செய்திகள் :

"கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் முதல்வர் விஜய் என்ன சாதிக்கப் போகிறார்?" - அன்புமணி

post image

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரமும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை திறப்பது தொடர்பான விவகாரமும் பேசுபொருளாகி இருக்கிறது.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA), தமிழ்நாட்டில் வாடும் குறுவை பயிர்களைப் பாதுகாக்க வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட்ட பிறகும், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு அதற்குப் பணிய மறுத்துள்ளது.

டி.கே. சிவக்குமார்
டி.கே. சிவக்குமார்

மாறாக, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிராக அங்குள்ள மக்களைத் தூண்டிவிடுவதாகக் கூறப்படுகிறது. இத்தகையச் சூழலில், முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற அவரது பிடிவாதம், எந்த வகையிலும் தமிழ்நாட்டின் நலன்களுக்கு நன்மை பயக்காது.

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கர்நாடக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. தண்ணீர் திறப்பை எதிர்க்கும் கன்னட அமைப்புகள், இந்த முடிவைக் கண்டித்துக் காவிரி பாசன மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்துள்ளன. இந்த விவகாரம் குறித்து விவாதிக்கக் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகஸ்ட் 2-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டியுள்ளார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

கர்நாடக அரசும் கன்னட அமைப்புகளும் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் செல்வதைத் தடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன. ஒரு சொட்டு நீர்கூட தரமாட்டோம் என்பதில் கர்நாடகா உறுதியாக இருக்கும்போது, அம்மாநிலத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் முதலமைச்சர் விஜய் என்ன சாதிக்கப் போகிறார்? அவரது பயணம் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீரைக் கூட பெற்றுத் தராது. மாறாக, மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். முதலமைச்சர் விஜய் இத்தகைய தவறான முடிவை எடுக்கக் கூடாது.

தமிழ்நாட்டிற்கு 15 நாள்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவிற்கு உத்தரவிட்டுள்ளது. இது அடுத்த 15 நாள்களில் வெறும் 4.5 டி.எம்.சி நீரளவு மட்டுமே ஆகும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கர்நாடகா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரில் இது பத்தில் ஒரு பங்கு மட்டுமே. இருந்தபோதிலும், இந்த குறைந்தபட்ச நீரைக்கூட வழங்கக் கர்நாடகா தயாராக இல்லை.

இன்று காலை நிலவரப்படி, கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நான்கு அணைகளிலும் சேர்த்து மொத்தம் 67.078 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. மேலும், இந்த நான்கு நீர்த்தேக்கங்களுக்கும் வரும் மொத்த நீர்வரத்து வினாடிக்கு 25,644 கனஅடியாக உள்ளது. இந்த நீர்வரத்தில் ஆறில் ஒரு பங்கை மட்டுமே தமிழ்நாட்டிற்குத் திறந்து விடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேகதாது
மேகதாது

இந்த உத்தரவைச் செயல்படுத்துவதால் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் குறையப் போவதில்லை. மாறாக, நாளொன்றுக்கு தோராயமாக 1.9 டி.எம்.சி நீர் அதிகரிப்பதன் மூலம், அடுத்த 15 நாள்களில் அணைகளின் மொத்த நீர் இருப்பு சுமார் 28 டி.எம்.சி உயரும். நிலைமை இப்படி இருக்கவும், தமிழ்நாட்டிற்கு உத்தரவிடப்பட்ட குறைந்த அளவிலான தண்ணீரைக்கூட திறந்து விடக் கர்நாடக அரசு முன்வரவில்லை.

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணையும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரங்களில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தக் கூடாது என்பதே தமிழ்நாட்டு மக்களின் நிலையாகும். முதலமைச்சர் விஜய் இந்த உணர்வுக்கு எதிராக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. எனவே, ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்வதாக அறிவித்துள்ள திட்டத்தை அவர் உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தி இருக்கிறார்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க