"ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்" - எடப்பாடி பழனிசாமி
"என்ன வன்மம் பாருங்க; என்னை மிரட்ட பார்க்கிறாங்க!" - தவெக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் டிடிவி!
தமிழக அரசியல் சூழல் தற்போது பரபரப்பாக இருக்கிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திடீரென ஆளுநர் மாளிகை வந்து, 'அமமுக சார்பில் வென்ற காமராஜ், தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாகப் போலிக் கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய எம்.எல்.ஏவை இப்போது காணவில்லை. தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது' எனக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
பிறகு, காணாமல் போனதாகச் சொன்ன அதே எம்.எல்.ஏவுடன் ஆளுநரைச் சந்திக்க நள்ளிரவில் வந்தார் டிடிவி தினகரன்.

அப்போது அவர், "காமராஜ் பாண்டிச்சேரி ரிசார்ட்டில் (Resort) அதிமுக எம்.எல்.ஏக்களோடு தங்கியிருந்தார். அங்கு 'எடப்பாடி ஆட்சி அமைய' ஆதரவு தெரிவித்துக் கடிதத்தில் கையெழுத்திட்டுவிட்டு என்னைச் சந்திக்கப் புறப்பட்டிருக்கிறார்.
தவெகவிற்கு 108 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது. அதனால் அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்கள். அமமுகவிற்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ இருக்கிறார், எனவே கட்சித்தாவல் தடைச் சட்டம் வராது என யோசித்துத் தவெகவினர் போலிக் கடிதத்தைத் தயார் செய்திருக்கின்றனர்" எனப் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தவெக தரப்பிலிருந்து, "யாரிடம் பேரம் பேச வேண்டிய அவசியம் தவெகவிற்கு இல்லை. காமராஜ் சுயநினைவோடு மகிழ்ச்சியாகத்தான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்" எனக் காமராஜ் கடிதத்தில் கையெழுத்திட்ட வீடியோவை வெளியிட்டது மேலும் பரபரப்பை உண்டாக்கியது. அது தொடர்பாகத் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் டிடிவி.
அதில் அவர், "'தவெகவிற்கு ஆதரவளிப்பதாகச் சுயநினைவோடு, டிடிவி தினகரனின் ஒப்புதலோடு கடிதம் எழுதியிருக்கிறார். டிடிவி சொல்வது உண்மைக்குப் புறம்பானது. தவெகவிற்கு யாருடன் பேரம் பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்' எனக் கூறியிருக்கிறார்கள்.
என்ன திமிர் பாருங்க, என்ன வன்மம் பாருங்க! எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் ஆதரவளிப்பதாகக் கடிதம் அனுப்பியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதனுடைய அசல்கடிதம் எங்கே? ஆளுநர் கேட்டபோது ஏன் ஓடிவிட்டீர்கள்? இவர் சுயநினைவோடு கடிதத்தை எழுதியிருப்பதாக வீடியோ பதிவிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோவை விஜய் எடுத்தாரா?
எங்கு வைத்து அந்த வீடியோவை எடுத்தார்கள்? எப்போது இவர் கையெழுத்துப் போட்டார்? சுயநினைவோடு கையெழுத்துப் போட்டிருக்கிறார் என்றால் ஆளுநரிடம் இவரைக் கூட்டிக்கொண்டு சென்று காண்பித்திருக்கலாமே!

6 மணிக்குப் கையெழுத்துப் போட்டதாகச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில்தான் ஆளுநரிடம் கொடுப்பதற்காக நாங்கள் கடிதம் வாங்கி வந்தோம். என்னுடைய கையெழுத்துடன் காமராஜ் கடிதம் கொடுக்கிறார் என்றால் அதில் என்ன சாட்சி? என்னை மிரட்டப் பார்க்கிறார்கள்.
'உங்கள் ஒப்புதலோடு கொடுத்தார்' எனச் சொன்னால் நான் பயப்படுவேன் எனச் செய்கிறார்கள். யாரை ஏமாற்றுகிறார்கள்? இந்தக் கடிதத்தின் நகலைத்தான் கொடுத்திருக்கிறார்கள்.
அசல் கேட்டதற்குத் தருகிறோம் என வந்துவிட்டார்கள். அதை ஆராய்வதற்கு ஆளுநர் தரப்பிலிருந்து இவருக்கு அழைப்பு வரும்போதுதான் அதிர்ச்சியாகி பாண்டிச்சேரியிலிருந்து கிளம்பி வந்திருக்கிறார்" எனக் கூறினார்.

















