'அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்!'; மெலிந்த தோற்றத்தில் பென் ஸ்டோக்ஸ் - எதனால் இந்...
கோவை: தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை; கூட்டத்தோடு சேர்க்க வனத்துறை முயற்சி!
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
குறிப்பாக சிறுமுகை வனப்பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளன. இந்த நிலையில் இன்று அதிகாலையில் சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் உள்ள பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிக்கு தண்ணீர் குடிக்க ஒரு யானைக் கூட்டம் வந்துள்ளது.

அந்தக் கூட்டத்தில் இருந்து சுமார் 3 மாதமான ஒரு குட்டி யானை தனியாகப் பிரிந்துள்ளது. தனது தாயையும், கூட்டத்தையும் தேடி அந்தக் குட்டி யானை பரிதவிப்புடன் சாலையோரங்களில் சுற்றி திரிந்தது.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் சிறுமுகை வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அந்தக் குட்டி யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் அதன் கூட்டத்தைக் கண்டறிந்து குட்டி யானையை மீண்டும் சேர்த்து வைக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். குட்டி யானையின் கூட்டத்தைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கண்டறிந்து வருவதாகவும், விரைவில் குட்டி யானையை அதன் தாய் யானையுடன் சேர்க்கப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

















