கொல்கத்தா: பாஜக தலைவர் சுவந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை; வங்கத்தை உலுக...
தருமபுரி: விஜய் அலை, ராமதாஸின் எதிர்ப்பு; ஆனாலும் சாதித்த சௌமியா அன்புமணி; உற்சாகத்தில் பாமக!
அனைவராலும் எதிர்பரப்புடன் பார்க்கப்பட்ட தருமபுரி தொகுதியில் விஜய் அலையையும், மாமனார் ராமதாஸ் எதிர்ப்பு நிலையையும் கடந்து 20,896 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் பாமக-வின் சௌமியா அன்புமணி.

பா.ம.க-வின் சிட்டிங் தொகுதியான தருமபுரி தங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையைக் கைவிடாமல் போட்டியிட்டார் சௌமியா. அதனாலேயே தருமபுரியைக் குறிவைத்து கடந்த சில மாதங்களாக சௌமியா தீவிரமாக வேலை செய்து வந்தார்.
அ.தி.மு.க கூட்டணியில் இல்லாமலேயே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்தார். இந்நிலையில்தான் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தருமபுரியில் போட்டியிடுவது என முடிவு செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்.
அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பின்பு பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன் பின்பு தருமபுரி தொகுதியின் ஒரு கிராமம் விடாமல், ஒரு தெரு விடாமல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அவருடைய மகள்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தொகுதியிலுள்ள விவசாயப் பிரச்னை, பெண்கள் பிரச்னைகள் பற்றி பேசியவர், திமுக அரசு மீது மக்கள் அதிருப்தி கொண்ட தருமபுரி புது பேருந்து நிலைய பிரச்னையையும் கையிலெடுத்து தொடர்ந்து பேசினார்.

அதேநேரம் அவரை எதிர்க்கும் தேமுதிக டாக்டர் இளங்கோவனோ மக்களவைத் தேர்தலில் இருமுறை தோல்வியடைந்தவர். தன்னை உள்ளூர்வாசி என்று பரப்புரை செய்தாலும், நீண்டகாலமாக மக்களிடம் தொடர்பிமில்லாமல் இருந்ததும், தருமபுரி தி.மு.க நிர்வாகிகளின் கோஷ்டி வேலைகளும் தே.மு.தி.க-வுடன் வி.சி.க-வினர் முரண்பட்டு நின்றதும் அவருக்கு எதிராக நின்றது. அதனால்தான் அவர் மூன்றாமிடம் தள்ளப்பட்டு தவெக சிவன் 72817 வாக்குகல் பெற்று இரண்டாமிடம் பெற்றார்.
பெரிய அளவில் வாக்குகளைப் பிரித்து சௌமியாவின் வெற்றியைத் தடுப்பார் என்று சொல்லப்பட்ட டாக்டர் ராமதாஸின் வேட்பாளர் சரவணன் 1031 வாக்குகள் மட்டுமே பெற்று அதிர்ச்சி தந்தார்.
தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் அலை அடித்து மு.க ஸ்டாலின் முதல் திமுக, அதிமுக, முன்னாள் அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் உள்ளிட்டவர்களைத் தோல்வி அடையச் செய்துள்ள நிலையில் தருமபுரியின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக 20,896 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்று சாதித்துள்ளார் சௌமியா அன்புமணி.














