கூட்டு பாலியல் வன்கொடுமை ; கொலை - உடலை திறந்தவெளியில் வீசிய கும்பல்; கடித்து குதறிய நாய்கள்
டெல்லியின் வடமேற்குயில் உள்ள குஷாக் சாலையில் உள்ள ஸ்வரூப் நகர் பகுதியில் ஜெய்பால் ராணாவின் வயல் பகுதிக்கு அருகே மைனர் பெண் ஒருவரின் சிதைந்த உடல் கடந்த 13ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. உடலின் சில பகுதிகளையும் தெருநாய்கள் தின்று இருந்தது. அவரது ஒரு கை உடலில் இருந்து நாய்களால் கடித்து அகற்றப்பட்டு இருந்தது. அந்த உடல் அழுகிய நிலையில் இருந்தது. அதனை மீட்டு போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இது குறித்த விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தினர்.
அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லாததாலும், குற்றவாளிகளின் அடையாளம் தெரியாததாலும், போலீஸ் குழுக்கள் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் ஒரு டெம்போ சம்பவ இடத்திற்கு அருகில் நகர்வது கவனிக்கப்பட்டது. இருள் காரணமாக அதன் பதிவு எண் தெளிவாகத் தெரியவில்லை. அதைத் தொடர்ந்து மேலும் பல சிசிடிவி கேமராக்கள் மூலம் அதன் நடமாட்டத்தை போலீஸார் கண்காணித்தனர்.
இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சந்தேகத்திற்குரிய டெம்போ கண்டுபிடிக்கப்பட்டு அதன் ஓட்டுநரை அடையாளம் கண்டு விசாரித்தனர். அவரிடம் விசாரித்து 4 பேரை கைது செய்தனர். அதில் சுபம் என்பவரை தவிர மற்ற மூன்று பேரும் மைனர்கள் ஆவர். இது குறித்து போலீஸார் கூறுகையில்,'' சிறுமியும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள். குற்றம் நடந்தபோது அப்பெண் அவர்களுடன் டெம்போவில் பயணித்துள்ளார். நான்கு பேரும் மது அருந்திவிட்டு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர்''என்று தெரிவித்துள்ளனர்.
சிறுமியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் புகார் தெரிவிக்கவில்லை. அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி சில நாட்களுக்குப் பிறகு திரும்புவார் என்று அவரது குடும்பத்தினர் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.










.jpeg)




