தஞ்சை: குட்கா கடத்தியவர்களை தப்பிக்க வைத்த போலீஸ் - இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ...
சென்னை: பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் தூய்மைப் பணியாளர் சடலம்; பரிசோதனையில் அம்பலமான கொலை!
சென்னை திருவேற்காடு அன்னலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஹோமாவதி (55). இவர், வளசரவாக்கம் மண்டலத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் ஹோமாவதி வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக ஹோமாவதி வேலைக்குச் செல்லவில்லை. மேலும் அவரின் வீடும் பூட்டியே இருந்தது. இந்த நிலையில் வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசியது. அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், திருவேற்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ஹேமாவதியின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். உடனே, சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வீடு முழுவதும் போலீஸார் சோதனை செய்தனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனையில் தூய்மைப் பணியாளர் ஹேமாவதி, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதனால் அவரை யார் கொலை செய்தது என்று போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அதில் ஓர் இளைஞரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது நகைக்காக ஹோமாவதியைக் கொலைசெய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. நகைகளோடு தன்னுடைய நண்பன் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீஸிடம் சிக்கிய இளைஞர் தகவல் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து நகைகளோடு தப்பிய இளைஞரை போலீஸார் தேடிவருகிறார்கள்.


















