Eco India: நவீன Millet foods - சிறுதானிய புரட்சி! | வீடியோ பாருங்க... பரிசை அள்ள...
`சின்னம்மா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும்' - எஸ்.பி.வேலுமணி உறுதி!
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக 144 பேர் வாக்களித்திருந்தனர். இதில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இரண்டாகப் பிரிந்து, 25 பேர் தவெக-விற்கு ஆதரவாகவும், 22 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``தவெக-விற்கு எதிராக வாக்களிக்க கொறடா உத்தரவிட்டும், சட்டத்தை மீறி 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக-விற்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர். 6 அமைச்சர் பதவிகள் மற்றும் 10 வாரியப் பதவிகள் தருவதாக ஆசை காட்டி அதிமுக எம்.எல்.ஏ-க்களை வளைத்திருக்கிறார்கள். பதவிக்கு ஆசைப்பட்ட சில முன்னாள் அமைச்சர்கள் இதில் மும்முரமாக இருக்கிறார்கள். கட்சிக்குத் துரோகம் செய்த 25 எம்.எல்.ஏ-க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எம்.ஆர்.சி நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய சி.வி.சண்முகம், ``இன்னும் சட்டமன்றத்தில் அதிமுக-வின் சட்டமன்றத் தலைவர் யார் என்பதே இறுதி செய்யப்படவில்லை. வேறு காரணங்களுக்காக எம்.எல்.ஏ-க்களிடம் வாங்கிய கையெழுத்தை, எடப்பாடிக்கு ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் என மோசடியாக தற்காலிக சபாநாயகர் இருந்தபோது கொடுத்திருக்கிறார்.
அதற்கு எதிராக நாங்களும் 27-ம் எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்து அடங்கிய கடிதத்தை கொடுத்திருக்கிறோம். எனவே, இந்த சிக்கலில் இன்னும் சபாநாயகர் தீர்வு காணவில்லை. இந்த நிலையில், அவர் எப்படி கொறடாவை நியமிக்க முடியும்? கொறடா என்பவர் தேர்வு செய்யப்படுபவரே தவிர நியமிக்கப்படுபவரல்ல. எனவே நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. பதவிக்கு நாங்கள் ஆசைப்பட்டதால்தான் இப்போது இருக்கும் சூழல் நிலவுவதாக குற்றம்சாட்டியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை சொல்லிவிடுகிறேன்.

மே 4-ம் தேதி மாலை எனக்கு திமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் அழைத்து நல்ல அமைச்சர் பொறுப்பை கேட்டு வாங்குங்கள் எனப் பேசினார்கள். மறுநாள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடியைச் சந்தித்தபோது, 'திமுக வெளியிலிருந்து ஆதரவளிப்பதாக கூறுகிறார்கள். திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு மட்டும் அமைச்சரவையில் இடம் கொடுத்தால் போதுமாம். நான் டெல்லியில் பேசிவிட்டேன். அவர்களும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். நான் முதல்வர், நமக்கு 25 அமைச்சர்கள் கிடைப்பார்கள்' என்றார். நான் இதை தொண்டர்கள் எப்படி ஏற்பார்கள் என மறுத்தோம்.
இது விவாதக் களத்தில் இருந்தபோதே, விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர். அமைச்சரவையில் அதிமுக எனத் திமுக முன்மொழிந்தது. இந்த திட்டத்துக்கு சம்மதித்தோம். ஆனால், எடப்பாடி, `இது வேண்டாம். முதல்வர் என்றால் நான்தான். இல்லையென்றால் விசிக ஆட்சி என்றுதான் பேசுவார்கள். எனவே, நாம் எதிர்க்கட்சியாகவே இருந்துவிடுவோம்.' என்றார். நான் என் பிள்ளைகளின் தலையில் சத்தியம் செய்கிறேன்... நீங்களும் செய்வீர்களா? யாருக்கு பதவி ஆசை. தவெக திமுக-வை தீய சக்தி எனக் கூறி, அதை அப்புறப்படுத்த முயற்சிக்கிறது.

இது அதிமுக-வின் கொள்கைகளில் ஒன்று. அதனால், நாம் தவெக-வை ஆதரிப்போம் எனக் கோரினோம். ஆனால், அவர் அதை மறுத்தார். இதில்தான் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுதான் இப்போதுவரை நடந்த உண்மை." என்றார்.
தொடர்ந்து பேசிய எஸ்.பி.வேலுமணி, ``தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறோம். இதை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்கிறோம். கட்சியை உடைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எடப்பாடிதான் இப்போது பொதுச் செயலாளார் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சின்னம்மாதான் இவரை முதல்வராக்கினார்.
ஆனால், சின்னம்மா, டிடிவி தினகரன், ஓ.பி.எஸ், ஜே.சி.டி பிரபாகரன், செங்கோட்டையன் என ஒவ்வொருவராக கட்சியிலிருந்து வெளியேற்றிக்கொண்டே இருந்தால் கட்சி எப்படி இருக்கும். எனவே, சின்னம்மா, டிடிவி தினகரன் என அனைவரையும் மீண்டும் கட்சிக்குள் இணைத்து ஒருங்கிணைக்க வேண்டும். இருப்பவர்கள் மீது குறைசொல்லி யாரையும் வெளியே அனுப்பாதீர்கள். இனியாவது எல்லோரையும் அரவணைத்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும்." என்றார்.


















