'8 மாத கர்ப்பிணியான நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர் மீது திமுக-வினர் தாக்குதல்'...
'உன்னை இங்கேயே போட்டுருவேன்!' - தவெக வேட்பாளரை மிரட்டிய சேகர் பாபு?
துறைமுகம் தொகுதியில் வாக்குப்பதிவு முடிவடைய இருந்த சமயத்தில் அமைச்சர் சேகர் பாபுவும் தவெக வேட்பாளர் சினோரா அசோக்கும் நேருக்கு நேராக மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சேகர் பாபுவை எதிர்த்து தவெக சார்பில் சினோரா அசோக் என்பவர் போட்டியிட்டிருந்தார். பிரசாரத்தின் போதே இருதரப்புக்கும் இடையே வார்த்தை மோதல்கள் கடுமையாக நடந்திருந்தது. சேகர் பாபு தன்னுடைய குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுப்பதாக சினோரா அசோக் பிரசாரத்திலேயே குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இன்று வாக்குப்பதிவு நிறைவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக மாலை 5:20 மணியளவில் சேகர் பாபுவும் சினோரா அசோக்கும் தங்களது ஆதரவாளர்களோடு நேருக்கு நேராக மோதிக் கொண்டனர். காவல்துறையினரும் துணை ராணுவப்படையினரும் வந்தே இருதரப்பையும் விலக்கி வைத்தனர்.

மோதலுக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த சினோரா அசோக், 'நாங்கள் எங்களின் கூட்டணி கட்சியான மனித நேய ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இருந்தோம். அப்போது சேகர் பாபு அவரது ஆதரவாளர்களோடு அங்கே வந்து எங்களின் அட்வகேட் விஜயகுமாரை தாக்க முயன்றார். 'என்னனு சொல்லுங்க பேசலாம்' என்றேன். உடனே, 'உன்னை இங்கேயே போட்டுருவேன்' என மிரட்டி என்னுடைய வயிற்றில் செல்போனால் நான்கு முறை குத்தினார். சில பூத்களையும் சேகர் பாபு தனது ஆதரவாளர்களுடன் கைப்பற்ற முயன்றார்' என்றார்.












