'3 இடியட்ஸ்' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறதா? - ஆமீர் கான் சொன்ன தகவல் என்ன?
கேரளாவை உலுக்கும் மாணவர் நிதின் ராஜ் தற்கொலை: கவனம் ஈர்க்கும் 'ஹர்த்தால்' போராட்டம்!
கண்ணூர் அஞ்சரக்கண்டியிலுள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பி.டி.எஸ் (BDS) படித்து வந்த மாணவர் நிதின் ராஜ் (22). இவர் சாதிய ரீதியான துன்புறுத்தல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, இன்று கேரளா முழுவதும் தலித் அமைப்புகள் ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
திருவனந்தபுரம் உழமலக்கல் பகுதியைச் சேர்ந்த நிதின் ராஜ், கடந்த ஏப்ரல் 10-ம் தேதி கல்லூரி வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டார். அந்தத் துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் எம்.கே. ராம் மற்றும் பேராசிரியை சங்கீதா நம்பியார் ஆகியோர் நிதின் ராஜை சாதிய ரீதியாக இழிவுபடுத்தியதாகவும், உருவக் கேலி செய்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாகப் பேராசிரியர்கள் இருவர் மீதும் தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 25-ம் தேதி இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான டாக்டர் ராமின் முன்ஜாமீன் மனுவைக் கண்ணூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே சமயம், மற்றொரு குற்றவாளியான பேராசிரியை சங்கீதா நம்பியாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள டாக்டர் ராமைப் பிடிக்கக் காவல் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து, நிதின் ராஜ் ஆக்ஷன் கவுன்சில் மற்றும் பல்வேறு தலித் அமைப்புகள் இணைந்து கடைகள், பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்து போன்ற பொது சேவைகளைத் திட்டமிட்டு, அமைதியான முறையில் முழுமையாக முடக்கும் ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். நிதின் ராஜ் ஆக்ஷன் கவுன்சில் அமைப்பின் கோரிக்கையாக, நிதின் ராஜின் குடும்பத்திற்கு ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாட்டைத் தடுக்க 'ரோகித் வெமுலா சட்டம்' அமல்படுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அஞ்சரக்கண்டி பல் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கை நீதித்துறை மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த ஹர்த்தால் போராட்டம் காரணமாக கேரளாவின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கேரள அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளைப் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இன்று நடைபெறும் வி.ஐ.டி (VIT) நுழைவுத் தேர்வெழுதச் சென்ற மாணவர்கள், போக்குவரத்து தடையால் தேர்வு மையங்களுக்குச் சரியான நேரத்திற்குச் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அத்தியாவசியச் சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டாலும், போக்குவரத்து வசதி இல்லாததால் நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.
நிதின் ராஜின் மரணத்திற்குப் பின்னால் உள்ள சாதிய ஒடுக்குமுறைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
















