செய்திகள் :

Quote of the day: 'நாம் நாமாக இருப்பதே மாபெரும் சாதனை!' - ரால்ப் வால்டோ எமர்சன் தத்துவம்!

post image

"To be yourself in a world that is constantly trying to make you something else is the greatest accomplishment" – Ralph Waldo Emerson

(உங்களை வேறொருவராக மாற்றத் துடிக்கும் இந்த உலகில் நீங்கள் நீங்களாகவே இருப்பதுதான் மிகப்பெரிய சாதனை.)

Quote of the day ரால்ப் வால்டோ எமர்சன்
Quote of the day ரால்ப் வால்டோ எமர்சன்

இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்தில், மற்றவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே நாமும் மாற வேண்டும் என்ற மாயை நம் எல்லோருக்குள்ளும் இருக்கும்.

அடுத்தவர் கண்களுக்குப் பிடிப்பது போல நம்மை மாற்றிக்கொள்ள நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்நிலையில், நமது தனித்துவத்தின் மதிப்பை ஆழமாக உணர்த்தும் ஒரு அற்புதமான பொன்மொழி இது. இதை ஒரு குட்டிக்கதையுடன் பார்க்கலாம்.

ஒருமுறை ஒரு கழுகின் முட்டை, எதிர்பாராதவிதமாக ஒரு கோழிப் பண்ணையில் உள்ள முட்டைகளோடு கலந்துவிட்டது. சில நாள்களில் முட்டை பொரிந்து கழுகுக் குஞ்சு வெளியே வந்தது. அது தன்னை ஒரு கோழிக் குஞ்சாகவே நினைத்துக்கொண்டு மற்ற கோழிகளுடனேயே வளரத் தொடங்கியது.

கோழிகளைப் போலவே தரையைக் கிளறி இரை தேடியது; கோழிகளைப் போல சத்தமிட்டது; கோழிகளைப் போலவே சிறிது உயரம் மட்டுமே குதித்துப் பறந்தது.

Quote of the day ரால்ப் வால்டோ எமர்சன்
Quote of the day ரால்ப் வால்டோ எமர்சன்

ஒருநாள் அந்தக் கழுகுக் குஞ்சு வானத்தைப் பார்த்தபோது, ஒரு பெரிய கழுகு வானத்தின் உச்சியில் கம்பீரமாகச் சிறகடித்துப் பறப்பதைக் கண்டது. வியப்போடு மற்ற கோழிகளிடம், "அது என்ன பறவை? எவ்வளவு கம்பீரமாகப் பறக்கிறது! நாமும் அப்படிப் பறக்கலாமா?" என்று கேட்டது.

அதற்கு மூத்த கோழிகள் சிரித்துக்கொண்டே, "அதுதான் கழுகு, பறவைகளின் அரசன். ஆனால், நாம் வெறும் கோழிகள். நம்மால் அப்படியெல்லாம் வானத்தில் பறக்க முடியாது. அதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் தரையைக் கிளறி உணவைத் தேடு" என்றன.

அந்தக் கழுகுக் குஞ்சும் அதை நம்பியது. தன்னால் வானத்தில் பறக்க முடியும் என்ற தன் சுயத்தை அறியாமலேயே, தன் வாழ்நாள் முழுவதும் ஒரு கோழியாகவே வாழ்ந்து முடித்தது.

இந்தக் கதைக்கும் ரால்ப் வால்டோ எமர்சனின் பொன்மொழிக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்தக் கோழிக் கூட்டம்தான் நாம் வாழும் சமூகம்.

"நீ இப்படித்தான் ஆடை அணிய வேண்டும்", "இந்த வேலையைச் செய்தால்தான் உனக்கு மதிப்பு", "இப்படி வாழ்வதுதான் வெற்றி" என உலகம் நம்மைத் தொடர்ந்து ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக்கொண்டே இருக்கும்.

நமக்குள் ஒரு தலைசிறந்த கலைஞன், ஒரு சிறந்த விளையாட்டு வீரர் அல்லது ஒரு தனித்துவமான படைப்பாளி ஒளிந்திருக்கலாம். ஆனால், சுற்றியுள்ளவர்கள் தங்களின் அளவுகோலை வைத்து நம்மை வேறொருவராக மாற்றத் துடிப்பார்கள்.

Quote of the day ரால்ப் வால்டோ எமர்சன்
Quote of the day ரால்ப் வால்டோ எமர்சன்

அவர்களின் பேச்சைக் கேட்டு நம் இயல்பை அழித்துக்கொண்டால், வானத்தில் கம்பீரமாகப் பறக்க வேண்டிய நாம், மற்றவர்கள் வகுத்த பாதையிலேயே சாதாரணமான ஒரு கோழி வாழ்க்கையை வாழ நேரிடும். உலகம் நம்மை என்னவாக மாற்ற நினைத்தாலும், அதற்கு வளைந்து கொடுக்காமல் நம் சுயத்தோடு இருக்க வேண்டும்.

நம்முடைய மிகப்பெரிய பலமே நமது தனித்துவம்தான். உலகத்தில் உள்ள அனைவரும் ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்லும்போது, அதையே பின்பற்றி நடப்பது மிக எளிது. ஆனால், ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும், "என் மனம் சொல்வதைத்தான் கேட்பேன், நான் நானாகவே இருப்பேன்" என்று உறுதியோடு நிற்பது கடினம். அப்படி நிற்பதுதான் ஒரு மனிதனின் உண்மையான வெற்றி என்கிறார் எமர்சன்.

எனவே, அடுத்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக நம் சிறகுகளை வெட்டிக்கொள்ளக் கூடாது. நம்மை மற்றவர்களோடு ஒப்பிடக் கூடாது. நம் இயல்பான குணங்களை நேசிப்போம். நாம் நாமாக இருப்போம்.

Quote of the day: 'நம்பிக்கையே முதல் வெற்றி!' - அமெரிக்க முன்னாள் அதிபர் சொல்வதைக் கேளுங்கள்!

Believe you can and you're halfway there. – Theodore Roosevelt(உங்களால் முடியும் என்று நம்புங்கள்; நீங்கள் வெற்றியின் பாதி வழியைக் கடந்துவிட்டீர்கள்!)Quote of the day: நம்பிக்கையே முதல் வெற்றி; ஒவ்வொர... மேலும் பார்க்க

ஆதரவற்றவர் என்று யாரும் இல்லை: 100+ பெண் குழந்தைகளுக்குத் தாயான ‘அன்னை’ பிரகாஷ் கவுர் கதை!

"வாழ்க்கை என்பது நாம் என்ன பெற்றுக்கொண்டோம் என்பதில் இல்லை, மற்றவர்களுக்கு நாம் என்ன கொடுத்தோம் என்பதில் தான் அடங்கியிருக்கிறது." இந்த வரிகளுக்குச் சாட்சியாகத் திகழ்பவர் பஞ்சாபின் ஜலந்தரைச் சேர்ந்த பி... மேலும் பார்க்க