'எம்.ஜி.ஆரை இன ரீதியாக தமிழ்நாட்டில் தனிமைப்படுத்த பார்த்தார்கள், அப்போது கண்ணதா...
Quote of the Day: 'தன்னம்பிக்கையே முதல் வெற்றி!' - மார்கஸ் கார்வே சொன்ன பொன்மொழி
நம்முடைய எண்ணங்களே நம்முடைய பாதையைத் தீர்மானிக்கின்றன. அதை வலியுறுத்தும் விதமாக ஜமைக்க்கா தேசியவாதி, பான்-ஆப்பிரிக்க இயக்கத்தின் தலைவர் மார்கஸ் கார்வே சொன்ன பொன்மொழி இதோ:
(If you have no confidence in self, you are twice defeated in the race of life.)
"உங்களிடம் தன்னம்பிக்கை இல்லை என்றால், வாழ்க்கைப் பந்தயத்தில் நீங்கள் இரண்டு முறை தோற்கடிக்கப்படுகிறீர்கள்."
இந்த வரிகள் எவ்வளவு ஆழமானவைக் கவனித்தீர்களா? ஒரு செயலைத் தொடங்கும் முன்பே 'நம்மால் முடியாது' என நம்மை நாமே குறைத்து மதிப்பிடுவது முதல் தோல்வி. பிறகு, அந்தச் செயலில் நம்பிக்கையின்றி இறங்கித் தோற்பது இரண்டாவது தோல்வி. இதைப் புரிந்துகொள்ள ஒரு சின்ன கதையைப் பார்ப்போம்.

ஒரு ஊரில் அருண், கபிலன் என இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். இருவரும் மாநில அளவிலான ஓட்டப்பந்தயத்திற்காகப் பல மாதங்களாகக் கடுமையாகப் பயிற்சி எடுத்தனர்.
உடல் தகுதியிலும், ஓடும் வேகத்திலும் அருண் மிகச் சிறந்தவன். ஆனால், அவனுக்குத் தன் மீது துளியும் நம்பிக்கை இல்லை. "மற்றவர்கள் என்னை விட வேகமாக ஓடிவிடுவார்களோ? நான் தோற்றுவிட்டால் ஊரார் சிரிக்க, அவமானமாகிவிடுமே" என்ற பயமும் சந்தேகமும் அவனுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
மறுபுறம் கபிலன், அருணை விடச் சற்று குறைவான வேகம் கொண்டவன்தான். ஆனால், அவனுக்குத் தன் உழைப்பின் மீதும், தன் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. "என்னால் முடியும், என் முழுத் திறமையையும் நான் இன்று வெளிப்படுத்துவேன்" என்று அவன் மனதார நம்பினான். பந்தய நாள் வந்தது. தொடக்கக் கோட்டில் நிற்கும்போதே அருணின் கைகள் பயத்தில் நடுங்கின, மனம் சோர்வடைந்தது. ஓடத் தொடங்கும் முன்பே அவன் மனதளவில் தோற்றுவிட்டான். இதுதான் அவனது முதல் தோல்வி.
துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் பந்தயம் தொடங்கியது. மனத்தயக்கத்தோடு ஓடிய அருண், பாதியிலேயே தடுமாறிப் பின்தங்கிக் கீழே விழுந்தான். இது அவனது இரண்டாவது தோல்வி. ஆனால், கபிலனோ எந்தச் சலனமும் இன்றி, தன் முழு நம்பிக்கையையும் கால்களில் தேக்கி ஓடி, முதல் ஆளாக இலக்கைத் தொட்டு வெற்றி பெற்றான்.
இந்தக் கதை நமக்கு உணர்த்துவது, அருணின் அபாரமான திறமை அவனுக்கு எந்த வகையிலும் உதவவில்லை; ஏனென்றால் அவனிடம் 'தன்னம்பிக்கை' என்னும் எரிபொருள் இல்லை.

நாமும் வாழ்க்கையில் பல நேரங்களில் அருணைப் போலத்தான் செயல்படுகிறோம். ஒரு புதிய வேலைக்கான நேர்காணல், ஒரு போட்டித் தேர்வு, அல்லது ஒரு தொழில் முயற்சி என வரும்போது, நம்மிடம் போதுமான திறமை இருந்தும் "நம்மால் முடியுமா?" என்ற சந்தேகம் நம்மைத் தொடக்கத்திலேயே தோற்கடித்து விடுகிறது. உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வைக்கவில்லை என்றால், உலகம் எப்படி உங்கள் மீது நம்பிக்கை வைக்கும்?
வாழ்க்கை என்பது ஒரு தொடர் ஓட்டப்பந்தயம். இதில் வெற்றிக் கோட்டைத் தொட, மற்றவர்களை விட உங்களுக்கு அதிகத் திறமை இருக்கிறதோ இல்லையோ, உங்கள் மீது உங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்.
உங்களை நீங்கள் நம்பத் தொடங்கும் அந்த நொடியே, உங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்துவிடுகிறீர்கள். தன்னம்பிக்கை என்ற கவசத்தை அணிந்துகொண்டு இன்றைய நாளை எதிர்கொள்ளுங்கள்; வாழ்க்கைப் பந்தயத்தில் வெற்றி உங்களுக்கு மட்டுமே!





















