`இந்தியா பிற நாடுகளின் குப்பைகளை கொட்டும் இடமாக மாற அனுமதிக்க முடியாது' - மதுரை ...
ஓமனில் உயிரிழந்த கப்பல் மாலுமி; மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்
ஓமன் நாட்டின் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ”எம்.டி செலஸ்டியல்” என்ற கப்பலில் பணிபுரிந்து வந்த தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்த நிஷாந்த் உயிர்த்த நாதன் (வயது 35) என்ற இரண்டாம் நிலை அதிகாரி, கடந்த 11-ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார் என ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால், முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காத காரணத்தாலும், கப்பல் நிறுவனத்தின் அலட்சியத்தாலும் நிஷாந்த் உயிரிழந்துள்ளார் என இந்தியாவில் உள்ள மாலுமிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் சங்கமான எப்.எஸ்.யூ.ஐ தெரிவித்துள்ளது.

நிஷாந்தின் உடலைப் பாதுகாக்க போதுமான குளிரூட்டும் வசதிகள் கப்பலில் இல்லாததாலும், மூன்று நாட்களைக் கடந்துவிட்டதால் உடல் அழுகத் தொடங்கிவிட்டதாகவும், எக்ஸ் தளத்தில் எப்.எஸ்.யூ.ஐ பகிர்ந்துள்ள ஒரு காணொளியில் எம்.டி செலஸ்டியல் கப்பலின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நிஷாந்த், தனது 21-ம் வயது முதலே கப்பல் பணியில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு சரோபின் என்ற மனைவியும், மூன்று வயது பெண் குழந்தையும், பத்து மாத பெண் குழந்தையும் உள்ளனர். நிஷாந்தின் மனைவி சரோபின், "மத்திய கிழக்கு பகுதியில் போர் தொடங்கியது நாள் முதலே, பயந்துகொண்டேதான் இருந்தோம்.
எனது கணவரிடம் 10 நாட்களுக்கு முன்னர் பேசும்போது, “கப்பலில் உணவுப் பொருட்கள் தீர்ந்து வருகிறது, அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கிறோம். எனக்கு கடும் காய்ச்சலாக உள்ளது. மருத்துவ உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. அருகில் உள்ள துறைமுகத்தில் உதவி கேட்டுள்ளோம். சீக்கிரம் கிடைத்துவிடும். விரைவில் தூத்துக்குடிக்கு வந்துவிடுவேன்” என, நம்பிக்கையுடன் கூறினார். அவரிடமிருந்து அழைப்பு வரும் என எதிர்பார்த்து இருந்தோம். இடையில் அவரையும் கப்பலில் உள்ளவர்களையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம்.

அவர் இறந்துவிட்டார் என்பதை சமூக ஊடகங்கள் மூலமாகத்தான் தெரிந்துகொண்டோம். எனது கணவரின் உடலை மீட்டுக் கொண்டுவர மத்திய அரசும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார். இந்த நிலையில் கப்பல் மாலுமி நிஷாந்தின் மனைவி மற்றும் குடும்பத்தினர், நிஷாந்த் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவரது உயிரிழப்பிற்கு கவனக்குறைவாக இருந்த கப்பல் நிறுவனம் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், மத்திய - மாநில அரசுகள் விரைந்து அவரது உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நிஷாந்தின் மனைவி சரோபின் மற்றும் குடும்பத்தினரை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவரது உடலை உடனடியாக தாயகம் மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கூறுகையில், ”தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவரிடம் பேசியுள்ளோம். அவரது உடலை ஓரிரு நாளில் தூத்துக்குடிக்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தூதரகம் மற்றும் அதிகாரிகளுடன் பேசி அவர்களுக்கு தேவையான இழப்பீடு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

இந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில், ”நிஷாந்தின் மனைவி சரோபினுக்கு மீன்வளத்துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் தூத்துக்குடி மேலாளர் அலுவலகத்தில் வெளிமுகமை நிறுவனம் வழியாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தற்காலிக இளநிலை உதவியாளர் பணி நியமனத்திற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது” என தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர். விஜய கார்த்திகேயன் ஆணை பிறப்பித்துள்ளார்.










