`முதல்வர் அறையை நவீனமாக மாற்றுகிறார்; அவர் நடிகர் ஆடம்பரமாக தான் இருப்பார்'- எடப...
கரூர்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய வழக்கு; நியமன ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடை
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையைத் தமிழக அரசு வழங்கியிருந்தது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன் மற்றும் வழக்கறிஞர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, ``கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஆனால், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்கியதில் இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. அரசு நினைத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் திறன் பயிற்சி அளித்து வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கலாம். அதைத் தவிர்த்து அரசாணை பிறப்பித்ததை ஏற்க முடியாது" எனக் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணையை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், `கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. ஆனால் உயர் நீதிமன்றம் இதனைச் சரியாகக் கருத்தில் கொள்ளாமல் அரசாணையை ரத்து செய்துள்ளது. எனவே, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்குத் தடை விதித்து, அதனை ரத்து செய்ய வேண்டும்' எனத் தமிழக அரசு கோரியது.
அதேபோல அரசு வேலையை பெற்றிருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்
இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது
தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனுசிங்வி முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
``அரசு வேலை வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம் இதில் இவர்களுக்கு தான் அரசு வேலை வழங்க வேண்டும் இவர்களுக்கு வழங்கக் கூடாது என நீதிமன்றங்கள் எப்படி சொல்ல முடியும்? எனவே இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் நேரடியாக தலையிட்டுள்ளது. இது நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு மீறியது அது மட்டும் இல்லாமல் கருணை அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவை அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தை நாடி தடை வாங்கி இருக்கிறார்கள்' என தமிழ்நாடு அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அப்போது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன் தரப்பு வழக்கறிஞர், ``ஏற்கெனவே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு கட்சி சார்பாகவும் அரசு சார்பாகவும் நிதி உதவிகள் வழங்கப்பட்டு விட்டது. பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பிறகு அரசு வேலை என்பதையும் கொடுத்து இருக்கிறார்கள். ஒரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி எத்தனை நிவாரணங்களை வழங்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ``முதலில் நீங்கள் யார்... எதற்காக இந்த மனுவை தாக்கல் செய்தீர்கள்?" என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி தரப்பு வழக்கறிஞர், தான் ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவர் என பதில் அளித்தார்.
``தெரியும் இப்படியான வழக்குகளை அரசியல் கட்சிகள் தான் தாக்கல் செய்வீர்கள். உங்களது அரசியலை எல்லாம் இங்கு காட்டாதீர்கள். கரூரில் நடந்தது என்பது மிகவும் துயரமான சம்பவம். துரதிஷ்டவசமான விஷயம். அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஆனால் நடந்து விட்டது. இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு கருணை அடிப்படையில் வேலை வழங்க முன் வந்திருக்கிறது. அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? இதனால் நீங்கள் எதுவும் பாதிக்கப்பட போகிறீர்களா" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
பிறகு எதிர்மனுதாரர்கள் தரப்புக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர். மேலும் அரசு பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டனர்.


















