CSK: "கடந்த சீசன் எனக்கு ஏமாற்றம் மற்றும் வலி மிகுந்ததாக இருந்தது"- ஓய்வு குறித்...
எம்.பி-யாக இருந்துகொண்டே எம்.எல்.ஏ-வுக்கு போட்டியிட முடியுமா? - சட்டம் என்ன சொல்கிறது? | Vote Vibes
ஒரு சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதையும், அதேபோல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதையும் நாம் அடிக்கடி பார்க்கிறோம்.
அப்படி ஒரு நபர் எம்.பி-யாக இருந்துகொண்டே எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட முடியுமா? அதேபோல ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளிலும் நீடிக்க முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது....
எம்.பி - எம்.எல்.ஏ
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை ஏதுமில்லை. ஆனால், அவர் வெற்றி பெற்ற பிறகு இரண்டு பதவிகளிலும் ஒரே நேரத்தில் நீடிக்க முடியாது என்று தான் சட்டம் சொல்கிறது.
சட்டம் என்ன சொல்கிறது?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் படி, ஒருவர் எம்.பி-யாக இருக்கும்போதே எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் தனது ஒரு பதவியை 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தானாகவே இழந்துவிடுவார்.
இந்திய அரசியலமைப்பின் 101(2) வது பிரிவின்படி, ஒருவர் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றத்திலும் உறுப்பினராக இருக்க முடியாது.
எம்.பி-யாக இருப்பவர் எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிடும் போது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் வெற்றி பெற்ற பின்னர் தனது எம்.பி பதவியை நிச்சயம் ராஜினாமா செய்ய வேண்டும்.
எம்.பி-க்களாக இருந்து எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட்டவர்கள் யார் யார்?
அரசியலில் எம்.பி-க்களாக இருந்து எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட்டவர்கள் சிலர் இருக்கின்றனர்.
அந்தவகையில் 1954-ல் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காமராஜர் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ- வாகி இருக்கிறார்.
பிரதமர் மோடி
அதேபோல பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்துக்கொண்டே 2014-ல் வாரணாசி தொகுதி எம்.பி ஆனார். அதன் பிறகு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
தவிர எடியூரப்பா 2018-ல் லோக் சபை எம்.பி-யாக இருந்துகொண்டே முதல்வர் வேட்பாளராக கர்நாடகாவில் போட்டியிட்டார். அதன் பிறகு அவரது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.
போட்டியிட்ட அன்புமணி
தருமபுரி எம்.பி-யாக இருந்த அன்புமணி 2016 சட்டமன்றத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் பாமகவின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார்.
ஆனால் அந்தத் தேர்தலில் அவர் தோல்வியை தழுவி இருந்தாலும் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்ததால் அதே பதவியை மீண்டும் தொடர்ந்தார்.

இப்படி ஒருவர் நாடாளுமன்றத்தில் எம்.பி-யாக இருந்தாலும் சட்டமன்றத்தில் போட்டியிடலாம். சட்டமன்றத்தில் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் போட்டியிடலாம். ஆனால் ஒரே சமயத்தில் இரண்டு பதவிகளையும் வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.














