`நான் உனது பாஸ்' எனக்கூறி பெண் பாலியல் வன்கொடுமை: தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால...
`` 'வெற்றி' என்று பெயர் வைத்து, வெற்றிக் கழகத்தை நிலைநிறுத்த முயல்வது தவறு!" - தமிழிசை சௌந்தரராஜன்
பா.ஜ.க-வின் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா ‘கந்தன் மலை’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘செய் செய்யாதே’ என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடித்துள்ளார். ஹரினி சுப்பு, சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பி.எஸ்.சி. நர்சிங் பட்டதாரி சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ளார். டாக்டர் எஸ்.ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கி உள்ளார்.
படத்தில் கதாநாயகனாக குரு விஜய் நடித்துள்ளார். எச்.ராஜா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் தர்ஷினி ரெட்டி, டபிதா குணரத்தினே, மோனிகா பிரீத்திவி, பிரதீஷா மனோ பிரசாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``‘செய் செய்யாதே’ என்ற திரைப்படத்தில் அண்ணன் எச்.ராஜா நடித்திருக்கிறார் என்பதற்காகவே நான் இந்த விழாவிற்கு வந்தேன். போதைப்பொருளைத் தடுப்பதற்கும், மருத்துவத்துறையில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்குமான படம் இது.
திரைப்படத் துறையில் உள்ளவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரும்போது, அரசியல் துறையைச் சேர்ந்தவர்கள் நடிக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடுகிறது. 'விஜய் என்றால் வெற்றி' என நான் கூறியது விஜய்க்கு ஆதரவான கருத்து போல இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். 'விஜய்' என்றால் வெற்றிதான், அவர் அதை அடைந்துவிட்டார்.
எங்களைப் பொறுத்தவரை 'மோடி' என்றாலும் வெற்றிதான். அதனால் 'விஜய்' என்று கூறும்போது, மோடியின் வெற்றியையும் நாங்கள் சேர்த்தே சொல்கிறோம். அதே நேரத்தில், எல்லாத் திட்டங்களுக்கும் 'வெற்றி' என்ற பெயரைச் சூட்டிவிடக் கூடாது. தற்போதைய பட்ஜெட்டில் பார்த்தால், சுமார் 150 திட்டங்களுக்கு 'வெற்றி' என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். 'வெற்றி' என்று பெயர் வைத்து, உங்கள் வெற்றிக் கழகத்தை நிலைநிறுத்த முயல்வது தவறு.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த பட்ஜெட் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. இருப்பினும், இது அவர்களின் முதல் பட்ஜெட் என்பதால், தங்களை இன்னும் மேம்படுத்திக் கொள்ளலாம். மேலும் பல பிரச்னைகளுக்கு அவர்கள் சரியான தீர்வுகளைச் சொல்ல வேண்டும். வாக்குறுதி அளித்தால் அதை நிறைவேற்றுவதற்கான எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும். ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் எதையும் அவர்கள் அறிவிக்கவில்லை.
நாங்கள் குறை கூறுகிறோம் என்று நினைக்கக் கூடாது. இதைச் சரி செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு ஆரோக்கியமான விமர்சனமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த அரசில் பெண்களுக்கு எதிரான இழிவான செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்பதை சமீபத்திய சட்ட நடவடிக்கைகள் வலியுறுத்துகின்றன. அதேபோல், பொன்முடி இந்து மதச் சார்புடைய தெய்வங்களை இழிவாகப் பேசியதால், இன்று சட்டத்தின் முன் நின்று நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்படும் நிலையில் இருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, எந்தவொரு மத உணர்வையோ, மத நம்பிக்கையையோ உதாசீனப்படுத்துவதும் புண்படுத்துவதும் கூடாது என்பதே எனது கருத்தாகும்.
மதச்சார்பின்மை என்பது அனைவருக்கும் பொதுவானது. அது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். பிற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். ‘மதச்சார்பின்மை’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகப் பரப்பி வந்த இந்து மத எதிர்ப்புக்கு இன்று ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. அனைவரும் சமமாகப் பயணிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்." என்றார்.

















