Iran: "எனக்கு அடுத்து ஈரானின் தலைவர்..." - அயதுல்லா கமேனி யார், யாரைப் பரிந்துரை...
ஈரான் - இஸ்ரேல் போர்: துபாய் மீதான தாக்குதல்; ட்ரம்பின் சொத்துகள் சிதைக்கப்பட்டனவா?
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று தாக்குதல் நடத்தின. அதற்குப் பதிலடியாக ஈரான், அமெரிக்காவின் ராணுவப் பிரிவுகள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.
அதன் ஒருபகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்குச் சொந்தமான துபாய் சொத்துகள் குறிவைக்கப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன.

ஈரானின் ஏவுகணைகள் துபாயின் முக்கிய இடங்களான 'பாம் ஜுமேரா' (Palm Jumeirah) மற்றும் புகழ்பெற்ற 'புர்ஜ் அல் அரப்' (Burj Al Arab) ஹோட்டலுக்கு அருகிலுள்ள பகுதிகளில் விழுந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அங்கு பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டு, கரும்புகை சூழ்ந்துள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், துபாயில் 'ட்ரம்ப் இன்டர்நேஷனல் கோல்ஃப் கிளப்' மற்றும் 'ட்ரம்ப் எஸ்டேட்ஸ்' போன்ற ஆடம்பரக் குடியிருப்புகள் உள்ளன. தற்போது 'ட்ரம்ப் டவர் துபாய்' கட்டுமானப் பணிகளும் நடந்துவருகின்றன.
இந்த நிலையில், ''ஈரான் தாக்குதலில் பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ட்ரம்ப் குடும்பத்தின் முக்கிய முதலீட்டு மையங்கள் தகர்க்கப்பட்டன" என்ற வாசகத்துடன் பல பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

ஆனால் இதுவரை உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட இடங்கள் ட்ரம்ப் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்பதை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் நேரடி ஏவுகணைத் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.












