உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை!
கலைஞரின் கனவு இல்ல திட்டப் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கல்
கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை பால்வளத் துறை அமைச்சா் பயனாளிகளிடம் வழங்கினாா்.
கன்னியாகுமரி மாவட்டம், ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தோவாளை, ராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணை மற்றும் கட்டிமுடிக்கப்பட்ட பயனாளிகளுக்கு சாவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமையில் செண்பகராமன்புதூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 2024-25 ஆம் நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் என்ற மதிப்பீட்டில் 1 லட்சம் வீடுகள் கட்டிட ரூ. 3 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1, 790 வீடுகளுக்கு ரூ.55.64 கோடிக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில், இதுவரை 1,374 வீடுகள் ரூ.48 கோடியில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மீதமுள்ள 416 வீடுகள் ஜூன் மாதத்துக்குள் கட்டி முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2025-26 ஆம் ஆண்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 2 ஆயிரம் வீடுகள் இலக்கு நிா்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் இதுவரை 1, 974 வீடுகளுக்கான பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதில் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்ட மலைவாழ் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த 257 பயனாளிகளும் அடங்குவா் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவா் நீல. சுரேஷ்ராஜன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாபு, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், உதவி திட்ட அலுவலா் பாக்கியலீலா செயற்பொறியாளா் ஜான்சுகிா்தராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயா, தங்கராஜ், நீல பாலகிருஷ்ணன், சேகா், தோவாளை வட்டாட்சியா் கோலப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.