"நெதன்யாகு பேச்சைக் கேட்டால் ஒட்டுமொத்த மத்தியக் கிழக்கும் எரியும்" - ட்ரம்பிற்க...
"என் மகளின் கண்ணியமே எனக்கு முக்கியம்" - விவாகரத்து பெற்ற மகளை மேள தாளங்களுடன் அழைத்து வந்த தந்தை
உத்தரப்பிரதேசத்தில் கோர்ட்டால் விவாகரத்து வழங்கப்பட்ட மகளை ஆரவாரத்துடன் மேளதாளங்களுடன் தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் ஞானேந்திர சர்மா. ஓய்வுபெற்ற நீதிபதியான இவருக்கு பிரனிதா என்ற ஒரே ஒரு மகள் இருக்கிறார். இவர் 2018ம் ஆண்டு ராணுவ அதிகாரி ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டில் பிரனிதா கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நடந்த இந்தச் சித்ரவதை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது.

இத்தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தான். அப்படி இருந்தும் அவர்களது உறவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து பிரனிதா தனது கணவரிடமிருந்து விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதற்காக மீரட் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் பிரனிதாவிற்கு விவாகரத்து வழங்கியது. விவாகரத்து வழங்கியவுடன் பிரனிதா கோர்ட்டில் இருந்து வெளியில் வந்தவுடன் அவருக்கு மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க தனது மகளை ஞானேந்திர சர்மா தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இதில் உறவினர்களும் திரளாகக் கலந்து கொண்டு நடனமாடியபடி வந்தனர். அவர்கள் எனது மகளை நேசிக்கிறேன் என்று எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய டிசர்ட் அணிந்தபடி அதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது குறித்து பிரனிதா கூறுகையில், ''திருமண வாழ்க்கையில் நான் மனதளவில் மிகவும் பலவீனமடைந்தேன். ஆனால் தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க எனது குடும்பம் உதவியது.
துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் மௌனம் காக்கக் கூடாது. உங்களுக்காக நீங்களே குரல் கொடுங்கள். வலிமை பெறுங்கள்; உங்களைப் பயிற்றுவித்துக்கொண்டு, திருமணத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கு முன்பே சுயசார்புடையவர்களாகத் திகழுங்கள்" என்று அவர் கூறினார்.

பிரனிதாவின் தந்தை ஞானேந்திர சர்மா இது குறித்து பேசுகையில், ''என் மகள் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அவளை அந்தச் சூழலிலிருந்து வெளியே கொண்டு வருவது என் பொறுப்பு. சமூக எதிர்பார்ப்புகளை விட அவளது கண்ணியமே முக்கியம்" என்று சர்மா கூறினார்.
மேலும், ஜீவனாம்சம் கோர வேண்டாம் என்று தங்கள் குடும்பம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஞானேந்திராவிற்கு ஒரு மகனும் இருந்தார். ஆனால் அந்த மகன் விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். தற்போது பிரனிதா பிரபல நிதி நிறுவனம் ஒன்றில் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.





















