IIT Madras இயக்குநர் காமகோடி 'கோமிய நிபுணரா'? பிரியங்கா காந்தி vs அனுராக் தாகூர்...
Quote of the Day: 'பயத்தை இன்று தூக்கியெறிந்தால், நாளை நீ சாதிக்கலாம்!' -அதிபர் ரூஸ்வெல்ட் பொன்மொழி
நம் ஒவ்வொருவரின் மனதிலும் எதிர்காலத்தைப் பற்றிய பல வண்ணக் கனவுகள் இருக்கின்றன. "நாளை நான் இதைச் சாதிக்க வேண்டும், அந்த உயரத்தைத் தொட வேண்டும்" என்றெல்லாம் ஆசையோடு திட்டமிடுகிறோம்.
ஆனால், அந்த நாளை நோக்கி எட்டடி வைக்கும்போது, மனதிற்குள் இருந்து ஒரு சிறிய குரல், "இது உன்னால் முடியுமா? தோற்றுவிட்டால் என்ன செய்வாய்?" என்று கேட்கும்.
இதற்காகவே அமெரிக்க முன்னாள் அதிபர் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் (Franklin D. Roosevelt) ஒரு பொன்மொழி கூறினார்:
"The only limit to our realization of tomorrow will be our doubts of today."
(நாளை நமது லட்சியங்களை அடைவதற்கு ஒரே தடை, இன்று நம் மனதிற்குள் இருக்கும் சந்தேகங்கள் மட்டுமே.)

இந்தப் பொன்மொழி வெறும் வார்த்தை அல்ல; நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மாபெரும் உண்மை. இதனை ஒரு எளிய நிகழ்வின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
ஒரு மரத்தின் கிளையில் இரண்டு குருவிகள் அமர்ந்திருந்தன. அதில் ஒன்று மூத்த பறவை, இன்னொன்று பறக்கக் கற்றுக்கொண்டிருக்கும் குட்டிப் பறவை. எதிரே பரந்து விரிந்த நீல வானம் இருந்தது. குட்டிப் பறவை ஆசையோடு வானத்தைப் பார்த்து, "நானும் அந்த மேகங்களைத் தொடும் அளவிற்கு உயரமாகப் பறக்க வேண்டும்" என்றது.
ஆனால், அடுத்த கணமே அதன் இறக்கைகள் நடுங்கின. "ஒருவேளை நடுவழியில் என் இறக்கைகள் சோர்ந்து போனால்? நான் கீழே விழுந்துவிட்டால் என்ன செய்வது?" என்று பயத்துடன் மூத்த பறவையிடம் கேட்டது.
அதற்கு மூத்த பறவை அழகாகச் சொன்னது: "உன் இறக்கைகளின் பலம் உனக்குத் தெரியும். ஆனால், உன் மனதிற்குள் இருக்கும் சந்தேகம்தான் உன்னை இந்த மரக்கிளையிலேயே கட்டிப் போட்டிருக்கிறது. சிறகை விரித்துப் பறக்கும் வரை உன்னால் எவ்வளவு தூரம் போக முடியும் என்று உனக்கே தெரியாது."
அந்தக் குட்டிப் பறவை தன் சந்தேகத்தை விட்டுவிட்டு, இறக்கைகளை விரித்து எழும்பியது. அடுத்த சில நிமிடங்களில் அது வானத்தில் சுதந்திரமாகப் பறந்து கொண்டிருந்தது! நாமும் பல நேரங்களில் இந்தக் குட்டிப் பறவையைப் போலத்தான் இருக்கிறோம்.

புதிய தொழில் தொடங்குவது, புதிய திறமையைக் கற்றுக்கொள்வது, வேலைக்கான நேர்காணலுக்குச் செல்வது, மேடையில் பேசுவது என எதுவாக இருந்தாலும், நம் திறமையைக் காட்டிலும் "நம்மால் முடியுமா?" என்ற இன்றைய சந்தேகமே நமது நாளைய வெற்றியைக் தடுத்து நிறுத்துகிறது. சந்தேகம் என்பது நம் மனதிற்குள் நாமே போட்டுக்கொள்ளும் வேலிகள். அந்த வேலிகளை உடைக்காதவரை, நமக்கான எல்லைகளை நம்மால் விரிவுபடுத்த முடியாது.
தோல்வி என்பது முயற்சியின் ஒரு பகுதி, ஆனால் சந்தேகப்படுவது முயற்சியைத் தொடங்கும் முன் அழிக்கும் ஒரு விஷயம்.
இன்றைய நாளில் நம் மனதிற்குள் எழும் 'என்னால் முடியுமா?' என்ற கேள்வியைத் தூக்கி எறிவோம். "என்னால் முடியும்!" என்ற நம்பிக்கையோடு நம் முதல் அடியை எடுத்து வைப்போம். சந்தேகங்கள் அகலும் இடத்தில்தான், சாத்தியங்கள் பிறக்கும்!




















