"இதைவிட சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட முடியாது!" - ...
கேரளா: 'உலகில் மிக உயரமான கண்ணகி சிலை' - ஆற்றுகால் பகவதி கோயிலில் ரூ.3.5 கோடியில் அமைக்கத் திட்டம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் பெண்களின் காவல் தெய்வம் எனப் போற்றப்படுகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் நடக்கும் பொங்காலை வழிபாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள்.
அந்தச் சமயத்தில் கோயில் வளாகத்தில் ஆண் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் ஆற்றுகால் கோயிலில் கண்ணகி தேவிதான் பகவதி அம்மனாகக் காட்சி அளிக்கிறார். பாண்டிய நாட்டு ராணியின் சிலம்பைத் திருடியதாகப் பொய்யாகத் திருட்டுப்பட்டம் சூட்டி கோவலன் கொலை செய்யப்பட்டார்.

அநீதி இழைத்து தன் கணவனைக் கொலைசெய்த பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு சிலம்பெடுத்துச் சென்றார் கண்ணகி தேவி.
பாண்டிய மன்னனை வதம் செய்துவிட்டு சினம் தணியாமல் மதுரையில் இருந்து தெற்கு நோக்கிச் சென்று திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் ஆற்றின் கரையில் இளைப்பாறினார் கண்ணகி தேவி.
அப்போது அந்த ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முதியவர் கண்ணகி தெய்வத்தை ஆற்றுப்படுத்திக் குடியமர்த்திய திருத்தலம் ஆற்றுகால். ஆற்றுகாலில் பகவதி அம்மனாக மக்களுக்கு அருள்பளித்து வருகிறார்.
கண்ணகி தேவியைச் சாந்தப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபடுகிறார்கள் என்பது ஐதீகமாக உள்ளது.

இந்த நிலையில் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலின் முன் பகுதியில் உலகிலேயே உயரமான கண்ணகி சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒற்றைச் சிலம்பை கையில் ஏந்தி கோபம் கொப்பளிக்க ஆவேசமாக நிற்கும் வடிவில் கண்ணகி சிலை அமைக்கப்பட உள்ளது.
திருவனந்தபுரத்தை அடுத்த ஆழிமலை சிவன் கோயிலில் நாட்டில் உயரமான கங்காதரர் சிற்பம் அமைத்த சிற்பி தேவதத்தன் கண்ணகி சிலையை அமைக்க உள்ளார். கங்காதரர் சிற்பம் 58 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 60 அடி உயரத்தில் கண்ணகி சிலை அமைக்கப்பட உள்ளது.
















