செய்திகள் :

ஏற்காடு: பட்டுப்புழு வளர்ப்பு முதல் பட்டுநூல் நெசவு வரை... ‘சில்க் வேர்ல்டு’ விசிட்!

post image

‘பட்டு’ என்றதும் நம் கண்முன்னே விரியும் காட்சி... பளபளக்கும் பட்டுப்புடவை! அதன் மென்மையும், நுணுக்கமான வேலைப்பாடும் நம்மை ஈர்க்கும். ஆனால், அந்தப் பட்டுப்புடவையின் பின்னால் ஒரு சிறிய உயிரினத்தின் வாழ்க்கைச் சுழற்சி இருப்பது தெரியுமா?

நாம் அணியும் பட்டுப்புடவை எங்கிருந்து வருகிறது? பட்டுநூல் எப்படித் தயாராகிறது? அதற்கு முன்பாக, அந்தப் பட்டுநூல் உருவாகக் காரணமான பட்டுப்புழு எப்படி வளர்கிறது?

இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் பட்டுவளர்ப்பு (Sericulture).

பட்டுப்புழுக்களை வளர்த்து, அவற்றின் மூலம் பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்து, அந்தக் கூடுகளில் இருந்து பட்டு இழையைப் பிரித்தெடுத்து, அதை நூலாக மாற்றி, பின்னர் நெசவு செய்து பட்டுத் துணியாக உருவாக்கும் முழுச் செயல்முறையே பட்டுவளர்ப்பு எனப்படுகிறது.

Silk World

இந்த முழுப் பயணத்தையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அமைந்துள்ள அரசு பட்டுவளர்ச்சித் துறையின் ‘சில்க் வேர்ல்டு’ (Silk World) மையத்தில்!

மையத்தைச் சுற்றிப் பார்த்தபோது, அங்கிருந்த அலுவலர் பட்டின் வரலாறு முதல் பட்டுப்புடவை உருவாகும் விதம் வரை ஒவ்வொரு கட்டத்தையும் விளக்கினார்.

வாருங்கள்... பட்டுக்கூட்டுக்குள் ஒளிந்திருக்கும் அந்தப் பட்டு ரகசியத்தைத் தெரிந்துகொள்வோம்!

சீனாவில் தொடங்கிய பட்டின் கதை!

“பட்டின் தோற்றம் குறித்து சீனாவில் ஒரு சுவாரஸ்யமான பாரம்பரியக் கதை சொல்லப்படுகிறது” என்று பட்டின் வரலாற்றை விளக்கத் தொடங்கினார் அங்கிருந்த அலுவலர்.

சீனப் பேரரசி லெய் சூ (Lei Zu), ஒரு நாள் மரத்தடியில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு பட்டுக்கூடு அவரது தேநீர்க் குவளையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

Silk World

தேநீரின் வெப்பத்தால் பட்டுக்கூட்டில் இருந்த நீண்ட பட்டு இழை மெதுவாகப் பிரியத் தொடங்கியதாகவும், அதை ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்த பேரரசி, அந்த இழையின் நடுவே ஒரு சிறிய புழு இருப்பதைக் கண்டறிந்ததாகவும் இந்தப் பாரம்பரியக் கதை கூறுகிறது.

“இந்தக் கதைதான் சீனாவில் பட்டின் தோற்றம் குறித்து தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டு வருகிறது” என்று அலுவலர் குறிப்பிட்டார்.

காலப்போக்கில் பட்டுத் தொழில் பல நாடுகளுக்கும் பரவியது. சீனாவிலிருந்து இந்தியா, பெர்சியா, அரேபியா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளுக்குப் பட்டு சென்ற வரலாற்றை, ‘பட்டுப் பாதை’ (Silk Road) எனப்படும் வரலாற்றுப் பாதையின் வரைபடம் மூலம் இங்கு விளக்கியிருந்தனர்.

ஒரு சிறிய முட்டைக்குள் தொடங்கும் பட்டு ரகசியம்!

“பட்டுப்புழுவின் வாழ்க்கை முட்டையிலிருந்துதான் தொடங்குகிறது” என்று அடுத்த கட்டத்தை விளக்கினார் அலுவலர்.

முட்டையிலிருந்து வெளிவரும் பட்டுப்புழு, மல்பெரி இலைகளை உணவாக எடுத்துக்கொண்டு வேகமாக வளரத் தொடங்குகிறது. வளர்ச்சியின் பல்வேறு நிலைகளைக் கடக்கும் பட்டுப்புழு, ஒரு கட்டத்தில் தன் உடலில் உள்ள சுரப்பிகளிலிருந்து பட்டு இழையைச் சுரக்கத் தொடங்குகிறது.

Silk World

அந்த நுண்ணிய இழையைக் கொண்டு தன்னைச் சுற்றித் தொடர்ந்து சுற்றிக்கொண்டு, இறுதியில் ஒரு பட்டுக்கூட்டைக் கட்டுகிறது.

“பார்ப்பதற்கு மிகச் சிறியதாக இருக்கும் அந்தப் பட்டுக்கூட்டுக்குள்தான், நாம் அணியும் பட்டுப்புடவையின் முதல் அத்தியாயம் இருக்கிறது” என்று அவர் விளக்கினார்.

மல்பெரி, தசார் (Tasar), எரி (Eri), மூகா (Muga) எனப் பல்வேறு வகையான பட்டுகளும், அவற்றிலிருந்து கிடைக்கும் பட்டுக்கூடுகள் மற்றும் நூல்களின் மாதிரிகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல், பட்டுப்புழு வளர்ப்புக்கான ‘பட்டுப்புழு வளர்ப்பு மனை மாதிரி’ (Silk Worm Rearing House Model), மல்பெரி நாற்றுகள் வளர்க்கப்படும் விதம் உள்ளிட்டவையும் மாதிரிகளாக விளக்கப்பட்டுள்ளன.

Silk World

பட்டுக்கூடு வந்ததும் வேலை முடியாது!

"பட்டுப்புழு தன் கூட்டைக் கட்டிவிட்டால், பட்டு தயாராகிவிட்டது என்று நினைத்துவிடக் கூடாது" , என்கிறார்.

“பட்டுக்கூடு உருவான பிறகுதான், அதிலிருந்து பட்டு இழையைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பப் பணிகள் தொடங்குகின்றன” என்று அடுத்தடுத்த செயல்முறைகளை அலுவலர் விளக்கினார்.

சூடான காற்றில் உலர்த்துதல்!

முதலில் பட்டுக்கூடுகள் மின்சாரச் சூடான காற்று உலர்த்தி (Electrical Hot Air Dryer) மூலம் முறையாக உலர்த்தப்படுகின்றன.

மின்மோட்டார் விசிறி (Blower) மூலம் செலுத்தப்படும் சூடான காற்று இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. பட்டுக்கூடுகளை முறையாக உலர்த்துவது அடுத்தடுத்த செயல்முறைகளுக்கு முக்கியமான கட்டமாகும்.

கொதிக்கும் நீரில் பசை நீக்கம்!

அடுத்ததாகப் பட்டுக்கூடுகளைச் சமைக்கும் செயல்முறை (Cocoon Cooking) நடைபெறுகிறது.

“பட்டுக்கூட்டில் இயற்கையாகவே செரிசின் (Sericin) என்ற பசைத்தன்மை கொண்ட பொருள் இருக்கும். அதை மென்மையாக்குவதற்காகப் பட்டுக்கூடுகள் சூடான நீரிலும், பின்னர் வெதுவெதுப்பான நீரிலும் மாற்றப்படுகின்றன” என்று அலுவலர் விளக்கினார்.

இதன் மூலம் பட்டுக்கூட்டில் இருந்து பட்டு இழையைப் பிரித்தெடுப்பது எளிதாகிறது.

Silk World

பட்டு இழை... நூலாகிறது!

அடுத்த முக்கியமான கட்டம் பட்டு இழையை நூலாகச் சுற்றும் செயல்முறை (Reeling).

எம்.ஆர்.எம். அலகு (MRM Unit) இயந்திரங்களின் உதவியுடன் பட்டுக்கூட்டிலிருந்து கிடைக்கும் நுண்ணிய பட்டு இழைகள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, நீண்ட மூலப் பட்டு நூலாக (Raw Silk) மாற்றப்படுகின்றன.

“பல நுண்ணிய பட்டு இழைகளை ஒன்றாகச் சேர்த்துத்தான் தொடர்ச்சியான நூல் உருவாக்கப்படுகிறது” என்று அலுவலர் இந்தச் செயல்முறையை விளக்கினார்.

அதன்பிறகு, மறுச்சுற்று செயல்முறை (Re-reeling) மூலம் நூலில் இருக்கும் சீரற்ற தன்மைகள் நீக்கப்பட்டு, பெரிய தரப்படுத்தப்பட்ட உருள் (Standard Reel) வடிவங்களுக்கு மாற்றப்படுகிறது.

நூலுக்கும் இருக்கிறது ‘மேக்கிங்’!

பட்டு நூல் கிடைத்துவிட்டாலும், அது நேரடியாகத் தறிக்குச் செல்வதில்லை.

முதலில் நூலைச் சுற்றும் செயல்முறை (Winding) மூலம் பெரிய ஹாங்க் (Hank) வடிவிலுள்ள நூல் சிறிய பாபின் (Bobbin) களுக்கு மாற்றப்படுகிறது.

Silk World

அடுத்து, இரட்டையாக்கும் செயல்முறை (Doubling) நடைபெறுகிறது. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாபின்களில் இருந்து வரும் நூல்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, தேவையான பருமனுக்குக் கொண்டு வரப்படுகின்றன.

பின்னர் நூலை முறுக்கும் செயல்முறை (Twisting) நடைபெறுகிறது.

“இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பட்டுநூல் இழைகளை ஒன்றாகச் சுழற்றுவதன் மூலம் நூலின் வலிமை அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் நூல்கள் ‘முறுக்கப்பட்ட பட்டு’ (Thrown Silk) என அழைக்கப்படுகின்றன” என்று அலுவலர் விளக்கினார்.

தறிக்குச் செல்லும் பட்டுநூல்!

அடுத்ததாக நீளவாக்கு நூல் அமைத்தல் (Warping) நடைபெறுகிறது.

துணியின் நீளவாக்கில் செல்லும் வார்ப்பு நூல்கள் (Warp) தறியில் முறையாக வரிசைப்படுத்தப்பட்டு நெசவுக்குத் தயார்படுத்தப்படுகின்றன.

அதன்பிறகு வருகிறது நெசவு.

ஏற்காடு மையத்தில் பாரம்பரியமான குழித் தறி (Fly Shuttle Pit Loom) எனப்படும் கைத்தறி நெசவு முறை விளக்கப்பட்டுள்ளது.

“நெசவாளர் மிதிப்பலகையை இயக்கும்போது தறியில் ஒரு திறப்பு உருவாகும். அந்தத் திறப்பின் வழியாகத் தறிக்கப்பல் (Shuttle) செல்கிறது. இதன் மூலம் குறுக்குவாக்கு நூல் (Weft), நீளவாக்கு நூல் (Warp) ஆகியவற்றுடன் பின்னப்பட்டுத் துணி உருவாகிறது” என்று அலுவலர் நெசவு முறையை விளக்கினார்.

சுமார் 6 மீட்டர் நெசவு முடிந்ததும், ஓரங்கள் வெட்டப்பட்டு, சேலை பாரம்பரிய முறையில் மடிக்கப்பட்டுச் சந்தைக்குத் தயாராகிறது.

இவ்வளவு நீண்ட பயணத்துக்குப் பிறகுதான் நம் தோளில் வந்து அமர்கிறது அந்தப் பட்டுப்புடவை!

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியங்கள்!

மேலும் அவர் கூறுகையில்,

பட்டு உற்பத்தி என்பது பட்டுப்புழு வளர்ப்பில் தொடங்குவதால், விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மானியங்கள் மற்றும் உதவிகள் வழங்கப்படுவதாக அங்கிருந்த தகவல் பலகைகள் தெரிவிக்கின்றன.

Silk World

“2 ஏக்கர் மல்பெரி நடவு மற்றும் 1,500 சதுர அடி புழுவளர்ப்பு மனை அமைக்க ரூ.3,37,500 வரை மானியம் வழங்கப்படுகிறது” என்று மையத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையைச் சுட்டிக்காட்டி அலுவலர் விளக்கினார்.

மேலும், தளவாடங்கள் வாங்குதல், கிருமிநாசினி விநியோகம், விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் உள்ளிட்டவற்றுக்கும் நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.

சிறந்த பட்டு விவசாயி, சிறந்த விதைக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயி, சிறந்த நாற்றுயிர்ப் பட்டு நாற்றுப்பாளர் உள்ளிட்டோருக்கு மாநில அரசு சார்பில் ஆண்டுதோறும் முதல் பரிசாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுவதாகவும் அந்தத் தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பட்டுப்புடவைக்குப் பின்னால்...

பட்டுப்புடவையைப் பார்க்கும்போது அதன் பளபளப்பையும் அழகையும் மட்டுமே நாம் ரசிக்கிறோம்.

ஆனால், அதன் பின்னால் ஒரு சிறிய பட்டுப்புழுவின் வாழ்க்கைச் சுழற்சி இருக்கிறது.

மல்பெரி விவசாயியின் உழைப்பு இருக்கிறது.

பட்டுக்கூட்டைப் பதப்படுத்தும் தொழில்நுட்பம் இருக்கிறது.

பட்டு இழையைப் பிரித்தெடுக்கும் இயந்திரங்களின் பங்களிப்பு இருக்கிறது.

நூலைச் சீரமைக்கும் பல்வேறு செயல்முறைகள் இருக்கின்றன.

இறுதியாக, தறியில் அந்த நூலை அழகிய துணியாக மாற்றும் நெசவாளரின் கைத்திறனும் இருக்கிறது.

ஒரு சிறிய முட்டையில் தொடங்கி, பட்டுப்புழுவாக வளர்ந்து, பட்டுக்கூடாக மாறி, பட்டு இழையாகப் பிரித்தெடுக்கப்பட்டு, நூலாக உருமாறி, பல்வேறு தொழில்நுட்பச் செயல்முறைகளைக் கடந்து, நெசவாளரின் கைகளில் பட்டுப்புடவையாக உருவாகும் இந்தப் பயணம்...

உண்மையிலேயே வியக்க வைக்கும் பட்டு ரகசியம்தான்!

பசுமை சந்தை..!

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர... மேலும் பார்க்க

பசுமை ஒலி..!

விவசாயிகளின் கவனத்துக்கு!பசுமை விகடன் இதழில் வெளியாகும் மகசூல், வீட்டுத்தோட்ட கட்டுரைகளில் ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, அமுதக் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி... உள்ளிட்ட இயற்கை இடுபொருள்களை பயன்படுத்தி வெற... மேலும் பார்க்க

விவசாய சங்கத்தினருடன் அமைச்சர்கள் ஆலோசனை ! - எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

காவிரி மற்றும் குறுவை சாகுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள முன்னிலையில் விவசாய சங்கங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்ட... மேலும் பார்க்க

திருச்சி: `சந்தைப்படுத்துதல் மிகவும் முக்கியம்' - எஃப்.பி.ஓ கலந்துரையாடலில் விவசாயிகள்

திருச்சிராப்பள்ளியில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாட்டின் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்திறன், நிலைத்தன்மை, சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப... மேலும் பார்க்க

தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் - தாக்கல் செய்கிறார் அமைச்சர் ஆர்.வினோத்! | Live

2026-27வேளாண் பட்ஜெட்தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. காலை 10 மணிக... மேலும் பார்க்க

`மாதத்தின் முதல் நாளே ஆரோக்கிய நாள்!' - மதுரை காந்தி மியூசியத்தில் ஆரோக்கிய சந்தை | Album

மாதத்தின் முதல் நாளே ஆரோக்கிய சந்தை மாதத்தின் முதல் நாளே ஆரோக்கிய சந்தை மாதத்தின் முதல் நாளே ஆரோக்கிய சந்தை மாதத்தின் முதல் நாளே ஆரோக்கிய சந்தை மாதத்தின் முதல் நாளே ஆரோக்கிய சந்தை மாதத்தின் முதல் நாளே... மேலும் பார்க்க