம் கெலூரில் இருந்து வாசிர்கஞ்ச் செல்வதற்கு இடையேயான 55 கிலோமீட்டர் பயணத் தூரம், வெறும் 15 கிலோமீட்டராக குறைந்தது. இன்று அந்த கிராம மக்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்கிறார்கள்.

பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் இருந்தபோது, மாஞ்சியின் தியாகத்தைக் கௌரவிக்கும் விதமாக அவரைத் தனது முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார். மேலும், அரசாங்கம் வழங்கிய நிலத்தை, தன் கிராமத்தில் மருத்துவமனை கட்டுவதற்காகவே மாஞ்சி அர்ப்பணித்தார்.

தன்னலமற்ற அந்த மாபெரும் மனிதர், 17 ஆகஸ்ட் 2007 அன்று, தனது 73 வயதில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் பித்தப்பை புற்றுநோயால் காலமானார். பீகார் மாநில அரசு அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளைச் செய்து கௌரவித்தது.

இன்று, அவர் உருவாக்கிய அந்தப் பாதை `தசரத் மாஞ்சி சாலை’ என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. கெலூர் கிராமத்தில் அவருக்கு ஒரு நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது.

Manjhi movie
Manjhi movie

இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2015-ல் Manjhi: The Mountain Man என்ற பாலிவுட் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இவரது ஈடு இணையற்ற சேவையைப் போற்றும் விதமாக, இந்திய அரசாங்கம் 2016-ம் ஆண்டு இவருடைய பெயரில் தபால் தலையை வெளியிட்டது.

Manjhi stamp
Manjhi stamp

ஒரு மனிதன் தளராமல் தொடர்ச்சியான முயற்சியுடன் ஒரு இலக்கிற்காக உழைத்தால், தடைகளைத் தாண்டி எதையும் சாதிக்க முடியும் என்பதை தசரத் மாஞ்சியின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

இன்று நாம் சந்திக்கும் பிரச்னைகள் ஒரு மலையைப் போலப் பெரிதாகத் தெரியலாம். ஆனால், விடாமுயற்சி என்ற உளியைக் கொண்டு தினமும் அதைச் செதுக்கத் தொடங்கினால், நமக்கான வெற்றிப் பாதை தானாகவே உருவாகும்!

ஒற்றை மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு - `வனமகன்’ ஜாதவ் பயேங் கதை!

ஒவ்வொரு நாள் தொடங்கும்போது, 'நம்மால் தனியாக என்ன சாதித்துவிட முடியும்?' என்ற சோர்வு வந்தால், நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரே பெயர் ஜாதவ் பயேங் (Jadav Payeng). எவ்விதப் பின்புலமும், பண பலமும், பெரிய தி... மேலும் பார்க்க

Twitter: உலகின் முதல் ட்வீட் பிறந்த கதை! - 20 ஆண்டுகால ட்விட்டரின் சுவாரசிய வரலாறு

மார்ச் 21, 2006: உலகையே இணைக்கும் ஒரு மாபெரும் தகவல் தொடர்பு புரட்சிக்கு ஒரு சிறிய விதை தூவப்பட்டது. அதுதான் ட்விட்டரின் உதயம். ஜாக் டோர்சி (Jack Dorsey) மற்றும் அவரது நண்பர்களால் உருவாக்கப்பட்ட இந்த ... மேலும் பார்க்க

Rubber Band: 'எவ்வளவு இழுத்தாலும் தாங்குறியேப்பா...' - ரப்பர் பேண்ட் உருவான வரலாறு!

நமது அன்றாட வாழ்வில் நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று ரப்பர் பேண்ட். செய்தித்தாள்களைச் சுருட்டி வைக்க, பணக்கட்டுகளை ஒன்றிணைக்க, ஹோட்டல் பொட்டலங்களைக் கட்டி வைக்க என இதன் அன்றாட பயன்பாட... மேலும் பார்க்க

Grandma Moses: நம்பிக்கை தந்த தூரிகை; 78 வயதில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த மூதாட்டியின் கதை!

ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது, நம் கனவுகளைத் துரத்த நமக்கு ஒரு சிறிய உத்வேகம் தேவைப்படும். "எனக்கு வயதாகிவிட்டது, இனிமேல் என்னால் புதிதாக எதையும் சாதிக்க முடியாது" என்ற எண்ணம் உங்கள் மனதில் ஒருபோதும் வ... மேலும் பார்க்க

`தேவையே கண்டுபிடிப்பின் தாய்' : 15 வயது சிறுவனின் கண்டுபிடிப்பு! - Earmuffs உருவான சுவாரஸ்ய கதை!

உலகை மாற்றிய பல கண்டுபிடிப்புகள் ஆய்வகங்களில் மட்டுமே பிறக்கவில்லை; அவை அன்றாடத் தேவைகளிலிருந்தும், தனிப்பட்ட சிரமங்களிலிருந்தும் தான் பிறந்திருக்கின்றன. அத்தகைய ஒரு எளிய, ஆனால் புத்திசாலித்தனமான கண்ட... மேலும் பார்க்க