`மேகதாது அணை, தமிழ்நாடு கடன், சாதிவாரி கணக்கெடுப்பு, கனிமவளம்.!' - அர்லேகர் உரை...
தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடர்!
தவெக ஆட்சியின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இது என்பதைத் தாண்டி, இன்றைய சட்டமன்றம் மிகவும் கவனமாகக் கவனிக்கப்படக் காரணம் — தமிழ்த்தாய் வாழ்த்து.
தமிழ்நாட்டின் வழக்கப்படி, தமிழ்நாடு அரசு நிகழ்வுகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்... இறுதியில் தேசிய கீதம் பாடப்படும்.
ஆனால், 2025-ம் ஆண்டு தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150 ஆண்டு நிறைவையொட்டி, அனைத்து அரசு விழாக்களிலும் தேசிய பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்பு விழா, அமைச்சர்கள் பொறுப்பேற்பு விழாவில் 'வந்தே மாதரம்' பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இது தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த இரு நிகழ்வுகளும் ஆளுநர் மாளிகையால் நடத்தப்பட்ட நிகழ்வு என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டது.
இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடர் தமிழ்நாடு அரசினுடையது ஆகும். அதனால்தான், தமிழ்த்தாய் வாழ்த்து மிகவும் கவனமாகக் கவனிக்கப்படுகிறது.
திமுக ஆட்சியில் கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அடுத்து தேசிய கீதம் ஒலிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டத்தொடரைப் புறக்கணித்து வெளியே சென்ற நிகழ்வுகள் நாம் அடிக்கடி பார்த்த ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றிருந்தபோதும், தேசிய பாடல் குறித்து இந்தியப் பிரதமர் மோடியிடம் கேட்டிருந்தார்.
தேசிய பாடலை முதலில் பாடுவது 'நெறிமுறைதானே தவிர, சட்டமில்லை' என்று கேரள முதலமைச்சர் சதீஷன் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இப்படி வெளிப்படையாக எதுவும் பேசவில்லை.

இந்த நேரத்தில்தான், இன்று சட்டமன்றக் கூட்டத்தொடர்.
ஆளுநர் அர்லேகர் சட்டமன்றத்திற்குள் வந்ததும், தமிழ்த்தாய் வாழ்த்து உடனேயே இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியது. தொடர்ந்து அடுத்ததாக, தேசிய கீதம் பாடப்பட்டது.















