``காங்கிரஸ் கட்சியின் பலம் காங்கிரஸுக்கே தெரியவில்லை.!" - பிரவீன் சக்ரவர்த்தி
கோவை தெற்கு: ``எத்தனைப் பேர் வந்தாலும்..." - வேட்புமனு தாக்கலுக்குப் பின் செந்தில் பாலாஜி பேட்டி!
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் நல்வாழ்த்துகளுடன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் செயல்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை ஒவ்வொரு வீட்டின் கதவுகளுக்கும், மக்களின் உள்ளங்களுக்கும் கொண்டு சென்று வாக்கு சேகரிக்கிறோம்.
2026 தேர்தல் களம் என்பது திராவிட மாடல் ஆட்சியின் நாயகரான முதலமைச்சருக்கு கோவை மக்கள் வழங்கும் மகத்தான வெற்றியாக அமையும். கடந்த காலங்களில் தி.மு.க அரசு கோவைக்கு எதுவுமே செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்கிறார்கள். செம்மொழிப் பூங்காவிற்கு யார் அடிக்கல் நாட்டியது? யார் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை முடித்துத் திறந்து வைத்தது? பெரியார் நூலகம் மற்றும் மேற்குப் புறவழிச்சாலைத் திட்டங்களுக்கு அரசாணை வெளியிட்டது யார்? என்பதை எதிர்க்கட்சியினர் யோசித்துப் பார்க்க வேண்டும்.
வெறுமனே வார்த்தைகளால் பேசுவதை விட, நாங்கள் செய்த திட்டங்களைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கிறோம். இனி செய்யப்போகும் திட்டங்களையும் முன்வைக்கிறோம். எதிரணி வேட்பாளர் 20 ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்திருக்கலாம், நான் 4-5 ஆண்டுகளுக்கு முன்பு வந்தேன். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் கோவையின் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ச்சிப் பணிகளுக்காக மக்களோடும் அதிகாரிகளோடும் நான் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவரை விட எனக்கு கோவை தெற்கு தொகுதியின் தேவைகள் நன்றாகத் தெரியும்.

கரூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து தேர்தல் பணியாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. கோவையில் உள்ள தி.மு.கவின் போர்ப்படை சிப்பாய்களே வெற்றியைத் தேடித்தருவார்கள். எனது பெயர் கொண்ட சுயேச்சை வேட்பாளர்கள் அதிகம் போட்டியிடுவதாக கேள்விப்பட்டேன். மக்கள் மிகவும் தெளிவானவர்கள். சின்னத்தைப் பார்த்து வாக்களிக்கும் விழிப்புணர்வு அவர்களிடம் உள்ளது.
100 பேர் ஒரே பெயரில் நின்றாலும் உதயசூரியன் சின்னம் எது என்பது மக்களுக்குத் தெரியும். கோவை தெற்கு தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு ஒரு சகோதரனாக, ஊழியனாக இருந்து பணியாற்றுவேன். அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஒரு வருட காலத்திற்குள் நிறைவேற்ற முழு முயற்சி எடுப்பேன்" என்றார்.














