கொல்கத்தா: "ஆட்டிறைச்சிக்குப் பதில் மாட்டிறைச்சி" - யூடியூபர் புகார்; சர்வர் கைது; பின்னணி என்ன?
பிரபல யூடியூப்பரும், பெங்காலி நடிகருமான சாயக் சக்ரவர்த்தி தனது நண்பர்கள் சிலருடன் கொல்கத்தாவில் உள்ள பிரபலமான ஒலிபப் பார் அண்ட் ரெஸ்டாரண்டிற்குச் சாப்பிட சென்றார். அவர்கள் மட்டன் ஆர்டர் செய்திருந்தனர்.
முதல் பிளேட் மட்டன் வந்தது. சாயக்கும் அவரது நண்பர்களும் சாப்பிட்டனர். அதன் பிறகு மேலும் ஒரு பிளேட் ஆர்டர் செய்தனர். இரண்டாவது பிளேட் மட்டன் வந்தபோதுதான் முதல் பிளேட் ஆட்டிறைச்சி கிடையாது என்று தெரிய வந்தது.
ஹோட்டல் ஊழியர், முதலில் சப்ளை செய்தது மாட்டிறைச்சி என்றும், இரண்டாவதாக சப்ளை செய்தது ஆட்டிறைச்சி என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஹோட்டல் சர்வருக்கும், சாயக்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து சாயக் கேட்டதற்குத் தவறு நடந்துவிட்டதாக சர்வர் குறிப்பிட்டார். அதற்கு, ''பிராமணனான எனக்கு ஆட்டிறைச்சிக்குப் பதில் மாட்டிறைச்சியை சப்ளை செய்து இருக்கிறாய்'' என்று கூறி சாயக் வாக்குவாதம் செய்தார்.

இது குறித்து சாயக், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஹோட்டல் சர்வரைக் கைது செய்துள்ளனர். திட்டமிட்டு இது போன்று மாட்டிறைச்சியைக் கொடுத்ததாக சாயக் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில் வீடியோவும் எடுத்து பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ''நாங்கள் பார்க் தெருவில் உள்ள பிரபல ரெஸ்டாரண்டில் இருக்கிறோம். நாங்கள் மட்டன் ஆர்டர் செய்தோம். ஆனால் மாட்டிறைச்சி சப்ளை செய்யப்பட்டது.
இது குறித்து சர்வர் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் மட்டன் என நினைத்து சாப்பிட்டோம். அதன் பிறகு வேறு ஒரு இறைச்சிக் குழம்பு சப்ளை செய்தனர். அது ஆட்டிறைச்சி என்று சொன்னார்கள். முதலில் கொடுத்தது மாட்டிறைச்சி என்று சொன்னார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மாட்டிறைச்சி சப்ளை செய்த ரெஸ்டாரண்டின் நடவடிக்கைக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
















