Iran war: US Dollar-ஐ வீழ்த்தப்போகும் China Yuan | Trump | Nethanyahu | Mojtaba ...
ரூ.8000 வவுச்சர்: "சமையலறையில் நுழையாதவர்களுக்கு அந்த வலி புரியாது" - கனிமொழி விளக்கம்
தி.மு.க தேர்தல் அறிக்கையில் ரூ.8000 கூப்பன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது ஏன் என்பதற்கு தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ``2021-ல் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காலை உணவு திட்டம், தமிழ்ப் புதல்வன் போன்ற சொல்லப்படாத திட்டங்களையும் முதல்வர் நிறைவேற்றினார்.
மீதமுள்ள 101 வாக்குறுதிகளில் 37 மத்திய அரசின் ஒத்துழைப்பால்தான் செய்து தரமுடியும் என்ற நிலையில் உள்ளன. மேலும், 64 திட்டங்கள் அப்பகுதியில் உள்ள மக்களின் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்ற முடியவில்லை.

இந்த ஆண்டு வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு தரப்புகளிலிருந்து பாராட்டக்கூடிய அளவிற்கான ஒரு தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அறிக்கை குழு பல மாவட்டங்களுக்குச் சென்று அங்கு இருக்கக்கூடிய மக்களைச் சந்தித்து பெறப்பட்ட மனு, ஈமெயில், வாட்ஸ் ஆப், குறுஞ்செய்தி எனப் பல்வேறு வழிகளில் கிட்டத்தட்ட 80,000 கருத்துக்களைப் பெற்று இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.
'ஒவ்வொரு துறையிலும் இருக்கும் அனுபவசாளிகளிடம் ஆலோசனை செய்து, இந்தத் தேர்தல் அறிக்கையில தரக்கூடிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியங்கள் என்ன? அதையும் ஆராய்ந்து இந்தத் தேர்தல் அறிக்கையை உருவாக்க வேண்டும். இங்கே கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படக்கூடிய வாக்குறுதிகளாக இருக்க வேண்டும்' என்று முதலமைச்சர் உறுதியாகப் பணித்திருந்தார். அதன்படி தயாரிக்கப்பட்டிருக்கக்கூடிய தேர்தல் அறிக்கைதான் இந்தத் தேர்தல் அறிக்கை.

அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை படிக்கும் அளவு நேரமில்லை. நடைமுறையில் ஏற்கனவே இருக்கும் திட்டங்களையே அ.தி.மு.க தனது அறிக்கையில் வழங்கியுள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று முன்பு கூறியவர்கள், இப்போது அதை 2,000 ரூபாயாக உயர்த்துவோம் என்று கூறுவது நகைப்புக்குரியது.
404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன என்பது 80 சதவீதத்திற்கும் மேலானது. இதைச் சரியாகக் கணக்கிடத் தெரிந்தவர்களுக்கு இது புரியும்.
தி.மு.க-வின் திட்டங்களை 'இலவசங்கள்' என்று அழைப்பது தவறு. இது ஒரு 'பொருளாதார ஊக்கத்தொகை'. மக்கள் கையில் பணம் சேரும்போது அவர்களின் வாங்கும் திறன் அதிகரித்து, அதன் மூலம் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது.
உதாரணமாக, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணம் என்பது அவர்களுக்கு நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது. அந்த நேரத்தில் அவர்கள் மற்றொரு வேலையைச் செய்து பொருளாதார ரீதியாக முன்னேற இது ஒரு சமூக முதலீடாக அமைகிறது.

வருமான வரி செலுத்தாத பெண்களுக்கு வழங்கப்படவுள்ள வவுச்சர்கள் என்பது ஒரு வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் முதலீடு. முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட 'இரண்டு பர்னர் கேஸ் அடுப்பு' என்பது வெறும் தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல. அது பெண்களின் நலன் சார்ந்த ஒரு தொலைநோக்குத் திட்டம்.
ஒரே ஒரு பர்னர் கொண்ட அடுப்பை வழங்கினால் அரசுக்குச் செலவு குறையும் என்று அதிகாரிகள் ஆலோசனை கூறியபோது, கலைஞர் அதை ஏற்கவில்லை. இரண்டு பர்னர்கள் இருந்தால் பெண்கள் தங்கள் சமையலை விரைவாக முடித்துவிட்டு, சமையலறையிலிருந்து சீக்கிரம் வெளியே வர முடியும் என்றும், அதன் மூலம் தங்களுக்குப் பிடித்தமான மற்ற காரியங்களில் அவர்கள் ஈடுபட முடியும் என்றும் அவர் கருதினார். சுருக்கமாகச் சொன்னால், அது சமையலறையிலிருந்து பெண்களுக்கு விடுதலை அளிக்கும் திட்டமாகும்.
அதே தர்க்கம்தான் தற்போதைய வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்ற சாதனங்களுக்கும் பொருந்தும். ஒரு பெண் துணிகளைக் கையால் துவைக்கச் செலவிடும் நேரத்தை வாஷிங் மெஷின் மிச்சப்படுத்துகிறது. குளிர்சாதனப் பெட்டி இருந்தால், அன்றே சமைத்த உணவை அடுத்த நாள் பயன்படுத்த முடிவதால், தினசரி சமையல் வேலைக்கான நேரம் சேமிக்கப்படுகிறது.
இவ்வாறு மிச்சமாகும் நேரத்தை பெண்கள் தங்களின் சுய முன்னேற்றத்திற்காகவோ அல்லது வேறொரு வருமானம் தரும் பணிக்காகவோ பயன்படுத்த முடியும். இது வெறும் பொருளாகப் பார்க்கப்படாமல், ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்கான முதலீடாகவேகருதப்பட வேண்டும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 'வவுச்சர்' (Voucher) முறையின் சிறப்பம்சமே அதன் பயன்பாடுதான். ஒரு குறிப்பிட்ட பொருளை அரசே வழங்கும்போது, ஏற்கனவே அந்தப் பொருளை வைத்திருக்கும் வீட்டிற்கு அது தேவையற்ற கூடுதல் சுமையாக மாறுகிறது. ஆனால், வவுச்சராக வழங்கும்போது, அந்தப் பெண்ணிற்குத் தனது வேலைப்பழுவைக் குறைக்க எந்தச் சாதனம் தேவையோ (உதாரணமாக பிரிட்ஜ் அல்லது வாஷிங் மெஷின்), அதை அவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரம் கிடைக்கிறது. இது அவரது நேரத்தைச் சரியாக முதலீடு செய்ய வழிவகுக்கிறது.
மைக்ரோவேவ் ஓவன் (Micro-oven) போன்ற சாதனங்களை ஆடம்பரம் என்று சிலர் விமர்சிக்கலாம். சமையலறைக்குள் நுழையாதவர்களுக்கு அதன் வலி புரியாது. பிரிட்ஜில் இருக்கும் பாத்திரத்தை அப்படியே எடுத்து ஓவனில் வைத்துச் சூடுபடுத்துவது என்பது மிக எளிய காரியம். அதுவே அடுப்பில் சூடுபடுத்த வேண்டும் என்றால், உணவை வேறொரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்.
மீண்டும் அந்தப் பாத்திரத்தைக் கழுவ வேண்டும். இந்தச் சிறு வேலை கூட ஒரு பெண்ணின் நேரத்தையும் உழைப்பையும் கோருகிறது. அந்தப் பெண்களுக்கு மட்டுமே தெரியும், இந்தச் சிறு தொழில்நுட்ப மாற்றங்கள் அவர்களின் தினசரி வாழ்வில் எவ்வளவு பெரிய நிம்மதியைத் தருகின்றன என்று.

மத்திய அரசு சரியான நிதிப் பகிர்வை வழங்காத போதிலும், பெட்ரோல் விலையைக் குறைத்தது மற்றும் ஜிடிபி (GDP) வளர்ச்சியை அதிகரித்தது எனத் தமிழக அரசு பல சாதனைகளைப் புரிந்துள்ளது. வரும் காலங்களில் மத்திய அரசின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படாத, மாநில அரசால் சுயமாக நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்." என்றார்.













