"இதுவரை அமித் ஷா இப்படி செய்ததே இல்லை; அவர்களுக்கிடையே பிரச்னையா?" - காங்கிரஸ் க...
அடையாளம் மாறும் சிவாஜியின் 'அன்னை இல்லம்' - இடிக்கப்பட்டதன் காரணம் இதுதான்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உணர்வுடன் இரண்டறக் கலந்திருந்த அன்னை இல்லம், மாற்றத்துக்குத் தயாராவது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சென்னையில் 'அன்னை இல்லம்' என்றால் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது, சென்னை தி.நகர் போக் சாலையில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீடுதான். சிவாஜி கடைசி வரை வாழ்ந்த அந்த வீட்டில்தான் இன்றும் அவருடைய மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு குடும்பத்தினர் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் இந்த அன்னை இல்லம் இல்லாது இன்னொரு வீட்டுக்கும் 'அன்னை இல்லம்' என்ற பெயரையே சூட்டி சிவாஜி அங்கும் வசித்து வந்தார் என்பது சினிமா உலகில் சீனியர்கள் பலருக்கும் தெரியும்.
சென்னை கோபாலபுரத்தில் இருக்கிற அந்த 'அன்னை இல்லம்'தான் இப்போது இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது.
நீண்ட காலமாக அந்தப் பகுதியில் குடியிருந்து வரும் சிலரிடம் பேசினோம்.
''திரையுலத்தில் சிவாஜி உச்சத்துல இருந்தபோது முதன் முதலா இந்தப் பகுதியிலதான் பெசன்ட் சாலையில் ஒரு வீட்டை வாங்கினார். அந்த வீட்டுலதான் ஆரம்பத்துல வசிச்சாங்க. அக்கம் பக்கத்துல உள்ள எல்லாருடனும் நல்லா பழகுவாங்க. அவரை வேடிக்கை பார்க்க யாராவது வீட்டை எட்டிப் பார்த்தாக்கூட உள்ள கூப்பிட்டு 'சாப்பிடுறீங்களா'ன்னு கேட்பார்.
கொஞ்ச நாள் கழிச்சுதான் இப்ப இருக்கிற தி.நகர் போக் சாலை வீட்டைக் கட்டி அங்க போயிடுச்சு, அவருடைய குடும்பம். பெசன்ட் சாலை வீடு சிவாஜி ஃபிலிம்ஸ் ஆபீஸ் ஆகிடுச்சு.
அப்புறம் பழைய வீட்டு பக்கத்துலயே இருந்த இடத்தை வாங்கி இந்த அன்னை இல்லத்தைக் கட்டினாங்க. கேசவ மேஸ்திரினு அப்ப பிரபலமான ஒரு பில்டர் இருந்தார். அவர்தான் கட்டினது. தி.நகர் வீட்டுல எப்படி இருக்குமோ அதேபோல முகப்புல 'அன்னை இல்லம்'னு ஒரு பக்கமும் 'வி.சி.கணேசன்'னு அவர் பேரு ஒரு பக்கமும் இருக்கும்.

கீழ ஒரு வீடு மேல வீடுனு நாலு பிளாக்கா மொத்தம் எட்டு வீடுகள் ஒரே பங்களாவுக்குள் அடங்கியதா இருந்தது. பெரிய குடும்பம் அதுவும் கூட்டுக் குடும்பம இருந்ததால் அவங்க குடும்பம்தான் வசிச்சதே தவிர வாடகைக்கெல்லாம் விட மாட்டாங்க.
இந்த அன்னை இல்லம் தயாரான பின்னாடி சிவாஜியும் அடிக்கடி இந்த வீட்டுக்கும் வார இறுதி நாள்கள்ல வந்து ரெண்டு மூணு நாள் தங்குவார். தி.நகர் வீட்டுல வெள்ளையடிக்கிறது மாதிரியான வேலை நடந்தா எல்லாருமே இந்த வீட்டுக்கு வந்துடுவாங்க.
இந்தப் பகுதியில் வசிக்கிற நாங்க எல்லாரும் சேர்ந்து இந்தப் பகுதியிலுள்ள சாலைக்கு அவருடைய பேரை வைக்க கோரிக்கை வைக்கலாம்னெல்லாம் கூட நினைசிட்டிருந்த சமயத்துலதான், போக் சாலைக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுடுச்சு.
சிவாஜி மறைவுக்குப் பிறகு சொத்து தொடர்பா பிரபு - ராம்குமார் தரப்புக்கும் அவர்களுடைய சகோதரிகள் சாந்தி, தேன்மொழி தரப்புக்கும் இடையில் பிரச்னை உண்டாகி அது நீதிமன்றம் வரை போனதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்.
பிறகு ஒருவழியா அவங்களுக்குள்ள பேசி கோபாலபுரம் அன்னை இல்லத்தை சாந்தி, தேன்மொழி ரெண்டு பேருக்கும் கொடுத்துட்டாங்க. அப்ப இருந்து அக்கா தங்கைகள் ரெண்டு பேர் குடும்பங்கள்தான் வசிச்சுட்டு வந்தாங்க.

இந்தச் சூழலில்தான் இப்ப சிவாஜியின் மகள்கள் இருவரும் சேர்ந்து ஒரு கட்டுமான நிறுவனத்துடன் பேசி ஜாயின்ட் வெஞ்ச்சர் அடிப்படையில் 'அன்னை இல்ல'த்தைப் புதுப்பிக்க முடிவு செய்து பழைய கட்டடங்கள் இடிக்கப் பட்டு, புதிய கட்டுமானப் பணிகள் தொடங்கியிருக்கின்றன. விரைவில் அபார்டெம்ன்ட்டாக மாற இருக்கிறது அன்னை இல்லம்" என்றனர்.
எனினும் சாந்தி, தேன்மொழி இருவரும் இந்த வீட்டை முழுவதுமாக கட்டுமான நிறுவனத்துக்கு விற்பனை செய்யவில்லை என்றும், அவர்கள் இருவருமே புதிய அபார்ட்மென்ட் தயாரானதும் அங்கேயே குடியேறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.


















