செய்திகள் :

இப்போதே முன்னிறுத்தப்படும் ராகுல்: காங்கிரஸின் `இருபக்க கூர் கத்தி' கை கொடுக்குமா? கையை கிழிக்குமா?

post image

2029 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், தேசிய அரசியலில் அதற்கான காய்நகர்த்தல்கள் தற்போதே தொடங்கிவிட்டன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்து மிக முக்கியமான குரல் ஒன்று ஒலித்துள்ளது.

'2029 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்திதான் எங்கள் பிரதமர் வேட்பாளர்' என்ற விவாதத்தை, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவருமான மாணிக்கம் தாகூர் பொதுவெளியில் தொடங்கி வைத்துள்ளார்.

இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கும்போதே காங்கிரஸ் ஏன் ராகுல் காந்தியை இப்போதே முன்னிறுத்துகிறது? இதனால் காங்கிரஸ் மற்றும் 'இந்தியா' (INDIA) கூட்டணிக்குக் கிடைக்கப்போகும் லாப-நஷ்டங்கள் என்ன?

இதற்கு முந்தைய தேர்தல்களில் ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாரா? இக்கேள்விகளுக்குப் பின்னால் இருக்கும் ஆழமான அரசியல் கணக்குகளை விரிவாகப் பார்ப்போம்.

பிரதமர் வேட்பாளரும் ராகுல் காந்தியின் கடந்த கால தேர்தல்களும்

கடந்த மூன்று பொதுத்தேர்தல்களாக காங்கிரஸ் கட்சியின் முகமாக ராகுல் காந்திதான் செயல்பட்டு வருகிறார். ஆனால், உண்மை என்னவென்றால், காங்கிரஸ் கட்சி இதுவரையில் எந்தவொரு தேர்தலிலும் ராகுல் காந்தியை 'அதிகாரப்பூர்வமாக' பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதே இல்லை.

2014 பொதுத்தேர்தல்:

பத்து ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், அடுத்த முறை தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். அப்போது நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகமாக இருந்தது.

மோடி, ராகுல் காந்தி

ஆனால், சோனியா காந்தி அதனைத் தடுத்தார். "தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் கலாச்சாரம் காங்கிரஸில் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார். அப்போது பாஜக நரேந்திர மோடியை முன்னிறுத்தி தீவிரப் பிரச்சாரம் செய்தது. ராகுலை வேட்பாளராக அறிவித்தால், ஒட்டுமொத்த தேர்தலும் 'மோடி Vs ராகுல்' என்ற தனிநபர் மோதலாக மாறிவிடும் என காங்கிரஸ் அஞ்சியது. இதனால், ராகுல் பிரச்சாரக் குழு தலைவராக மட்டுமே செயல்பட்டார்.

2019 பொதுத்தேர்தல்:

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்து தேர்தலை முன்னின்று நடத்தினார். ஆயினும், அப்போதும் அவர் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பின் எம்பிக்கள் இணைந்தே பிரதமரை முடிவு செய்வார்கள் என்ற நிலைப்பாடே தொடர்ந்தது.

2024 பொதுத்தேர்தல்:

'இந்தியா' கூட்டணி உருவான பிறகு, கூட்டணியின் ஒற்றுமை சிதைந்துவிடக் கூடாது என்பதற்காக, பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே தேர்தலைச் சந்தித்தனர்.

ஆனால், தற்போது 2026ஆம் ஆண்டிலேயே 2029க்கான பேச்சை காங்கிரஸ் தொடங்கியிருப்பதற்குப் பின்னால் நான்கு முக்கிய வியூகங்கள் உள்ளன.

இப்போதே முன்னிறுத்துவதால் காங்கிரஸுக்கு உள்ள நன்மைகள்

மாற்றமில்லாத தேசிய முகம் :

தேசிய அளவில் பாஜகவையும் நரேந்திர மோடியையும் எதிர்க்க வலுவான ஒரு முகம் தேவை. ராகுல் காந்தி தனது 'பாரத் ஜோடோ யாத்திரை' மூலமாகவும், தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் மூலமாகவும் மக்களிடம் ஒரு முதிர்ச்சியான தலைவராகப் பதிந்துள்ளார். தற்போதே அவரை முன்னிறுத்துவது, 'பாஜகவிற்கான மாற்று நாங்களும்தான், எங்கள் தலைவர் இவர்தான்' என்ற தெளிவை மக்களுக்கு வழங்கும்.

உட்கட்சி குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி :

காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு மாநிலங்களில் நிலவும் கோஷ்டி பூசல்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும். 'அடுத்த தலைவர் யார்?' என்ற கேள்விக்கு இடமின்றி, ராகுல் காந்திதான் சுப்ரீம் என்ற செய்தி தொண்டர்களுக்கும் சீனியர் தலைவர்களுக்கும் தெளிவாகச் சென்றடையும். இது தொண்டர்களை இப்போதிலிருந்தே உற்சாகப்படுத்தும்.

ராகுல் காந்தி

நீண்ட கால பிரச்சாரத் திட்டம் :

தேர்தல் நேரத்தில் அவசரமாக முடிவெடுக்காமல், இன்னும் மூன்று ஆண்டுகள் இருப்பதால் ராகுல் காந்தியின் பிம்பத்தை இன்னும் வலுவாகக் கட்டமைக்க முடியும். அவருடைய கொள்கைகள், பொருளாதார மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தாராளமான கால அவகாசம் கிடைக்கும்.

கூட்டணியில் அதிகாரம் :

பிராந்தியக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசும்போது, காங்கிரஸ் தன்னை ஒரு 'பெரிய அண்ணன்' இடத்தில் வைத்துப் பேச இது உதவும். 'நாங்கள் தான் பிரதமரைத் தீர்மானிக்கும் கட்சி' என்ற பிம்பம் அதிக இடங்களைக் கேட்டுப் பெற உதவும்.

இதில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளும் பாதகங்களும்

நாணயத்திற்கு இருபக்கம் இருப்பது போல, இந்த வியூகத்தில் மிகப்பெரிய சவால்களும் ஆபத்துகளும் உள்ளன:

'மோடி Vs ராகுல்' விவாதம்:

பாஜக இதைத்தான் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியை முன்னிறுத்தினால், பாஜக உடனே 'வாரிசு அரசியல்' மற்றும் 'அனுபவமின்மை' போன்ற தங்களின் பழைய ஆயுதங்களைக் கையில் எடுத்துத் தனிநபர் தாக்குதல்களைத் தொடுக்கும். இதனால் மக்கள் பிரச்சினைகள் திசைமாறி, விவாதம் முழுவதும் ராகுல் காந்தியைச் சுற்றியே அமைய வாய்ப்புள்ளது.

பிராந்திய தலைவர்களின் அதிருப்தி:

'இந்தியா' கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி, சரத் பவார், நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் ராகுல் காந்தியை விட சீனியர்கள். அவர்கள் ராகுலைத் தங்களுக்குச் சமமான தலைவராக ஏற்றுக் கொண்டாலும், தங்களுக்கு மேலிருக்கும் ஒரு 'பாஸ்' ஆக ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள்.

"எங்களைக் கலந்தாலோசிக்காமல் எப்படி முடிவெடுக்கலாம்?" என்ற ஈகோ பிரச்சினைகள் கூட்டணிக்குள் வெடிக்கக் கூடும்.

சரத் பவார்

கடந்த கால தேர்தல் தோல்விகள் : 2014 மற்றும் 2019 தேர்தல்களில் ராகுல் காந்தியை நம்பிக் களம் இறங்கியபோது ஏற்பட்ட தோல்விகளை பாஜக மீண்டும் தோண்டித் துருவி பிரச்சாரமாக்கும்.

2024-ல் காங்கிரஸ் 99 இடங்களுடன் கம்பேக் கொடுத்திருந்தாலும், தனிப் பெரும்பான்மை பெறும் அளவிற்கு இன்னும் வளரவில்லை என்ற யதார்த்தத்தையும் மறுப்பதற்கில்லை.

'இந்தியா' கூட்டணியின் எதிர்வினை எப்படி இருக்கும்?

காங்கிரஸ் கட்சி தயங்கிய போதும் கூட ராகுல் காந்தியை பிரதமர் முகமாக முதல் முதலாக அறிவித்தது திமுக தான். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தியை வருக நல்லாட்சி தருக என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். ஆனால் அதே திமுகவுடன் தற்போது காங்கிரஸ் கட்சி மிக கசப்பான முறையில் உறவை துண்டித்து இருக்கிறது.

இதை இந்தியா கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகள் யாரும் ரசிக்கவில்லை. கடந்த ஜூன் 8-ம் தேதி டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட தங்களது அதிருப்தியை அவர்கள் காங்கிரஸ் மீது வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஸ்டாலின் - ராகுல் காந்தி
ஸ்டாலின் - ராகுல் காந்தி

அது மட்டுமில்லாமல் மேற்கு வங்கம், அஸ்ஸாம் என பல மாநில தேர்தல்களிலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் தோல்வியை தான் தழுவி இருக்கிறது.

எனவே அவர்கள் அனைவருமே வலுவிழந்து போயிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு மட்டும் அவர்கள் முழு மனதுடன் சம்மதிப்பார்களா என்பது கேள்விக்குறி தான்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இதனை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார். அதேபோல், டெல்லி மற்றும் பஞ்சாபில் காங்கிரஸுடன் நேரடிப் போட்டியில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் ராகுலை முன்னிறுத்துவதை விரும்பாது. சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்களும் இதற்கு உடன்படுவது கடினம்.

இதனால், தேர்தலுக்கு முன்பே கூட்டணிக்குள் விரிசல் விழ வாய்ப்புள்ளது. பாஜகவை ஒன்றாக எதிர்ப்பதை விடுத்து, 'யார் பிரதமர்?' என்ற சண்டை கூட்டணிக்குள் வந்து, அது வாக்கு வங்கியைப் பிரிக்கக்கூடும்.

சுருங்கக்கூறின், 2029 தேர்தலுக்கு இப்போதே ராகுல் காந்தியை முன்னிறுத்துவது என்பது காங்கிரஸைப் பொறுத்தவரை இருபக்கமும் கூர் உள்ள கத்தி போன்றது. சரியாகக் கையாண்டால் இலக்கைத் தாக்கலாம்.

தவறினால் சொந்தக் கைக்கே ஆபத்தாக முடியும். காங்கிரஸின் உட்கட்சி பலத்திற்கும், ராகுலின் தலைமைத்துவத்திற்கும் இது முக்கியம் என்றாலும், 'இந்தியா' கூட்டணியின் ஒற்றுமையைக் குலைக்காமல் இதனை அவர்கள் எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பதில்தான் 2029 தேர்தலின் மாஸ்டர் கேம் அடங்கியுள்ளது.!

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க

ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இந்த நேரத்தில், ஈரானில் உள்ள 'ஹம்ஷஹ்ரி' என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குற... மேலும் பார்க்க