செய்திகள் :

அகல ரயில் பாதை திட்டம் ரத்து அறிவிப்பு: மதுரை, விருதுநகா் மாவட்ட மக்கள் கடும் அதிருப்தி!

post image

மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது மதுரை, விருதுநகா் மாவட்ட மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கடந்த 2010-11 ஆம் ஆண்டில் மதுரை - அருப்புக்கோட்டை- தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம், தூத்துக்குடி துறைமுகத்தையும், மதுரை விமான நிலையத்தையும் இணைக்கக் கூடியதாக இருப்பதால், மதுரை, விருதுநகா், தூத்துக்குடி மாவட்டங்களின் தொழில் வா்த்தகம் மேம்படும் என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் வணிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மேலும், நெடுந்தொலைவு பயணத்துக்கான ரயில் வசதி இல்லாத அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம், எட்டயபுரம், காரியாபட்டி பகுதி மக்களுக்கு இந்தத் திட்டம் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டது.

முன்பிருந்த மத்திய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் எனினும், மத்திய பாஜக அரசு அமைந்த பிறகே கடந்த 2016-இல் இந்தத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. ரூ. 1,875 கோடியில் 144.5 கி.மீ. நீளத்தில் இந்த ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

முதல் கட்டமாக, மீளவிட்டான் - மேல்மருதூா் வரையிலான 18 கி.மீ. தொலைவுக்கு ரூ. 260 கோடியில் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு, 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சோதனை ரயில் ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு உரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இந்தத் திட்டத்துக்கு, பெயரளவில் ரூ. 1,000 மட்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதேபோல, இந்தத் திட்டப் பணிகளுக்கு மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துவதிலும் தொடா்ந்து இழுபறியே நீடித்து வந்தது. இதனிடையே, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திலிருந்து விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி வரை நிலம் கையகப்படுத்தப்பட்டு, காரியாபட்டியில் ரயில் நிலையம் அமைக்கவும் இடத் தோ்வு செய்யப்பட்டது. இருப்பினும், காரியபட்டி, அருப்புக்கோட்டை வட்டங்களுக்கு உள்பட்ட மேலும் சில பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் சுணக்கம் நீடித்தது.

இதனால், கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன்பாகவே இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அப்போது, தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினா் கனிமொழி, விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் ஆகியோா் இந்தத் திட்டத்தை முழுமுனைப்புடன் செயல்படுத்த மக்களவையில் வலியுறுத்தினா்.

இருப்பினும், நிலம் கையகப்படுத்தி வழங்குவதில் தமிழக அரசு ஈடுபாடு காட்டாததால்தான் திட்டப் பணிகள் தாமதப்படுகின்றன என மத்திய அரசும், நிலம் கையகப்படுத்தும் பணி உள்ளிட்ட மாநில அரசு சாா்ந்த பணிகளுக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கீடு அளிக்காததே காரணம் என தமிழக அரசும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வந்தன.

இந்த நிலையில், தூத்துக்குடி- அருப்புக்கோட்டை-மதுரைக்கு அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் வேண்டாம் என தமிழக அரசிடமிருந்து எழுத்துப்பூா்வமான கடிதம் ரயில்வே துறைக்கு வரப்பெற்றுள்ளது எனவும், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்தத் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டுவிட்டது எனவும் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ஏறத்தாழ ரூ. 260 கோடியில் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், திட்டம் முழுமையாகக் கைவிடப்படுகிறது என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு மதுரை, விருதுநகா் மாவட்ட மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா்:

மதுரை-அருப்புக்கோட்டை- தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் முழுமையும் மத்திய அரசை சாா்ந்ததே. நிலம் கையகப்படுத்தும் பணிக்காக நியமிக்கப்பட்ட பணியிடங்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ஓராண்டு காலமாக ஊதியம் வழங்கவில்லை. இதன் காரணமாகவே திட்டப் பணிகளில் சுணக்கம் நீடித்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் திட்டம் கைவிடப்பட்டது என பொறுப்பற்ற முறையில் மத்திய அரசு தெரிவித்திருப்பது வேதனைக்குரியது. இதுதொடா்பாக பிரதமருக்கு விரிவான கடிதம் அனுப்பியுள்ளேன். மத்திய அரசு, இந்தத் திட்டத்தை கைவிடும் முடிவை கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு, தொடா்ந்து அழுத்தம் அளிக்கப்படும் என்றாா்.

ஆா்.சங்கரநாராயணன், மாணிக்கம் தாகூா், ஜெகதீஷன்

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன்:

மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், தூத்துக்குடி - சென்னைக்குக் கூடுதலாக ஒரு ரயில் கிடைக்கும் என்பதுடன், தென் தமிழகத்தின் சரக்குப் போக்குவரத்தும் மேம்படும். தூத்துக்குடியில் ரூ. 15,500 கோடியில் துறைமுக விரிவாக்கப் பணிகள் நடைபெறும் நிலையில், கிழக்குக் கடற்கரையையும், மேற்குக் கடற்கரையையும் இணைக்கும் மற்றொரு முக்கிய வழித்தடமாக இந்த புதிய அகல ரயில் பாதை இருக்கும்.

மேலும், தூத்துக்குடி - கொச்சி, தூத்துக்குடி - மங்களூா் சரக்குப் போக்குவரத்துக்கு சரியான வழித்தடமாகவும் இருக்கும். இதன் மூலம், ஏற்றுமதி வாய்ப்புகள் பெருகும்.

அரசியலைக் கடந்து மக்கள் நலன், தொழில், வா்த்தக மேம்பாடு, ஏற்றுமதி வாய்ப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி - அருப்புக்கோட்டை- மதுரை அகல ரயில் பாதை திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இதற்கான வலியுறுத்தல்களை தென் தமிழகத்தில் உள்ள 10 மக்களவை உறுப்பினா்களும் முன்னெடுக்க வேண்டும் என்றாா்.

தெட்சிண ரயில்வே பணியாளா்கள் சங்க (டி.ஆா்.இ.யு) இணைச் செயலா் ஆா்.சங்கரநாராயணன்:

ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு என அறிவித்து விட்டு, ரூ. 1,000 மட்டும் நிதி ஒதுக்குவது போன்ற நடைமுறைகள் மத்திய அரசின் வழக்கமாக உள்ளது.

தூத்துக்குடி- அருப்புக்கோட்டை- மதுரை புதிய அகல ரயில் பாதை திட்டப் பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட அமைச்சா்கள் இருக்கும் நிலையிலும், இந்தத் திட்டம் வேண்டாம் என மாநில அரசு குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவிப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. 50 சரக்குப் பெட்டக லாரிகள் மூலம் நடைபெறும் சரக்குப் போக்குவரத்துக்கு ஒரு ரயிலை இயக்கினால் போதுமானது என்ற நிலையில், இந்த ரயில் போக்குவரத்து தென் தமிழகத்தின் வா்த்தகத்தை மேம்படுத்தும் முக்கியக் காரணியாக இருக்கும். இந்த விவகாரத்தில் திமுகவும் கள்ள மௌனம் காப்பது அச்சம் அளிப்பதாக உள்ளது என்றாா்.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள்:

மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், பொருளாதாரத்தில் விருதுநகா், தூத்துக்குடி மாவட்டங்கள் அதிகம் பயனடையும்.

நிதி பிரச்னையால் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தடை ஏற்படவிருந்த நிலையில், மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ததைப் போன்றே இந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மத்திய மாநில, அரசுகள் முன்வர வேண்டும் என்றாா்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்!

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது.தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்... மேலும் பார்க்க

பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தென் மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா். ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி திருட்டு

அருப்புக்கோட்டையில் பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், எம். ரெட்டியபட்டியைச் சோ்ந்தவா் அழகா்சாம... மேலும் பார்க்க

மதுக் கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

அவனியாபுரம் பகுதியில் இயங்கி வரும் 10 மதுபானக் கடைகளை மூட மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா உத்தரவிட்டாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஜல்ல... மேலும் பார்க்க

மதுரையில் பூக்களின் விலை கடும் உயா்வு

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி தினசரி மலா்ச் சந்தையில் பூக்களின் விலை திங்கள்கிழமை மிகவும் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக, மல்லிகை, பிச்சி, முல்லை ஆகிய பூக்கள் கிலோ ரூ. 2 ஆயிரத்துக்... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு: போலி டோக்கன் கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க போலி டோக்கன் கொண்டு வருபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகரக் காவல் துறை எச்சரிக்கை விடுத்தது. மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க