Man Eater: கூண்டுக்குள் சிக்கிய ஆட்கொல்லி புலி; முடிவுக்கு வந்த ஒரு மாத போராட்டம்! - அடுத்து என்ன?
நீலகிரி மாவட்டம்,` கூடலூர் ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட லார்ஸ்டன் மற்றும் மஞ்சுஸ்ரீ எஸ்டேட் பகுதிகளில் நடமாடி வந்த ஆட்கொல்லி புலி அடுத்தடுத்து இரண்டு மனிதர்களைத் தாக்கி கொன்றது. ஆகஸ்ட் 9- ம் தேதி பாலகிருஷ்ணன் (58) என்பவர் வீட்டிற்கு அருகில் குடிநீர் குழாய் சரிசெய்ய சென்ற போது புலி தாக்கி கொல்லப்பட்டார். ஆகஸ்ட் 21- ம் தேதி விச்சந்திரன் என்ற மற்றொரு தோட்ட தொழிலாளி ஒருவரையும் அதே புலி தாக்கி கொன்றது. அடுத்தடுத்து இரண்டு பேரை கொன்றுத் தின்ற புலியை பிடிக்க தீவிர நடவடிக்கை தொடங்கப்பட்டது.

புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 300 தானியங்கி கேமராக்கள் மற்றும் 3 தெர்மல் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. ஓவேலி காடுகளின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 13 இடங்களில் இரும்பு கூண்டுகள் இறைச்சி மற்றும் ஆடு போன்ற இரைகளுடன் வைக்கப்பட்டன. முதுமலையிலிருந்து 'உதயன்' உள்ளிட்ட 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. வனத்துறையின் கால்நடை மருத்துவர்கள், அதிரடிப்படையினர் மற்றும் எலைட் ஃபோர்ஸ் ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் கடந்த 28 நாள்களாக புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். புலியைத் தேடும் பணியின் போது, வனத்துறை வைத்த கூண்டுகளில் எதிர்பாராத விதமாக இரண்டு முறை சிறுத்தைகள் சிக்கின. அந்த சிறுத்தைகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்துவிட்டு, புலியை தேடும் பணியைத் தொடர்ந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கூண்டில் சிக்கிய புலியின் உடலில் உள்ள கோடுகளை முந்தைய கேமரா பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த கால்நடை மருத்துவக் குழுவினர், 2 பேரை கொன்ற ஆட்கொல்லி புலி என்பதை உறுதி செய்தனர். பிடிபட்ட ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி, பாதுகாப்பான சிறிய கூண்டிற்கு மாற்றி, அதனை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அல்லது வேறு பராமரிப்பு மையத்திற்கு கொண்டு செல்ல வனத்துறை திட்டமிட்டுள்ளது. புலி பிடிபட்டதால் கடந்த ஒரு மாதமாக அச்சத்தில் இருந்த கூடலூர் மற்றும் ஓவேலி பகுதி மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், " 8 முதல் 10 வயது மதிக்கத்தக்க இந்த ஆண் புலி வேட்டையாட முடியாமல் எளிதான இரையான மனிதர்களைத் தாக்கி வந்தது. புலியின் பற்களில் பாதிப்பு அடைந்துள்ளதா அல்லது உடலில் காயங்கள் உள்ளதா என்பதை அறிய கால்நடை மருத்துவக் குழுவினர் தீவிரப் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த புலி இனி காடுகளுக்குள் திறந்து விடப்படாது. தற்காலிக பரிசோதனைக்குப் பிறகு பாதுகாப்பான கூண்டில் அடைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.











.jpeg)




