’கோவை தவெக-வில் உட்கட்சிப் பூசலா?’ – சூலூர் எம்.எல்.ஏ சுகுமார் விளக்கம்!
`இரானின் துருப்புச்சீட்டு' - போர் நிறுத்த மீறல்களும், மீண்டும் வெடித்த இரான் அமெரிக்க மோதல்களும்!
இரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய `ஜூன் 17 போர் நிறுத்தப் புரிந்துணர்வு' ஒப்பந்தம் ஏற்பட்டு சற்றேறக்குறைய மூன்று வாரங்களுக்குள் மீண்டும் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே தாக்குதல்கள் வெடித்திருக்கின்றன.
புரிந்துணர்வு ஒப்பந்தம் “முடிந்துவிட்டது” என்றும் இரானின் மீது அமெரிக்கத் தாக்குதல்கள் தொடரும் என்றும் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டின் போது அதிபர் ட்ரம்ப் அறிவித்த நிலையில் , இரானின் 90 இலக்குகள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தின.
இரானும் , இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளான பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்த முயன்றிருக்கிறது. பல அரபு நாடுகளில் வான் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்த வண்ணம் இருக்கின்றன.

போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 60 நாட்களுக்காவது அப்பகுதியில் அமைதியைக் கொண்டுவந்து, ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலமாக ஒரு நிரந்தர அமைதிக்கு இட்டுச்செல்லும் என்ற ஆரம்ப கட்ட நம்பிக்கை சிலரிடம் இருந்தது. அதுவும் இப்போது பொய்த்துப் போயிருக்கிறது.
வளைகுடாப் பகுதியில் ஹோர்மூஸ் நீரிணையில் சென்ற எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்கள் மூன்றின் மீது ஜூலை முதல் வாரத்தில் இரான் நடத்திய குண்டுத்தாக்குதல்களே இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறியக் காரணம் என்று அமெரிக்கத் தரப்பில் கூறப்படுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஹோர்மூஸ் நீரிணையில் சுதந்திரமான , கட்டுப்பாடற்ற கப்பல் போக்குவரத்தை இரான் 60 நாட்களுக்கு மட்டுமாவது அனுமதிக்க வேண்டும் என்ற பிரிவை இத்தாக்குதல்கள் மீறிவிட்டன என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.
ஆனால், இரான் இந்த நீரிணை மீது கட்டுப்பாடுகளை ஏதாவது ஒரு வகையில் தொடர்வதை அனுமதிக்கும் வகையில் இந்த ஒப்பந்த வாசகங்கள் இருக்கின்றன என்பது இரானியத் தரப்பு வாதம்.
இரான் இந்தப் போர் நிறுத்தத்தின் பின்னரும் வளைகுடாப் பகுதிக்கு வந்து செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் மீது தீர்வையை வசூலித்துக்கொண்டிருந்தது என்றும், தீர்வையை செலுத்தாமல் செல்ல முயன்ற கப்பல்கள் மீதே தாக்குதல்கள் நடந்தன என்றும் கூறப்படுகிறது.
போர் நிறுத்தம் முடிந்துவிட்டது என்று அறிவித்த பின்னர், ட்ரம்ப், சுதந்திரக் கப்பல் போக்குவரத்தை நிலைநாட்ட அமெரிக்கா எடுக்கும் ராணுவ நடவடிக்கைகளுக்காக, அப்பகுதியில் வந்து செல்லும் கப்பல்கள் 20 சதவீதம் தீர்வையை அமெரிக்காவுக்கு செலுத்த வேண்டும் என்று மற்றொரு சர்ச்சையைக் கிளப்பினார்.
சர்வதேசக் கடல் வழிகள் ஊடாக எந்த நாட்டுக் கப்பல்களும் பயணிப்பது சர்வதேச கடல் வழி போக்குவரத்து சட்ட சார்ந்த உரிமை என்ற கோட்பாட்டுக்காகவே அமெரிக்கா இரான் மீது முதலில் போர் தொடுத்ததாக சொன்னாலும், இப்போது அதே கடல் வழிப் போக்குவரத்தை உறுதி செய்கிறேன் என்ற பெயரில் 20 சதவீதம் தீர்வை கேட்பது அமெரிக்காவின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாட்டைக் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், ட்ரம்ப் அறிவித்த இந்தத் தீர்வை எப்படி வசூலிக்கப்படும் என்பது தெளிவாகாத நிலையில், ட்ரம்ப்பின் அறிவிப்பாலும், போர் நிறுத்தம் முடிந்தது என்ற யதார்த்தத்தாலும், சர்வதேச எண்ணெய் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கின.

கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் ( barrel) 80 அமெரிக்க டாலர்கள் என்று கொள்முதல் விலை இருக்கும்போது , அதன் மீது ஒரு பீப்பாய்க்கு 10 அமெரிக்க டாலர்கள் கப்பல் நிறுவனங்கள் ஏற்கனவே சரக்குக் கூலி (handling charge) என்று விதிக்கும் நிலையில், ட்ரம்ப்பின் இந்த 20 சதவீத வரி, பீப்பாய் எண்ணெய் விலையை சுமார் 96லிருந்து 105 டாலர்கள் என்ற அளவுக்கு கொண்டு செல்லும் என்று எண்ணெய் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்தனர். அந்த விலை உயர்வு உலகப் பொருளாதாரத்தை மற்றொரு தேக்க நிலைக்கு இட்டுச்செல்லும் என்ற அச்சங்களும் எழுந்தன.
போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தந்த 60 நாட்கள் கால அவகாசத்தை இரு தரப்புகளுமே சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் மத்தியக் கிழக்குப் பகுப்பாய்வாளர்களின் கருத்து.
ஒப்பந்தத்தில் முடிவு காணவேண்டிய அம்சங்களாக
1) இரானின் அணு சக்தி திட்டங்களுக்கு முடிவு கட்டுவது
2) ஹோர்மூஸ் நீரிணையின் எதிர்காலம்
3) இரானின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை அகற்றுதல்
4) மற்றும் கடல் வழிப் போக்குவரத்து பாதுகாப்புப் பிரச்சனைகள் போன்றவைகள் இருந்தன.
இந்தப் பிரச்சனைகளுக்கு ஒப்பந்தம் ஏற்பட்ட 60 நாட்களுக்குள் தீர்வு காணப்படவேண்டும். அது வரை ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து சுதந்திரமாக, கட்டுப்பாடுகள் அற்ற நிலையில் மேற்கொள்ளப்படுவதை இரான் உறுதி செய்யவேண்டும் என்பது ஒப்பந்தம்.
இந்தப் பிரிவு தனக்கு ஹோர்மூஸ் நீரிணை மீது ஏதோ ஒருவகையில் கட்டுப்பாடுகளை விதிக்க உரிமை இருப்பதை ஒப்புக்கொள்வதாக இரான் அர்த்தப்படுத்தியது. ஆனால் அமெரிக்காவோ, அதை மறுத்து, 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்து முடிந்து ஹோர்மூஸ் நீரிணைப் போக்குவரத்து சுதந்திரமாக நடைபெறுவதை உறுதி செய்வதைத்தான் அந்த ஒப்பந்தம் சொன்னதாகக் கூறுகிறது.

இந்த நிலையில் இரு தரப்புகள் இடையே சுவிட்சர்லாந்தில் அவ்வப்போது நடந்த பேச்சு வார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால் ஒப்பந்தம் போடப்பட்ட பத்து நாட்களிலேயே ஜூன் 25 தேதியன்று, இரான் ஹோர்முஸ் நீரிணையில் சென்ற கப்பல் ஒன்றின் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியது அமெரிக்காவால் போர் நிறுத்த மீறலாகப் பார்க்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கா இரானின் சில இலக்குகள் மீது குண்டுத்தாக்குதல்களை நடத்த, அதற்கு பதில் தாக்குதலாக இரானும் அண்டை நாடுகளில் உள்ள சில அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
இந்தப் போக்கு அவ்வப்போது தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில்தான் ஜூலை 7 ம் தேதி நடந்த இரானியத் தாக்குதல்களும் அதற்கு பதிலடியாக அமெரிக்காவின் தீவிரத் தாக்குதல்களும் நடந்தேறி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை “ செத்துப் போய்விட்டது” என்று ட்ரம்ப் வர்ணிக்கவைத்திருக்கின்றன.
இரானியர்களைக் கடுமையாக சாடிய ட்ரம்ப், இரானிய ஆட்சியாளர்கள் “ மன நோய் பீடித்தவர்கள்” (sick people) “மோசமானவர்கள்” ( scum) என்றெல்லாம் தகாத வார்த்தைகளால் விமர்சித்தார். இரானிய ஊடகங்களும் பதிலுக்கு கடுமையாக அமெரிக்காவை விமர்சித்தன.
போரின் முதல் நாளன்று ( பிப்ரவரி 28) அமெரிக்க குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட இரானின் அதி உயர் தலைவர் அயோதுல்லா கமேனின் உடல் அடக்கம் செய்யப்படும் நிகழ்வு கடந்த வாரம் நடந்தபோது, பல லட்சக்கணக்கான மக்கள் “அமெரிக்காவுக்கு சாவு” “ட்ரம்ப்பைக் கொல்வோம்” என்றெல்லாம் முழங்கியது இரு தரப்பு உறவுகளில் பெரும் சூட்டைக் கிளப்பியது.
இனி அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி ஒரு தெளிவு இன்னும் ஏற்படவில்லை.
ஹோர்மூஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் மீது அமெரிக்கா 20 சதவீத தீர்வை விதிக்கும் என்ற அறிவிப்பை செவ்வாய்க்கிழமை திரும்பப்பெற்றுக்கொண்ட ட்ரம்ப், ஆனால் இந்த தீர்வைக்குப் பதிலாக, அமெரிக்காவின் ராணுவப் பாதுகாப்பினால் பலனடையும் வளைகுடா நாடுகளும், எண்ணெய்க் கம்பெனிகளும் அமெரிக்காவில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று கோரினார்.
இந்த கோரிக்கை எப்படி நிறைவேறும் என்பதும் தெரியவில்லை.
ஏற்கனவே வளைகுடா நாடுகளில் பெரும்பாலான நாடுகள் அமெரிக்க ராணுவப் பாதுகாப்பில்தான் இருக்கின்றன. அவைகளின் பொருளாதாரங்களுக்கும் அமெரிக்கத் தொழில் நுட்பம் முக்கிய உதவிகளை வரலாற்று ரீதியாகச் செய்திருக்கிறது என்ற நிலையில், அமெரிக்கா ஏற்கனவே வளைகுடா நாடுகளை அமெரிக்காவில் பல பிலியன் டாலர்கள் முதலீடுகளைச் செய்ய வைத்திருக்கிறது.
எனவே இப்போது இந்த ராணுவ நெருக்கடியைப் பயன்படுத்தி, வளைகுடா நாடுகளின் முதலீடுகளை ட்ரம்ப் மேலும் கொஞ்சம் பெறலாம். அது பெரிய பிரச்சனை அல்ல.

ஆனால் எந்த அளவுக்கு முதலீடுகளை அவர் எதிர்பார்க்கிறார், அதை சட்ட ரீதியாக அமல்படுத்த முடியுமா, அதை செய்யும் நிறுவன ரீதியான கட்டமைப்பு அமெரிக்காவிடம் இருக்கிறதா என்பதெல்லாம் பதில் தெரியாத கேள்விகள்.
இந்த மாதிரி ஒரு நாள் தீர்வை விதிப்பேன் என்பது, அடுத்த நாள் தீர்வை இல்லை ஆனால் முதலீடு வேண்டும் என்பது போன்ற நிலையற்ற பேச்சுகள் ட்ரம்ப்பின் அதிரடி பாணி அரசியல் என்கிறார்கள் நோக்கர்கள்.
அவர் உண்மையில் இதை ஒரு சர்வதேச அரசியல் கொள்கையாக அறிவிக்காமல், வளைகுடா நாடுகள் மீது அழுத்தம் தரும் ஒரு யுக்தியாகப் பயன்படுத்துகிறார், அதே போல, நேட்டோ போன்ற மேற்குலகப் பாதுகாப்பு அமைப்புகளிடம் தான் எந்த அளவுக்கு பலம் வாய்ந்தவர் என்ற தோற்றத்தை வெளிப்படுத்தவும் இதைப் பயன்படுத்துகிறார், இதைவிட முக்கியமாக, அமெரிக்காவில் வரும் நவம்பரில் நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல்கள் வரும் நிலையில், உள் நாட்டு அரசியலில் இதை ஒரு பிரசார விஷயமாகவும் பயன்படுத்தவே இதைச் செய்கிறார் என்றெல்லாம் கருத்துகள் வந்துள்ளன.
வளைகுடா நாடுகள், இஸ்ரேல் நிலை
எது எப்படி இருந்தாலும் வளைகுடா நாடுகளைப் பொறுத்தமட்டில், போர் இல்லாத நிலை நீடித்தால் போதும் என்ற கருத்தே இருக்கிறது.
இரானின் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களை கண்டித்த வளைகுடா நாடுகளின் கூட்டுறவு கவுன்சில் ( GCC) அமெரிக்காவும் இரானும் , மோதல்களைத் தவிர்த்து, மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு நிரந்தர அமைதிக்கு வழிகாணவேண்டும் என்று கோரியிருக்கிறது.
தற்போதைய இந்த நிலையில், இஸ்ரேல் என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பதும் முக்கியமான விஷயம். இந்தப் போரே இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூவின் பிரயத்தனத்தால் ஏற்பட்ட ஒன்று என்று பல ஊடகங்கள் சொல்லியிருக்கின்றன . ட்ரம்ப் ஜூன் மாதம் செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இஸ்ரேலின் ஆலோசனைகளை மீறி ஏற்படுத்தப்பட்டது. எனவே அந்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் மகிழ்ச்சியாக இல்லை.
இப்போது போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்று ட்ரம்பே அறிவித்து அமெரிக்கா மீண்டும் இரானின் மீது தாக்குதல்களைத் தொடங்கியிருக்கும் நிலையில், இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களில் இன்னும் வெளிப்படையாக சேரவில்லை.

அதற்குக் காரணம் போர் குறித்த இஸ்ரேலியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சலிப்பும், பெஞ்சமின் நெதன்யாகு மீது உள்நாட்டில் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் மீறி நெதன்யாகுவும் போரில் குதித்தால் மீண்டும் மத்தியக்கிழக்குப் பகுதியில் முழு கொந்தளிப்பு ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
இரான் ராணுவ ரீதியாக கடந்தகால அமெரிக்கத் தாக்குதல்களால் பலவீனமடைந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால் ஹோர்மூஸ் நீரிணை வழியாக போக்குவரத்தை நிறுத்தும் வல்லமையை அது இன்னும் வைத்திருக்கிறது. அதுதான் அதற்கிருக்கும் ஒரே துருப்புச்சீட்டு.
ராணுவரீதியாக அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணியால் நசுக்கப்படும் நிலை வரும் போது, அண்டை நாடுகளின் அமைதியைக் குலைக்கவும், அதன் மூலம் உலகப் பொருளாதாரத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தவும் இரானிடம் இன்னும் வலிமை இருக்கிறது. இது நீடிக்கும் வரை, மத்தியக்கிழக்குப் பகுதியில் இந்த முட்டுக்கட்டை நிலையும் நீடிக்கும் என்றே தோன்றுகிறது.!















