’சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேனா?’ - எஸ்.பி.வேலுமணி சொல்வது என்ன?
சிபிஎஸ்இ முறைகேடுகளை வெட்ட வெளிச்சமாக்கிய மாணவர் - 1.66 கோடி கொள்முதல் தரவுகளை வெளியிட்டு அதிரடி
சிபிஎஸ்இ வாரியத்தின் டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு டெண்டரில் உள்ள முரண்பாடுகளை ஆய்வு செய்து, தேசிய அளவில் கவனம் ஈர்த்த 12 ஆம் வகுப்பு மாணவர் சார்தக் சித்தாந்த், தற்போது மத்திய அரசின் கொள்முதல் தரவுகளைப் பொதுவெளியில் வெளியிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அன்று, மத்திய பொதுக் கொள்முதல் தளத்தில் (Central Public Procurement - CPP Portal) இருந்து சுமார் 1.66 கோடி பதிவுகளைச் சேகரித்து, அதனை அனைவரும் அணுகக்கூடிய ஒரு புதிய இணையதளத்தை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இது குறித்து தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சார்தக், "வெளிப்படைத்தன்மை என்பது எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். இன்று முதல் அது சாத்தியமாகியுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "கடந்த இரண்டு வாரங்களில் அரசின் CPP தளத்திலிருந்து சுமார் 1 கோடியே 66 லட்சம் பதிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் கொள்முதல் தரவுத்தளம் இப்போது அனைவருக்கும் பொதுவில் கிடைக்கிறது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தரவுத்தளத்தைப் பதிவிறக்கம் செய்து, பொதுமக்கள் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று சார்தக் சித்தாந்த் அழைப்பு விடுத்துள்ளார். "தரவுத்தளத்தைப் பதிவிறக்கம் செய்து ஆழமாக ஆராயுங்கள். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இன்னும் பல விஷயங்கள் வரவிருக்கின்றன," என்று அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை, அரசு ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
ராஞ்சியைச் சேர்ந்த மாணவரான சார்தக் சித்தாந்த், சிபிஎஸ்இ-யின் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) முறை மற்றும் 12 ஆம் வகுப்பு விடைத்தாள்களின் டிஜிட்டல் மதிப்பீடு தொடர்பான அதிகாரப்பூர்வ டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்து வெளியிட்ட ஒரு விரிவான வலைப்பதிவின் மூலம் தேசிய அளவில் பிரபலமானார். தனது சொந்த விடைத்தாளின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெற்றபோது, மதிப்பெண்களில் வேறுபாடுகள் இருப்பதைக் கண்டறிந்த அவர், இந்த விஷயத்தை விசாரிக்கத் தொடங்கினார். டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் வெளிப்படைத்தன்மை குறித்து மற்ற மாணவர்களும் கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து, பொதுத் தளங்களில் கிடைத்த சிபிஎஸ்இ-யின் கொள்முதல் மற்றும் டெண்டர் ஆவணங்களின் வெவ்வேறு பதிப்புகளை அவர் ஒப்பிட்டு ஆய்வு செய்தார்.

அவரது ஆய்வில், டெண்டரின் வெவ்வேறு சுற்றுகளில் தகுதி வரம்புகள், செயல்திறன் விதிகள் மற்றும் சான்றிதழ் தேவைகள் உள்ளிட்ட பல மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்ததாக சார்தக் குற்றம் சாட்டினார். இந்த மாற்றங்கள் டெண்டர் செயல்முறை குறித்து கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். தனது கண்டுபிடிப்புகளை நாடாளுமன்றக் கல்வி நிலைக்குழு முன் நேரில் ஆஜராகி சமர்ப்பித்த சார்தக், மதிப்பீட்டு முறை மற்றும் டெண்டர் செயல்முறைகள் குறித்த தனது கவலைகளை அங்கும் பதிவு செய்தார். இந்த மாணவரை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்து வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.















