மீண்டும் சர்வதேச டென்னிஸ் மேடையாகும் சென்னை... நவம்பரில் தொடங்குகிறது WTA 250!
'அமெரிக்காவை Scam செய்கிறது இந்தியா' - வெள்ளை மாளிகை குற்றச்சாட்டு; செக் வைக்க ட்ரம்பின் புது ரூட்!
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து உலக நாடுகள் சந்தித்து வரும் மிகப்பெரிய தலைவலி - 'வரி'.
அமெரிக்காவை உலக நாடுகள் ஏமாற்றி, அதிக வரிகள் வசூலிக்கின்றன. அதனால், அந்த நாடுகள் மீது அதிக வரிகளை விதிக்கிறேன் என்று ட்ரம்ப் கூறி, அதற்கான ஒவ்வொரு நகர்வுகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
வழக்குகள், நீதிமன்ற தீர்ப்புகள் என எது வந்தாலும், ட்ரம்ப் உலக நாடுகளின் மீது வரி விதிக்க புதிய புதிய ரூட்களைக் கண்டுபிடித்துக் கொண்டே தான் இருக்கிறார்.
அப்போது உலக நாடுகளும் இந்த வரியில் இருந்து தப்பிக்க வழிகளைக் கண்டுபிடிக்காமலா போகும்?

என்ன மோசடி?
அமெரிக்கா தற்போது விதித்திருக்கும் வரிகளில் சில நாடுகளுக்கு குறைந்த வரிகளே விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகள் குறைந்த வரி கொண்ட நாடுகளுக்கு முதலில் தங்கள் பொருள்களை ஏற்றுமதி செய்து, அங்கிருந்து அந்தப் பொருள்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி ஆகின்றன.
இதன் மூலம், அந்த நாடுகள் அமெரிக்காவை வரி ஏய்ப்பு செய்கின்றன. இதற்கு பெயர், 'சரக்கு மாற்று மோசடி (Transshipment Scam)'.
இந்த மோசடியைக் கடுமையாக சாடி வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ள தரவுகள்...
கோல்ட்மேன் சாக்ஸ், அல்டானா மதிப்பீட்டின் படி, ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மறைமுக வர்த்தகத்தகம் $40 பில்லியன் டாலர் முதல் $303 பில்லியன் டாலர் (அல்டானா மதிப்பீடு) வரை இருக்கும்.
இதனால், அமெரிக்காவிற்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பு: கணக்கீடுகளின்படி ஆண்டுக்கு தோராயமாக $10 பில்லியன் முதல் $136 பில்லியன் டாலர் வரை இருக்கலாம்.
ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு (சராசரி அடிப்படையில்): சுமார் 4,50,000 வேலைவாய்ப்புகள் இழப்பு, $113 பில்லியன் முதல் $150 பில்லியன் டாலர் வரையிலான ஜிடிபி இழப்பு, மற்றும் $19 பில்லியன் முதல் $26 பில்லியன் டாலர் வரையிலான கூட்டாட்சி வருவாய் இழப்பு.

எந்தெந்த நாடுகள் மோசடியில் ஈடுபட்டுள்ளன?
இந்த மோசடியை கனடா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, இஸ்ரேல், ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகள் செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
இந்த மோசடியை பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்கள் (Agreements on Reciprocal Trade — ARTs), நிர்வாக உத்தரவு 14411, செயற்கை நுண்ணறிவு எல்லைக் கண்காணிப்பு ஆகியவற்றை மூலம் கண்டுபிடிக்க பிளான் செய்திருக்கிறது அமெரிக்க நிர்வாகம்.
> பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்கள்: புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் 'மூன்றாம் நாடுகளுக்குச் சலுகைகள் பெருமளவில் கிடைப்பதைத் தடுப்பதற்காகவே' பிரத்யேகமாக மூல இருப்பிட விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
> நிர்வாக உத்தரவு 14411: போலிச் சர்வதேச இறக்குமதியாளர்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற விநியோக சங்கிலிகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது இது.
இறக்குமதியாளர் பதிவுகளுக்கான விதிகளைக் கடுமையாக்குதல், பிணை/உள்நாட்டுச் சொத்துத் தேவைகளை உயர்த்துதல், நிறுவன உரிமையாளர்கள்/இணைப்புகள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்துவதைக் கட்டாயமாக்குதல், தகுதித் தேவைகளைச் சேர்ப்பது, தண்டனைகளைக் கடுமையாக்குவது மற்றும் வர்த்தக வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது ஆகியவை இதில் அடங்கும்.
> செயற்கை நுண்ணறிவு எல்லைக் கண்காணிப்பு: அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறைக்கான (CBP) ஓர் அதிநவீன AI/ML தொழில்நுட்ப அமைப்பாகும்.
இது சரக்கு அனுப்பப்பட்ட தரவுகள், வழித்தட வரலாறுகள், பொருள் வகைப்பாடுகள், நிறுவன உரிமைத் தொடர்புகள், செயற்கைக்கோள்/கணினிப் படக் காட்சிகள் மற்றும் முரண்பாடுகளைக் கண்டறியும் முறைகள் ஆகியவற்றைப் ஒருங்கிணைத்து, அதிக ஆபத்துள்ள சரக்குகளைக் கண்டறிகிறது.
மேலும், அந்தத் தகவல்களைச் சோதனைகள், அபராதங்கள் மற்றும் வரிகளை வசூலிக்கும் நடவடிக்கைகளாக மாற்றுகிறது.
Make America Great Again என்கிற பிரசாரத்தின் மூலம் தான் தற்போதைய ஆட்சியைப் பிடித்திருக்கிறார் ட்ரம்ப். அதன் ஒரு நடவடிக்கை தான் இதுவும் என்று கூறப்படுகிறது.












