`எங்கள் வீட்டில் அப்படி இல்லை... அது ஈகோவால் வருவதாக நினைக்கிறேன்' - மனம் திறந்த...
என்னை தோற்கடிக்க முடியாது! - கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஆம் ஆத்மி MP ராகவ் கட்சி மாறுகிறாரா?
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சதா மாநிலங்களவையில் அக்கட்சியின் துணைத்தலைவராக இருந்தார். ஆனால் திடீரென அவரை அந்த பதவியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விடுவித்துள்ளது. துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் நீக்கப்பட்டது குறித்து மாநிலங்களவை செயலாளரிடம் ஆம் ஆத்மி முறைப்படி தெரிவித்ததுடன், ராகவுக்கு சபையில் பேசும் நேரத்தை ஒதுக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. ராகவ் சமீப காலமான ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்ற கூட்டம் எதிரிலும் பங்கேற்றது கிடையாது.
இதனால் அவருக்கும், கட்சி தலைமைக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இனி தனக்கு பாராளுமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைக்காது என்று ராகவ் தெரிவித்துள்ளார்.

கட்சியின் துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ராகவ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், பொதுப் பிரச்னைகளை எழுப்பி இருக்கிறேன். பாராளுமன்றத்தில் அரிதாக விவாதிக்கப்படும் தலைப்புகளை எழுப்புவேன்.
மக்கள் பிரச்னைகளை எழுப்புவது அல்லது பொது பிரச்னைகளை பேசுவது குற்றமா? நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா? ராகவ்-ஐ பார்லிமென்டில் பேச விடாமல் தடுக்க வேண்டும் என, ஆம் ஆத்மி கட்சி, ராஜ்யசபா செயலகத்திடம் கேட்டதால், இன்று இந்த கேள்வியை கேட்கிறேன். என்னைப் பேசவிடாமல் தடுக்க விரும்புவது ஏன்? நான் எப்போதும் பொது மக்களுக்காக பேசுகிறேன். விமான நிலையங்களில் விலையுயர்ந்த உணவுகள் விற்கப்படுவதைப் பற்றியும், தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பற்றியும் பேசினேன்.
உணவுக் கலப்படம் பிரச்சனையை எழுப்பினேன். சுங்கச்சாவடி, வங்கிக் கொள்ளை, வரி செலுத்துவோர், ப்ரீபெய்ட் மொபைல் திட்டங்கள் போன்ற பல பிரச்னைகள் குறித்து பேசி இருக்கிறேன். மாநிலங்களவையில் நடந்த விவாதங்கள் எப்படி நடந்தன?. என்னை அமைதிபடுத்தலாம். ஆனால் தோற்கடிக்க முடியாது''என்று தெரிவித்துள்ளார்.
ஒரு நேரத்தில் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட ராகவ், பஞ்சாப் மற்றும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் முக்கிய பங்காற்றினார். நீக்கம் குறித்து ஆம் ஆத்மி கட்சி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால் கட்சியின் நிலைப்பாட்டில் ராகவ் இல்லை என்று அக்கட்சி கருதுவதாக கூறப்படுகிறது. ராகவ் விரைவில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவார் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.


















