"`நரேந்திர' என்ற பெயர் பிடிக்கலை..!" - குத்துச்சண்டை வீரர் பகிர்ந்த சம்பவம்; உரக...
`அகழியையே வழித்தடமாக மாற்றிக்கொண்ட வைரல் யானைகள், குழப்பத்தில் வனத்துறை!' என்ன நடக்கிறது கூடலூரில்?
ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர். அதேவேளையில் நாட்டில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளிலும் முக்கிய இடத்தில் இருக்கிறது. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப் பணிகளின் காரணமாக யானைகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் துண்டாடப்பட்டுள்ளன.
உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக யானைகள் இடம்பெயர முடியாமல் திணறி வருகின்றன. சில தனியார் பெருந்தோட்ட நிறுவனங்களால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் யானைகளின் வாழிடங்கள் சிதைக்கப்படுவதால் அப்பாவி பழங்குடிகளும் தோட்ட தொழிலாளர்களும் உயிரிழந்து வருகின்றனர்.

மனித தவறுகளால் யானைகளும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன. கூடலூர் வனக்கோட்டத்தில் யானை - மனித எதிர்கொள்ளல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வரும் நிலையில், யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ள அகழிகளையே இரண்டு யானைகள் வழித்தடமாக பயன்படுத்தி வரும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த வனத்துறையினர், " யானைகளால் அகலமான பள்ளங்களை தாண்ட முடியாது என்பதால் அவற்றின் நடமாட்டத்தை தடுக்க அகழிகள் மட்டும் தான் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. கூடலூர் அருகில் உள்ள பிதர்க்காடு சுற்றுவட்டாரப் ஜோடியாக நடமாடி வரும் இரண்டு யானைகள் அகழிக்குள் இறங்கி நீண்ட தூரம் அதன் வழியாகவே

இடையூறு இல்லாமல் பயணித்து ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை உண்கின்றன. மீண்டும் அந்த வழியாக வனத்திற்குள் செல்கின்றன. தடுக்க அமைக்கப்பட்ட அகழியை வழித்தடமாக மாற்றிக்கொண்ட இந்த வைரல் யானைகளால் என்ன செய்வதென்று அதிகாரிகள் குழப்பத்தில் இருக்கிறார். அகழியை முழுமையாக பார்வையிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றனர்.



















