ஓபிஎஸ் மீது விமர்சனம்; தவெக முகாமில் ஐக்கியம்? - அதிமுக அதிருப்தியாளர்களை ஒருங்க...
"ஜெயலலிதாவின் படத்தை அகற்றுவாயானு கேட்டார்; அதனால்" - அரசியலிலிருந்து விலகும் குன்னம் ராமச்சந்திரன்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதி முன்னாள்உறுப்பினரும், ஓ.பி.எஸ்ஸின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் அம்மா பேரவை மாநிலச் செயலாளர் செயலாளருமாகச் செயல்பட்டு வந்தார் ஆர்.டி.ராமச்சந்திரன்.
இந்நிலையில், நேற்று மாலை, தனது அரசியல் ஆசான் வைத்திலிங்கம் தி.மு.க-வில் இணைந்ததைத் தொடர்ந்து வருகின்ற 26-ம் தேதி தானும் திமுகவில் இணையப் போவதாக, செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், குடும்ப உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகவும், எனது உடல்நிலை குறித்த மருத்துவரின் ஆலோசனையின் காரணமாகவும் நான் இன்று மாற்று முடிவை எடுத்திருக்கிறேன். பொது வாழ்க்கையில் இருந்து நான் விலகிக் கொள்ளப் போவதாக முடிவெடுத்திருக்கிறேன்.

நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்பது தவறான விஷயம் என்றபோதிலும், என் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு குடும்பச் சூழ்நிலை, குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தலின் பேரில் என் நிம்மதிக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.
நான் இனி எந்த அரசியல் கட்சியிலும் பயணிக்கப் போவதில்லை. தயவுகூர்ந்து அண்ணன் வைத்திலிங்கம் அவர்களும், என்னோடு இதுவரை பயணித்த தொண்டர்களும் என்னை மன்னித்து, என்னோடு இதுவரை உறுதுணையாக இருந்த கழகத் தொண்டர்கள் அவரவர் விரும்பும் கழகத்தில் இணைந்து பணியாற்றும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இரண்டு விஷயங்கள் என் மனதை மாற்றியன. என்னைப் பெற்றெடுத்த தாய், 'உன் வளர்ப்புத் தாயான ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றுவாயா?' என்று கேட்டார். 'எனக்கு அசிங்கமாக இருக்கு. இதெல்லாம் வேலையா?' என்று என் பெண் கேட்டதும், வேதனை அடைந்தேன். இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. காலையில் வீட்டாரிடம் சொல்லிவிட்டு, இந்த முடிவை அறிவிக்கிறேன்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.













