செய்திகள் :

அடுத்தடுத்து வெளியாகும் ஊழல் குற்றச்சாட்டுகள்! - எப்படி எதிர்கொள்ளப்போகிறது திமுக?

post image

செந்தில் பாலாஜி மீதான ஊழல் குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக் காலத்தில், 2021 முதல் 2025 வரை டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்கள் கொள்முதல், பார்களுக்கு உரிமம் வழங்குதல், ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் ஒரு பகுதியாக நேற்று முந்தினம் தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். முன்ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து அவர் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

எ.வ. வேலு மீதான வழக்கு

அதேபோல சமீபத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாகக் கூறி 3.2 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக ‘அறப்போர் இயக்கம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் என்பவர் கடந்த 2022ஆம் ஆண்டு புகார் கொடுத்திருந்தார்.

அதன் பேரில் எ.வ. வேலு மற்றும் நெடுஞ்சாலை துறையைச் சேர்ந்த 9 அரசு அதிகாரிகள் மற்றும் ஒரு ஒப்பந்ததாரர் மீது குற்றவியல் சதி, மோசடி, அரசுப் பணம் கையாடல், போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து எ.வ. வேலு தொடர்பான அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.

அடுத்தடுத்து வெளியாகும் ஊழல் குற்றச்சாட்டுகள்

தவிர வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாக இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுகவின் ஊழல் பட்டியல் வெளியாகும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் கூறியிருக்கிறார்.

இப்படி அடுத்தடுத்து வெளியாகும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் திமுக எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது? என்ற கேள்வியோடு பத்திரிகையாளர் சுவாமிநாதனைத் தொடர்புகொண்டு பேசினோம்.!

விரிவாக நம்மிடம் பேசத்தொடங்கிய அவர், "திமுகவைப் பொறுத்தவரை, ஊழல் ரீதியான குற்றச்சாட்டுகள் என்பது புதிது கிடையாது. சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்ட காலத்தில் தொடங்கி, 2G அலைக்கற்றை வழக்கு வரை அது தொடரத்தான் செய்தது.

பத்திரிகையாளர் சுவாமிநாதன்
பத்திரிகையாளர் சுவாமிநாதன்

2G வழக்கு மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டாக உருவாக்கப்பட்டு, பெரிய அளவில் உலுக்கிய ஒரு சம்பவம். 2011-ல் அந்த ஊழல் குற்றச்சாட்டு உச்சத்தில் இருந்தபோது, எதிர்க்கட்சியாகக்கூட திமுக வரமுடியாமல் போனது. ஆனால், அதற்கு ஊழல் மட்டுமே காரணம் கிடையாது. தேமுதிகவின் புதிய வரவும் ஒரு காரணம் தான்.

2014-ல் காங்கிரஸும் திமுகவும் பிரியும்போதும் ஒரு பெரிய தோல்வியைச் சந்தித்தார்கள். ஆனால் 2016-ல் எதிர்க்கட்சியாகச் சென்றாலும், குறிப்பிடத்தக்க அளவு சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்குக் கிடைத்தார்கள்.

எனவே, கடந்தகால திமுக வரலாற்றைப் பார்த்தால், ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்களுக்கு தண்டனைக் கிடைத்ததே இல்லை. ஊழல் ரீதியான விமர்சனங்கள் என்பது ஒரு பிரச்சாரத்திற்கு மட்டுமே கை கொடுக்கும். தேர்தல் ரீதியாக வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்யத் தவெக-விற்கு இது பயன்படலாம்.

ஊழலுக்காக மட்டுமே ஒரு கட்சியை மக்கள்.!

உதாரணத்திற்கு செந்தில் பாலாஜி 2024 தேர்தலின் போதே சிறையில்தான் இருந்தார். அதிமுக ஆட்சியில் அவர் அமைச்சராக இருந்தபோது போடப்பட்ட போக்குவரத்துத் துறை வழக்கு அது. இருந்தாலும், அவர் கோயம்புத்தூர் தொகுதியில் நிற்கும்போது ஜெயிக்கத்தானே செய்தார்.

எனவே ஊழல் என்பது பொதுவாக ஒரு பிரச்சனைதான், தவறுதான். ஆனால், மக்கள் மன்றத்தில் ஊழலுக்காக மட்டுமே ஒரு கட்சியை மக்கள் அப்படியே நிராகரித்துவிடுவார்கள் என்ற வரலாறு தமிழ்நாட்டில் இல்லை. 2016-ல் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வந்தபோதிலும், அதிமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவே செய்தது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

'தீய சக்தி' டு 'ஊழல் சக்தி'

இங்கு திமுகவிற்கு என்ன நெருக்கடி என்றால், தேர்தலுக்கு முன்பாக 'தீய சக்தி' என்ற வார்த்தையைத் தவெக பயன்படுத்தியது. ஆனால் இப்போது 'ஊழல் சக்தி' என்பதையும் திமுகவை நோக்கியே நகர்த்துகிறார்கள்.

இரண்டு திராவிடக் கட்சிகளுமே ஊழல் செய்திருக்கிறார்களா?என்றால், ஒரு பத்திரிகையாளராக என் பார்வையில் 100% செய்திருக்கிறார்கள். ஆனால், எந்த அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார்களோ, அந்த அளவுக்கு மக்களோடும் அவர்கள் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்.

இந்தத் தேர்தல் முடிவுகளையே எடுத்துக்கொண்டால், வெற்றி பெற்ற 47 அதிமுக உறுப்பினர்களாகட்டும், 59 திமுக உறுப்பினர்களாகட்டும், இவர்கள் அனைவருமே ஏற்கனவே மக்களிடம் பிரபலமானவர்கள், நெருக்கமாக இருந்தவர்கள். அவர்களுக்கு முன்னால் விஜய் மாஸ் எடுபடவில்லை.

அதனால் தவெக இரண்டு லாபங்களை இலக்காக வைக்கிறது. ஒன்று, அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும். அதனால்தான் விஜய் பாஸ்கர், கடம்பூர் ராஜு என முன்னாள் அமைச்சர்களை தவெகவில் இணைத்துக்கொண்டார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

கரூர் சம்பவம் 10 மடங்கு டேமேஜ் உண்டாக்கும்

அதிமுக அரசியலை நீர்த்துப்போகச் செய்துவிட்டு, திமுக மீது 'ஊழல் சக்தி', 'தீய சக்தி' என்ற விமர்சனங்கள் மூலம் களத்தை இருமுனைப் போட்டியாக மாற்ற நினைக்கிறார்கள். அது தவெகவிற்கு அரசியல் லாபமாக இருக்கும்.

ஆனால், ஊழல் விமர்சனத்தால் மட்டும் திமுகவைப் பெரிய அளவில் பின்னுக்குத் தள்ளிவிட முடியாது என்பதுதான் கடந்தகால வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி.

அதே நேரத்தில், கரூரில் நடந்த சம்பவம் போன்ற தீர்க்கப்படாத விஷயங்கள் திமுகவிற்கு மிகப்பெரிய பாதிப்பைத் தரும். ஊழல் விமர்சனத்தை விட இது 10 மடங்கு டேமேஜ் உண்டாக்கும்.

திமுகவை பாஜக பக்கம் நெருங்க வைத்துவிடும்

இப்போது தவெக கொடுக்கும் நெருக்கடி, திமுகவை பாஜக பக்கம் நெருங்க வைத்துவிடும். 'நீட்' விவகாரத்தில் இந்தியா முழுதும் பெரிய போராட்டங்கள் நடக்கும்போது, திமுக அதைத் தமிழ்நாட்டில் தீவிரமாகக் கையில் எடுத்திருக்கலாம்.

ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. முன்பு 'தமிழநாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்', 'ஓரணியில் தமிழ்நாடு' என்று பாஜகவை எதிர்த்துப் பேசியவர்கள், இப்போது ஊழல் வழக்குகள் நெருங்குவதால் பின்வாங்குகிறார்கள். அமலாக்கத்துறை உள்ளே வரும்போது, திமுக பயப்படுவது தவெக-விற்கு அல்ல. பாஜகவிற்குதான்.

திமுக தலைவர் ஸ்டாலின் - பிரதமர் மோடி
திமுக தலைவர் ஸ்டாலின் - பிரதமர் மோடி

தவெக எடுப்பது மிகப்பெரிய ரிஸ்க்

திமுக - பாஜக இடையே ஒரு புரிதல் உருவாகும்போது, அது தவெக-விற்குத்தான் அரசியல் ரீதியாக நெருக்கடியைக் கொடுக்கும். ஒருவேளை திமுக பாஜகவை நெருங்கிவிட்டால், விஜய் பாஜகவை ஏன் திட்டவில்லை என்ற கேள்வியை யாரும் கேட்க மாட்டார்கள்.

அவர் வழக்கம்போல திமுகவையே திட்டுவார். எது எப்படியோ, தவெக எடுப்பது மிகப்பெரிய ரிஸ்க். இந்த நெருக்கடி உண்மையிலேயே யாருக்குப் பாதிப்பு என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று முடித்தார்.

ஸ்பெயின் எல்லையை உடைத்த மொராக்கோ மக்கள்; கடலில் கரைந்த உயிர்கள்; களமிறங்கும் ராணுவம் - நடப்பது என்ன?

2,000 முதல் 3,000 பேர் வரை எல்லையைக் கடந்ததாகத் தகவல்கள்!மொராக்கோவை ஒட்டியுள்ள ஸ்பெயினின் சியூட்டா எல்லையில் திடீரெனக் குடியேற்றவாசிகள் குவிந்த சம்பவம், ஸ்பெயினில் பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள... மேலும் பார்க்க

மின்கட்டணம்: '3.70 லட்சம் புகார்கள் வந்திருக்கா?' - ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு நிர்மல்குமார் பதில்

"3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப... மேலும் பார்க்க

தவெக: ``முதலில் மின்வெட்டுப் பிரச்னை; இப்போது மின்கட்டணத்தில் பிரச்னை" - ஸ்டாலின் விமர்சனம்

தமிழ்நாட்டில் கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஜூலை மாதத்தில் வீட்டு மின் கட்டணம் வழக்கத்தை விடப் பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் எழுந்தன. பில்லிங் செயல்பாட்டில... மேலும் பார்க்க

"கமிஷன் வரவில்லை; மணல் கொள்ளை நின்றுவிட்டது என அவர்களுக்குப் பொறுக்கவில்லை"- யாரைச் சொல்கிறார் வைகோ?

சென்னையில் நேற்று ஏபிஜே அப்துல் கலாம் தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய மதிமுக தலைவர் வைகோ, ``பொறுக்கவில்லையே! ஆட்சி போய்விட்டதே, அதிகாரம் போய்விட்டதே, வரவேண... மேலும் பார்க்க

'முதல்வருக்கு ஒரு நியாயம் கவுன்சிலருக்கு ஒரு நியாயமா?' - மாநகராட்சியில் வெடித்த 'டெண்டர்' விவகாரம்!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் கடந்த ஜூலை 29 ஆம் தேதி நடந்திருந்தது. இந்த கூட்டத்தில் 'லிமிடெட் டெண்டர்' தொடர்பான வாதத்தின் போது துணை மகேஸ் குமார் 'முதல்வருக்கு ஒரு நியாயம்...கவுன்சிலருக்கு ஒரு ... மேலும் பார்க்க